டாடா நானோ காரை ஞாபகப்படுத்துது... பெட்ரோல் நிரப்புற மாதிரி 3 நிமிடங்களில் ஃபுல்-சார்ஜ் பண்ணிடலாம்!
பிளிங்க் மொபிலிட்டி என்கிற ஹரியானாவை சேர்ந்த ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனம் இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் காரை உருவாக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறது. இந்த எலெக்ட்ரிக் காரின் முக்கிய சிறப்பம்சம், அதன் சார்ஜிங் நேரம் ஆகும். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை சமீப காலத்தில் வெகுவாக அதிகரித்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம், BaaS எனப்படும் பேட்டரியை தனி சேவையாக வழங்கும் முறையை கார் நிறுவனங்கள் பின்பற்ற ஆரம்பித்தது ஆகும். அதாவது, எலெக்ட்ரிக் காருக்கான விலை தனியாகவும், அதற்கான பேட்டரிக்கான கட்டணத்தை தனியாகவும் வசூலிக்க ஆரம்பித்தது ஆகும்.

எலெக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதில் பலர் கூறும் பிரச்சனைகளுள் ஒன்று, அவற்றை விரைவாக சார்ஜ் செய்ய முடியாதது ஆகும். வீட்டிலேயே சார்ஜ் செய்ய காருடன் வழங்கப்படும் சார்ஜர்கள் பல மணிநேரம் எடுத்துக்கொள்ளக் கூடியவைகளாக உள்ளன. விரைவாக சார்ஜ் செய்யக்கூடிய ஃபாஸ்ட் சார்ஜர்கள் இன்னும் நாடு முழுவதும் பரவலாக கொண்டுவரப்படவில்லை.
இதனால், அதற்கு எல்லாம் மாற்று வழியாக BaaS பார்க்கப்படுகிறது. இதனை பேட்டரி மாற்று முறை என்றும் அழைக்கின்றனர். இதன் மூலமாக, சார்ஜ் காலியான பேட்டரியை கொடுத்து குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்தி சார்ஜ் நிரம்பிய பேட்டரியை பெற்றுக் கொள்ளலாம். இத்தகைய BaaS முறையை இந்தியாவில் கார் நிறுவனங்கள் கடந்த சில வருடங்களாக தான் பின்பற்ற ஆரம்பித்துள்ளன.

அந்த வகையில், இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமாக களமிறங்கும் பிளிங்க் மொபிலிட்டியும் தனது எலெக்ட்ரிக் காரை பேட்டரி மாற்று முறையில் மக்களுக்கு வழங்க தயாராகி வருகிறது. தங்களது எலெக்ட்ரிக் காரில் மொத்தமாகவே வெறும் 2 நிமிடங்கள் 48 வினாடிகளில் சார்ஜ் காலியான பேட்டரியை வெளியே எடுத்து, சார்ஜ் நிரம்பிய பேட்டரியை பொருத்திவிடலாம் என்கிறது பிளிங்க் மொபிலிட்டி நிறுவனம்.
மேலும், இது எவ்வாறு நடக்கிறது என்பதை விவரிக்கும் வீடியோ ஒன்றையும் பிளிங்க் மொபிலிட்டி தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவின்படி பார்க்கும்போது, காரில் இருந்து பேட்டரியை கழற்றி பொருத்துவதற்காக என்றே பிரத்யேகமான வழிமுறைகளை பிளிங்க் மொபிலிட்டி பின்பற்றுகிறது. பேட்டரியை வெளியே எடுக்கும்முன், காரினுள் டாஷ்போர்டில் வழங்கப்பட்டிருக்கும் 'S' என்கிற மோடுக்கு காரை கொண்டுவர வேண்டும்.
இதன் மூலமாக, காரின் சக்கரங்கள் நகராமல் ஒரே இடத்தில் பிடித்துக் கொள்ளப்படும். இதை எல்லாம், பிளிங்க் மொபிலிட்டியின் பேட்டரி மாற்று நிலையத்தில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு இருக்கும் ஏறுமேடையில் காரை நிறுத்திய பிறகு செய்ய முடியும். எஸ் மோடுக்கு காரை கொண்டு வந்த பின், ரோபோட்டிக் கருவி மூலமாக பேட்டரி பாதுகாப்பாக வெளியே எடுக்கப்பட்டு, சார்ஜ் நிரம்பிய பேட்டரி பொருத்தப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பிளிங்க் மொபிலிட்டியின் எலெக்ட்ரிக் கார் ஆனது, அளவில் சிறியதான, எடை குறைவான மற்றும் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த காருக்கு இன்னும் எந்த பெயரும் வைக்கப்படாத நிலையில், தற்போதைக்கு 'கார் 001' என பிளிங்க் மொபிலிட்டி நிறுவனத்தால் அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த காரில் வழங்கப்படும் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 250கிமீ தொலைவிற்கு காரை ஓட்டலாம். பிளிங்க் மொபிலிட்டி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காரை வருடக்கணக்கில் உருவாக்கி வருகிறது. இதனால், ஹரியானாவின் குருகிராம் சாலைகளில் இந்த எலெக்ட்ரிக் காரை அவ்வப்போது சோதனை ஓட்டங்களின் போது பார்க்க முடிகிறது. இருப்பினும், இந்த எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு கொண்டுவரப்படும் என்பது உறுதியாக தெரியவில்லை.


Click it and Unblock the Notifications