சூடுபிடிக்கும் சிறிய கார் சந்தை... கோட்டைவிடுகிறதா ஹூண்டாய்? விற்பனை சரிவின் பின்னணி!
ஒரு காலத்தில் இந்தியாவின் சிறிய கார் சந்தையில் மாருதி நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஹூண்டாய் நிறுவனம் கொடுத்து வந்தது. ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ, i10, கிராண்ட் i10 போன்ற சிறிய கார்கள் மாருதி கார்களுக்கு மாருதிக்கு கடும் போட்டியை தந்ததுடன் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த மாற்றுத் தேர்வாக இருந்து வந்தன.மேலும், மாருதி கார்களைவிட கூடுதல் பிரிமீயம் அம்சங்கள், வசதிகளுடன் சிறிய கார் வைத்திருப்போரையும் 'கெத்து' காட்ட வைத்தது. மாருதிக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாகவும் கோலோய்ச்சி வந்தது.
இந்த சூழலில், அண்மை காலமாக மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் ஆதிக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல், இந்திய சந்தையில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ். கடந்த சில மாதங்களில் ஹூண்டாய் நிறுவனத்தின் விற்பனை சரிவு முகத்தில் உள்ளது.

கடந்த மே மாதத்தில் உள்நாட்டு சந்தையில் 47,837 கார்களை விற்ற நிறுவனம், ஜூன் மாதத்தில் 39,635 கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. அண்மையில் சப்ளையர் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தால் உற்பத்தி பாதிக்கப்பட்டதாக அந்நிறுவனம் விளக்கம் அளித்தது. தீவிபத்து காரணமாக 13,900 கார்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டதாகவும் பின்னர் உற்பத்தி இயல்பு நிலைக்கு திரும்ப வருவதாகவும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது.
ஆனால் இந்த உற்பத்தி பாதிப்பு மட்டுமே முழு காரணமா? என்ற கேள்வியும் எழுகிறது. காரணம், கடந்த சில ஆண்டுகளில் இந்திய சந்தையின் போக்கு வெகுவாக மாறி வருகிறது. எஸ்யூவி ரக கார் மாடல்களுக்கு வரவேற்பு அதிகரித்தாலும், ரூ.6 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான சிறிய கார்கள் மற்றும் காம்பாக்ட் கார் மாடல்களுக்கான தேவை மீண்டும் சூடுபிடித்துள்ளது. சிறிய ரக கார் விற்பனையில் மாருதி சுஸுகி நிறுவனம் தொடர்ந்து மிக வலுவான நிலையில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. அடுத்ததாக, இந்தப் பிரிவில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் பன்ச் மற்றும் டியாகோ கார்களுடன் மல்லுக்கட்டி வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்தியாவில் கிராண்ட் ஐ10 நியோஸ் மற்றும் ஐ20 ஆகிய இரண்டு ஹேட்ச்பேக் கார் மாடல்கள்தான் உள்ளன. ஒரு காலத்தில் நிறுவனத்தின் அடையாளமாக இருந்த சான்ட்ரோ மற்றும் இயான் போன்ற குறைவான பட்ஜெட் விலை மாடல்கள் தற்போது இல்லை.
இதனால் முதல் முறையாக கார் வாங்குபவர்களை கவரும் வாய்ப்பை ஹூண்டாய் ஓரளவு இழந்திருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் கியா மோட்டார்ஸ் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தாலும், அதன் வர்த்தகம் உதவி புரிந்தாலும், சிறிய கார் மார்க்கெட்டின் வர்த்தக வாய்ப்பை ஹூண்டாய் இழந்துள்ளதா? என்ற கேள்வி எழுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் தற்போது எஸ்யூவி ரக கார் மார்க்கெட்டில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறது. எக்ஸ்டர், வெனியூ, கிரெட்டா போன்ற மாடல்கள் தொடர்ந்து விற்பனையில் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. இந்தநிலையில், வரும் பண்டிகை காலத்தில் புதிய மாடல்கள் மற்றும் ஏற்றுமதி மூலமாக மீண்டும் விற்பனையை உயர்த்துவோம் என்று ஹூண்டாய் நிறுவனம் நம்பிக்கை தெரிவிக்கிறது. வெனியூ எஸ்யூவின் எலெக்ட்ரிக் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் வகை மாடல்களை களமிறக்கவும் திட்டமிடடுள்ளது.
கடந்த காலத்தில் இந்தியாவின் சிறிய கார் மார்க்கெட்டில் சிறந்த தேர்வாக இருந்த ஐ10, சான்ட்ரோ மற்றும் இயான் போன்ற மாடல்கள் இருந்திருந்தால், ஹூண்டாய் நிச்சயம் கூடுதல் விற்பனையை பதிவு செய்திருக்கும். உற்பத்தி பாதிப்பு, அதிகரித்த சந்தைப் போட்டி, சிறிய கார் சந்தையில் புதிய தயாரிப்புகள் இல்லாதது, எஸ்யூவி ரக மார்க்கெட்டில் அதிக கவனம் செலுத்தியது ஆகிய அனைத்தும் சேர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. தற்போது சிறிய கார் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஹூண்டாய் இந்த மார்க்கெட்டிலும் தனது புதிய மாடல்களை களமிறக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications