இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தும் ஹூண்டாய்.. எவ்வளவு தெரியுமா?
டொயோட்டா, மஹிந்திரா ஆகிய மாஸ் மார்க்கெட் கார் தயாரிப்பு நிறுவனங்கள், பிஎம்டபிள்யூ மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் உள்ளிட்ட சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் எனப் பல்வேறு நிறுவனங்களும் ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்தன. அந்த வரிசையில் தற்போது ஹூண்டாய் நிறுவனமும் இணைந்திருக்கிறது.
மே 1ம் தேதி முதல் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளது அந்நிறுவனம். மூலப் பொருட்கள் விலை உயர்வு, போக்குவரத்துச் செலவு உயர்வு உள்ளிட்ட காரணங்களினால் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களின் விலைகளை உயர்த்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவில் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்ட அநேக நிறுவனங்களும் இதே காரணங்களையே தெரிவித்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி அல்லது ஏப்ரல் மாதங்களில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் விலை உயர்வு அறிவிப்பை வெளியிடுவது வழக்கம் தான். அந்த வகையில் ஹூண்டாய் நிறுவனம் கார்களின் விலையை மே மாதம் உயர்த்துகிறது.
இந்தியாவில் அதிக கார்களை விற்பனை செய்யும் டாப் 5 நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஹூண்டாய். முதலிடத்தில் மாருதி தொடர்ந்து நீடித்திருக்க, இரண்டாவது இடத்தில் இருந்து வந்தது ஹூண்டாய். தற்போது மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஹூண்டாயை புதிய தயாரிப்புகள் மூலம் பின்தள்ளியிருக்கின்றன.

இந்தியாவில் தற்போது கிராண்டு i10 நியாஸ், ஆரா, i20, எக்ஸ்டர், வென்யூ, கிரெட்டா, வெர்னா, அல்கஸார், கிரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் அயானிக் 5 ஆகிய எரிபொருள் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வருகிறது ஹூண்டாய். இந்த கார் மாடல்களின் விலைகளை 1% வரை உயர்த்தவிருப்பதாகத் தெரிவித்துள்ளது அந்நிறுவனம்.
அப்படியென்றால் ரூ.5,500 முதல் ரூ.46,300 வரை ஹூண்டாய் கார்களின் விலைகள் உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றில் வென்யூ மாடலின் விலையையும் ஹூண்டாய் உயர்த்துமா என்ற கேள்வி எழுகிறது. கடந்தாண்டு நவம்பர் மாதம் தான் மேம்படுத்தப்பட்ட வென்யூ எஸ்யூவி மாடலை இந்தியாவில் வெளியிட்டது அந்நிறுவனம். இந்த மாடலை கடந்த மார்ச் மாதம் வரை அறிமுக விலையில் விற்பனை செய்து வந்தது ஹூண்டாய்.
அறிமுக சலுகை முடிந்து மார்ச் மாதம் இந்த இந்த எஸ்யூவியின் விலையை ரூ.20,000 வரை உயர்த்தியது அந்நிறுவனம். இந்நிலையில் மே மாதம் மீண்டும் வென்யூவின் விலையை ஹூண்டாய் உயர்த்துமா என்ற கேள்வி வாடிக்கையாளர்கள் மத்தியில் இருக்கிறது. அதற்கு மே மாதம் ஹூண்டாயின் அறிவிப்புகள் தான் பதில் சொல்ல வேண்டும்.
கடந்த ஜனவரி மாதம் தான் இந்தியாவில் தாங்களுடைய கார் மாடல்களின் விலையை 0.6% வரை உயர்த்தியது ஹூண்டாய். மே மாதம் மேற்கொள்ளவிருப்பது இந்த 2026ம் ஆண்டில் ஹூண்டாயின் இரண்டாவது விலை உயர்வாகும். சில மாத இடைவெளியில் ஹூண்டாய் கார்களின் விலைகள் சுமார் 1.6% வரை உயரவிருக்கின்றன. சர்வதேச அளவிலான பிரச்சினைகளும் இந்த விலை உயர்விற்கான முக்கியக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மற்ற நிறுவனங்களைப் போலவே ஹூண்டாய் நிறுவனமும் இந்தியாவில் கார்களின் விலைகளை உயர்த்தவிருக்கிறது. 1% அளவில் என்னும் போது மிகவும் அதிக அளவில் இந்த விலை உயர்வு இருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வாடிக்கையாளர்களின் வாங்கும் முடிவை மாற்றும் அளவிற்கு ஹூண்டாயின் விலை உயர்வு இருக்காது என்றே தெரிகிறது.
அல்கஸார், கிரெட்டா எலெக்ட்ரிக் மற்றும் அயாவிக் 5 உள்ளிட்ட சற்று விலை அதிகமான கார்களின் விலைகள் கணிசமான அளவில் அதிகமாகவே இருக்கும். ஆனால், ஆரா, கிராண்டு i10 நியாஸ் உள்ளிட்ட தொடக்கநிலை மாடல்களின் விலைகளில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது, சில ஆயிரங்களே கூடுதலாக இருக்கும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








