இந்தியாவில் இரண்டு புதிய கார்களை வெளியிடும் ஹோண்டா.. இரண்டுமே தரமான கார்களா இருக்கு!
ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தற்போது அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் ஆகிய மூன்று கார் மாடல்களை மட்டும் விற்பனை செய்து வருகிறது. இவை மூன்றுமே சிறப்பான கார்கள் தான் என்றாலும், வாடிக்கையாளர்கள் தற்போது அதிகளவில் இந்தக் கார்களை வாங்குவதில்லை. எனவே புதிய திட்டங்களுடன் புதிய கார் மாடல்களை இந்திய சந்தையில் களமிறக்க கடந்த சில ஆண்டுகளாகவே ஹோண்டா திட்டமிட்டு வந்தது.
இந்நிலையில் அந்நிறுவனம் புதிய கார் மாடல்களை இந்தியாவில் எப்போது வெளியிடலாம் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. அதன் அடிப்படையில் மே 22ம் தேதியன்று இந்தியாவில் புதிய ZR-V ப்ரீமியம் எஸ்யூவி மற்றும் மேம்படுத்தப்பட்ட சிட்டி ஃபேஸ்லிப்ட் ஆகிய மாடல்களை ஹோண்டா வெளியிடவிருக்கிறதாம். ZR-V எஸ்யூவியானது இந்தியாவில் நான்கு ஹோண்டா காராக வெளியாகவிருக்கிறது. இந்த இரண்டு கார் மாடல்கள் குறித்த தகவல்களை இங்கே நாம் பார்க்கலாம்.

ஹோண்டா ZR-V:
இதனை அதிகளவு விற்பனை செய்வதற்காக ஹோண்டா இந்தியாவிற்கு கொண்டு வரவில்லை. மாறாக தங்களது பிராண்டின் வேல்யூவை அதிகரிப்பதற்காகவே இந்த ZR-V எஸ்யூவியை அந்நிறுவனம் இந்தியாவிற்குக் கொண்டு வருகிறது. ப்ரீமியமான எஸ்யூவியான இதனை CBU முறையில் முழுவதுமாக இறக்குமதி செய்தே இந்தியாவில் ஹோண்டா விற்பனை செய்யவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. ரூ.40 லட்சம் முதல் 50 லட்சத்திற்குள்ளான விலையில் இந்தக் காரை ஹோண்டா வெளியிடலாம்.
4,568 மிமீ நீளம், 1,840 மிமீ அகலம் மற்றும் 1,620 மிமீ உயரத்தில் நல்ல இடவசதி கொண்ட எஸ்யூவியாக புதிய ஹோண்டா ZR-V இருக்கும். ஃப்ரீஸ்டாண்டிங் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பவர்டு டிரைவர் சீட், டூயல் ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், பவர்டு டெயில்கேட், ADAS பாதுகாப்பு அம்சங்கள் ஆகிய மேம்பட்ட வசதிகளை இந்த ப்ரீமியமான எஸ்யூவி கொண்டிருக்கும் எனத் தெரிகிறது.

இதனை ஹைபிரிட் வடிவிலேயே இந்தியாவிற்கு ஹோண்டா கொண்டு வரவிருப்பதாகவும் முன்பிருந்தே தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தக் காரில் 180 hp பவரை உற்பத்தி செய்யும் திறனுடன் கூடிய 2.0 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன், எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட ஹைபிரிட் பவர்ட்ரெயின் செட்டப் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பவர்ட்ரெயின் e-CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை உள்ளடக்கி இருக்கிறது. இதனை தங்களுடைய ஃப்ளாக்ஷிப் தயாரிப்பாக இந்திய சந்தையில் நிலைநிறுத்தவிருக்கிறது ஹோண்டா.
ஹோண்டா சிட்டி ஃபேஸ்லிப்ட்:
தற்போது விற்பனையில் இருக்கும் ஐந்தாம் தலைமுறை சிட்டி செடானுக்கு இது இரண்டாவது அப்கிரேடாக இருக்கும். முதல் ஃபேஸ்லிப்ட் மாடலை 2023ல் வெளியிட்டது ஹோண்டா. புதிய சிட்டி ஃபேஸ்லிப்ட் மாடலில் டிசைன் வகையில் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. குறிப்பாக முகப்பு விளக்குகள், கிரில், முன்பக்க மற்றும் பின்பக்க பம்பர்கள், பின்பக்க விளக்குகள் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவை புதிய வடிவில் கொடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
இதனைத் தவிர்த்து காரின் உட்புறம் வசதிகளிலேயே ஹோண்டா இந்த முறை அதிக கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் வெர்னா, ஃபோக்ஸ்வாகன் வெர்ட்டஸ், ஸ்கோடா ஸ்லாவியா என போட்டியாளர்களிடம் ஹோண்டா சிட்டி தோற்பது வசதிகளில் தான். எனவே புதிய சிட்டி ஃபேஸ்லிப்ட் மாடலை மேம்பட்ட வசதிகளைக் கொண்ட ஒன்றாக ஹோண்டா வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பவர்டு டிரைவர் சீட், வென்டிலேட் செய்யப்பட்ட முன்பக்க சீட்கள், பெரிய இன்ஃபோடெயின்மென்ட் திரை, 360 டிகிரி கேமரா, புதிய டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்பிளே, ஆகிய வசதிகள் புதிய சிட்டி செடானில் எதிர்பார்க்கப்படுகின்றன. மெக்கானிக்கலாக சிட்டி ஃபேஸ்லிப்ட் மாடலில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தகவல்கள் கூறுகின்றன.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் அதே 1.5 லிட்டர் i-VTEC பெட்ரோல் இன்ஜின் மற்றும் ஹைபிரிட் பவர்ட்ரெயின் தேர்வுகளே புதிய சிட்டி ஃபேஸ்லிப்ட் மாடலிலும் கொடுக்கப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் அதே மேனுவல் மற்றும் CVT ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளே புதிய காரிலும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: முன்னர் ஹோண்டா சிட்டி என்றாலே வாடிக்கையாளர்களின் கண்களில் பல்பு எரியும். அந்த அளவிற்கு வாடிக்கையாளர்கள் விரும்பும் ஒரு காராக இருந்தது. ஆனால் தற்போது அந்த அந்தஸ்தை சிட்டியும், ஹோண்டாவும் இழந்துவிட்டன. அதனை மீண்டும் மீட்டிடெடுக்கும் முயற்சியிலேயே தற்போது ஹோண்டா ஈடுபட்டிருக்கிறது. புதிய சிட்டி ஃபேஸ்லிப்ட் மற்றும் ZR-V எஸ்யூவி மாடல்கள் வாடிக்கையாளர்களின் விருப்பத்தையும், தேவையையும் பூர்த்தி செய்யும் கார் மாடல்களாக இருக்கும் என நம்புவோம்.


Click it and Unblock the Notifications