அதிக மைலேஜுடன் இந்தியாவில் ஹோண்டா வெளியிடும் புதிய கார்.. வசதிகளும் மிகச்சிறப்பு
இந்தியாவில் தற்சமயம் ஹோண்டா தடுமாறி வந்தாலும், மீள்வதற்கான அனைத்து வேலைகளையும் திரைமறைவில் செய்து வருகிறது. அந்த வகையில் பல்வேறு புதிய கார் மாடல்களை இந்திய சந்தையில் ஒவ்வொன்றாகக் களமிறக்க ஹோண்டா திட்டமிட்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒரு கார் மாடலாத ZR-V ஹைபிரிட் கார் இருக்கும். இந்த ப்ரீமியமான ஹைபிரிட் கார் குறித்த முழுமையான விவரங்களை இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
ஜப்பானிய சந்தையில் ZR-V என்ற பெயரிலும், வட அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட சந்தைகளில் HR-V என்ற பெயரிலும் இந்தக் காம்பேக்ட் கிராஸ்ஓவர் எஸ்யூவியை ஹோண்டா விற்பனை செய்து வருகிறது. CBU முறையில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தே இந்தியாவில் இந்தக் காரை விற்பனை செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதனால ரூ.50 லட்சம் முதல் ரூ.60 லட்சம் என்ற அளவில் ப்ரீமியமான விலையிலேயே வெளியாகும் எனத் தெரிகிறது.

ஹைபிரிட் கார் என்பதால் பெட்ரோல் இன்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் ஆகிய இரண்டையும் ஒருசேரப் பெற்றிருக்கிறது. இந்தக் காரில் 2.0 லிட்டர், இன்லைன் ஃபோர் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினைப் பயன்படுத்தியிருக்கிறது ஹோண்டா. இத்துடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் மற்றும் ஒரு பேட்டரி பேக் அடங்கிய எலெக்ட்ரிக் ஹைபிரிட் செட்டப்பும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த பவர்ட்ரெயினானது 184 hp பவர் மற்றும் 315 Nm டார்க்கை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
எலெக்ட்ரிக் மோட்டார் மற்றும் பெட்ரோல் இன்ஜின் ஆகிய இரண்டுமே நேரடியாக இந்தக் காரை இயக்கும் திறனைப் பெற்றிருக்கின்றன. பிரதானமாக எலெக்ட்ரிக் மோட்டாரிலும், தேவைப்படும் போது பெட்ரோல் இன்ஜினிலும் இயங்கும் வகையிலான செட்டப்பை இந்த ZR-V ஹைபிரிட் கார் பெற்றிருக்கிறது. தொடர்ந்து எலெக்ட்ரிக் மோட்டாருக்கான ஆற்றலை, பெட்ரோல் இன்ஜினே ஜெனரேட்டர் போல செயல்பட்டு வழங்குவதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஹைபிரிட் செட்டப்பின் காரணமாக, சுமார் 4.5 மீட்டர் என்ற அளவில் பெரிய காராக இருந்தாலும், லிட்டருக்கு 22.2 கிமீ வரையிலான மைலேஜ் கொடுக்கும் காராகவும் இந்த ஹோண்டா ZR-V இருக்கிறது. ஒரு பெட்ரோல் இன்ஜின் ஜெனரேட்டர் போல செயல்படும் போது ஒரே சீரான வேகத்தில் இயங்கினால் போதும், அது குறைவான வேகமாக இருந்தாலும் சரி. காரின் வேகம் மற்றும் பெர்ஃபாமன்ஸை எலெக்ட்ரிக் மோட்டாரே வழங்கும். இதனால், அதிக மைலேஜை இந்தக் காரால் கொடுக்க முடிகிறது.
ஒரே நேரத்தில் எலெக்ட்ரிக் காரின் பயன்பாடு எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டது போலவும் இருக்கும், அதே நேரம் சார்ஜ் தீரந்து விடுமோ என்ற ரேஞ்சு பயம் இல்லாமலும் இருக்கும். பல்வேறு நிறுவனங்களும் ஹைபிரிட் கார்களை வெளியிடத் திட்டமிட்டு வரும் அதே நேரத்தில் ஹோண்டா இதனை தங்களுடைய ஹைபிரிட் தயாரிப்பாகக் களமிறக்கவிருக்கிறது.
இந்த ZR-V காரை அதிகம் விற்பனை செய்ய வேண்டும் எனக் களமிறக்குவதைக் கடந்து, ஹோண்டாவின் பிராண்டை தூக்கிப் பிடிக்கும் ஒரு மாடலாகவே அந்நிறுவனம் பார்க்கிறது. சிறப்பான செயல்பாடுகளைக் கொண்ட ஒரு தயாரிப்பை ஒரு நிறுவனம் அதிக விலையில் வெளியிடும் போது, அதனை வாங்க முடியாதவர்கள் அந்நிறுவனம் குறைவான விலை கொண்ட தயாரிப்பை பெருமையுடன் வாங்குவார்கள்.
எனவே ஹோண்டாவும் அப்படியான ஒரு தயாரிப்பாகவே இந்த ZR-Vயைப் பார்க்கிறது. இதன் மூலம், அதன் குறைவான விலை கொண்ட பட்ஜெட் கார்களின் விற்பனையை உயர்த்த முடியும் என அந்நிறுவனம் நினைக்கிறது. வாடிக்கையாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது கார் வெளியான பின்பு தான் தெரியும். தற்போது சிட்டி மற்றும் அமேஸ் செடான்கள், எலிவேட் எஸ்யூவி ஆகிய மூன்று கார் மாடல்களை மட்டுமே இந்தியாவில் அந்நிறுவனம் விற்பனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ப்ரீமியம் கார்களுக்கு உண்டான அனைத்து தகுதிகளையும் கொண்ட ஒரு காராகவே ZR-V இருக்கிறது. இந்தக் கார் வெளியாவது ப்ரீமியம் கார்கள் பிரிவில் வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கு கூடுதல் தேர்வுகளைக் கொடுக்கும். இதனை ஒரு ஹைபிரிட் மாடலாக ஹோண்டா வெளியிடுவது கூடுதல் பிளஸ் பாயிண்ட். இந்த 2026ம் ஆண்டு இறுதியில் இந்தக் காரின் வெளியீட்டை நாம் எதிர்பார்க்கலாம். ஃபோக்ஸ்வாகன் டிகுவான் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய ப்ரீமியம் எஸ்யூவிக்களுக்குப் போட்டியாக இந்த ஹோண்டா ZR-V விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications








