இந்தியாவில் ஹூண்டாய்க்கு வயது 30... கலைஞர் அன்று அமைத்த தொழில் பூங்காவால் இன்றும் நிக்காம ஓடும் பிஸ்னஸ்!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் இந்திய சந்தையில் இப்போதுதான் நுழைந்தது போன்று இருந்தது, ஆனால் அதற்குள் 30 வருடங்கள் உருண்டோடி விட்டன. இந்த 30 வருடங்களில் இந்தியாவில் ஹூண்டாய் செய்த சாதனைகள் என்ன என்பதையும், கடந்துவந்த மைல்கல்கள் என்னென்ன என்பதையும் பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் கடந்த காலங்களில் இருந்து பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளன. அவற்றுள் முக்கியமானது, ஹூண்டாய் ஆகும். கடந்த ஏப்ரல் மாத கார்கள் விற்பனையில் 4வது இடத்திற்கு ஹூண்டாய் சரிந்து இருந்தாலும், கடந்த 10- 15 வருட கார்கள் விற்பனையை எடுத்துப் பார்த்தால் மாருதி சுஸுகி (Maruti Suzuki)-க்கு அடுத்து 2வது இடத்தில் ஹூண்டாய் இருக்கும்.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம், இந்திய சந்தையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL) என்கிற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவில் 1996ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி கால்பதித்த ஹூண்டாய் நிறுவனம் இதுவரையில் சுமார் 96 இலட்சத்திற்கும் அதிகமான கார்களை விற்பனை செய்துள்ளது. இது இல்லாமல், 39 இலட்சம் கார்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மேட்-இன்-இந்தியா ஹூண்டாய் கார்கள் 150க்கும் அதிகமான நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் கார்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுள் ஹூண்டாயும் ஒன்றாகும். உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி இரண்டையும் சேர்த்து 30 ஆண்டுகளில் சுமார் 1.35 கோடிக்கும் அதிகமான கார்களை ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இந்தியாவில் நுழைந்த உடனே 1996ஆம் ஆண்டிலேயே சென்னையில் தொழிற்சாலையை அமைக்க ஹூண்டாய் துவங்கியது. சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலையை கட்டியெழுப்பும் பணிகள் இரண்டு வருடங்களாக நடைபெற்ற நிலையில் 1998ஆம் ஆண்டில் தொழிற்சாலை திறக்கப்பட்டது. தென்கொரியாவுக்கு வெளியே ஹூண்டாய் நிறுவிய முதல் உற்பத்தி தொழிற்சாலை இதுவாகும்.
கிட்டத்தட்ட 29 வருடங்களாக சென்னை தொழிற்சாலை மூலம் செயல்பட்டுவந்த ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், கடந்த 2025ஆம் ஆண்டில் புனேவில் தலேகான் என்கிற பகுதியில் 2வது தொழிற்சாலையை திறந்தது. இந்தியாவில் ஹூண்டாயின் இரு தொழிற்சாலைகளையும் சேர்த்து வருடத்திற்கு அதிகப்பட்ச 9.94 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடிகிறது. இது தற்போதைய சூழ்நிலைதான்... வரும் ஆண்டுகளில் இதை 10.74 லட்சமாக அதிகரிக்கும் முனைப்பில் ஹூண்டாய் உள்ளது.
சேல்ஸ் & சர்வீஸ் நெட்வொர்க்கை பொறுத்தவரையில், இந்தியாவில் சுமார் 78% மாவட்டங்களில் ஹூண்டாயின் நெட்வொர்க் உள்ளது. 1,100க்கும் அதிகமான நகரங்களில் 1,500க்கும் அதிகமான ஹூண்டாய் கார் டீலர்ஷிப் ஷோரூம்கள் தற்சமயம் செயல்படுகின்றன. 1,675 சர்வீஸ் செண்டர்களில், நன்கு பயிற்சி பெற்ற சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
இந்தியாவில் அடுத்த 4 வருடங்களில் சுமார் ரூ.45 ஆயிரம் கோடியை முதலீடு செய்ய ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. இந்த பெரும் முதலீடு ஆனது இதுவரையில் கடந்த 30 ஆண்டுகளில் ஹூண்டாய் முதலீடு செய்துள்ள ரூ.40 ஆயிரத்து 700 கோடியை காட்டிலும் அதிகமாகும். புதிய முதலீடுகள் மூலமாக அடுத்த 4 வருடங்களில் 26 புதிய ஹூண்டாய் கார்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 30 வருடங்களில் ஹூண்டாய் கடந்தவந்த பாதை மிக பெரியது. அந்த அளவிற்கு உலகளவில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு முக்கியமான சந்தையாக இந்தியா விளங்குகிறது. குறிப்பாக, இந்திய நாட்டில் உற்பத்தி செலவுகளும், போக்குவரத்து செலவுகளும் மற்ற பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடுகையில் குறைவாக உள்ளதால், வெளிநாடுகளுக்கான கார்களை உற்பத்தி செய்வதில் இந்தியாவை ஹூண்டாய் பெரிதும் நம்பியுள்ளது.


Click it and Unblock the Notifications