இந்தியாவில் ஹூண்டாய் வெளியிடும் புதிய கார்கள் இவை தான்.. அடிமாட்டு விலையில் வெளியாகப் போகுது
இந்தியாவில் மாருதிக்கு அடுத்தபடியாக அதிக கார்களை விற்பனை செய்யும் இரண்டாவது நிறுவனமாக ஹூண்டாய் இருந்து வந்தது. ஆனால் சமீபமாக அதன் விற்பனை எதிர்பார்க்கும் அளவிற்கு இல்லை. குறிப்பாக இந்தியாவைச் சேர்ந்த மஹிந்திரா மற்றும் டாடா நிறுவனங்களிடம் விற்பனை அளவில் தோற்று வருகிறது ஹூண்டாய்.
இதனால் இந்தியாவில் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதில் இந்தியாவில் புதிய கார்களை வெளியிடுவதும் அடங்கும். அப்படி இந்த 2027ம் நிதியாண்டில் ஹூண்டாய் இந்தியாவில் வெளியிடவிருக்கும் கார்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 2027ம் நிதியாண்டி என்பது 2026 ஏப்ரல் முதல் 2027 மார்ச் வரையிலான காலகட்டம் ஆகும்.

நடப்பு நிதியாண்டில் ஹூண்டாய் இந்தியாவில் வெளியிடவிருக்கும் இரண்டுமே இதுவரை நாம் பார்த்திராத முற்றிலும் புதிய கார் மாடல்களே ஆகும். இவை என்ன வகையான கார் மாடல்கள், யாருக்கு பொருத்தமானதாக இருக்கும், என்ன பெயரில் வெளியாகலாம் போன்ற அனைத்துத் தகவல்களையும் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
மிட்-சைஸ் எஸ்யூவி:
ஹூண்டாய் இந்தாண்டு வெளியிடும் இரண்டு கார்களில் ஒன்று மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தைச் சேர்ந்ததாக இருக்கும். அதாவது ஹூண்டாய் கிரெட்டா, கியா செல்டோஸ், மாருதி கிராண்டு விட்டாரா உள்ளிட்ட கார்களுக்கு போட்டியளிக்கக்கூடியதாக இருக்கும். வெளிநாடுகளில் பேயான் என்ற கிராஸ்ஓவர் எஸ்யூவி கார் ஒன்றை ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. அதன் அடிப்படையிலேயே இந்தியாவிற்கான புதிய எஸ்யூவி தயாராகி வருகிறது.

இந்த பேயான் எஸ்யூவியானது 4.18 மீ நீளத்தைக் கொண்டதாக இருக்கிறது. எனவே இதன் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்து 4 மீ நீளத்திற்குள்ளான காராக ஹூண்டாய் வெளியிடலாம் என முன்னர் கூறப்பட்டது. 4 மீட்டர்களுக்கு உள்ளாக புதிய கார் இருக்கும் போது குறைவாகவே அரசுக்கு வரி செலுத்த வேண்டியிருக்கும். இதனால் குறைவான விலையிலேயே இந்தக் காரை ஹூண்டாயால் வெளியிட முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், 4.18 மீட்டர் நீளத்திலேயே மிட்-சைஸ் எஸ்யூவி கார்களுக்குப் போட்டியாக புதிய காரை ஹூண்டாய் வெளியிட முடிவு செய்திருக்கிறது. கிரெட்டா, செல்டோஸ் உள்ளிட்ட கார்கள் 4.3 மீ முதல் 4.5 மீ வரையிலான நீளத்தைக் கொண்டுள்ளது. புதிய ஹூண்டாய் காரானது அவற்றை விட குறைவான நீளத்தையே கொண்டிருக்கும். ஆனால், வென்யூ போன்ற சப்-காம்பேக்ட் எஸ்யூவிக்களை விட கூடுதல் இட வசதியைக் கொண்டிருக்கும்.
Bc4i என்ற குறியீட்டுப் பெயரால் புதிய கார் அழைக்கப்பட்டு வருகிறது. இதில் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் மற்றும் CNG பவர்ட்ரெயின்களைக் ஹூண்டாய் கொடுக்கவிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. டூயல் சிலிண்டர் தொழில்நுட்பத்தையும் இந்தக் காரில் ஹூண்டாய் கொடுக்கலாம். அப்படி CNG பவர்ட்ரெயின் கொடுக்கப்படும் பட்சத்தில், 4 மீட்டர்கள் நீளத்திற்கும் மேலாக CNG பவர்ட்ரெயினைக் கொண்டிருக்கும் முதல் ஹூண்டாய் காராக புதிய எஸ்யூவி இருக்கும்.
மாருதி நிறுவனம் மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் ப்ரீமியமான கிராண்டு விட்டாரா மற்றும் விலை குறைவான விக்டோரிஸ் என இரண்டு கார்களை விற்பனை செய்கிறது. அதே பாணியை ஹூண்டாய் நிறுவனமும் பின்பற்ற இருப்பதாகத் தெரிகிறது. தற்போது விற்பனையில் இருக்கும் கிரெட்டாவிற்கு கீழே புதிய எஸ்யூவியை ஹூண்டாய் பிளேஸ் செய்யலாம்.
கிரெட்டா எஸ்யூவி மாடலானது ரூ.10.79 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. புதிய கிராஸ்ஓவர் எஸ்யூவி மாடலை இதனை விட குறைவான தொடக்க விலையில் ஹூண்டாய் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட காராகவே இந்தப் புதிய ஹூண்டாய் கார் இருக்கும்.
எலெக்ட்ரிக் சப்-காம்பேக்ட் எஸ்யூவி:
இந்த நிதியாண்டு ஹூண்டாய் இந்தியாவில் வெளியிடவிருக்கும் மற்றொரு கார் எலெக்ட்ரிக் வகையைச் சேர்ந்தது ஆகும். இதனை குறைவான விலை கொண்ட காராகவே இந்தியாவில் வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. முன்னதாக டாடாவின் பன்ச் EV மாடலுக்குப் போட்டியாக இந்தப் புதிய எலெக்ட்ரிக் கார் வெளியிடப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால் தற்போது டாடாவின் நெக்ஸான் EV-க்குப் போட்டியாக வெளியிடப்படவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
சர்வதேச அளவில் இன்ஸ்டர் என்ற குட்டி எலெக்ட்ரிக் கார் ஒன்றை ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. அந்தக் காருக்குப் பயன்படுத்தப்பட்ட E-GMP(K) பிளாட்ஃபார்மையே புதிய எலெக்ட்ரிக் காருக்கும் ஹூண்டாய் பயன்படுத்தவிருக்கிறது. இந்திய வாடிக்கையாளர்களை மனதில் வைத்து, இந்தியாவிற்காகவே இந்தப் புதிய எலெக்ட்ரிக் சப்-காம்பேக்ட் எஸ்யூவியை ஹூண்டாய் உருவாக்கி வருகிறதாம்.
இந்தக் காரை இந்தியாவில் தயாரிப்பதோடு, காருக்கான பேட்டரியையும் இந்திய நிறுவனமான எக்ஸைடிடம் (Exide) இருந்தே வாங்கவுள்ளது ஹூண்டாய். ஸ்டாண்டக்டு ரேஞ்சு மற்றும் லாங் ரேஞ்சு என இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளை புதிய எலெக்ட்ரிக் காரில் அந்நிறுவனம் கொடுக்கவுள்ளது. சிங்கிள் சார்ஜில் 400 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுக்கக்கூடியதாக இந்த பேட்டரி இருக்கலாம் எனத் தெரிகிறது.
இந்த இரண்டு கார்களையும் அதிக விற்பனையை மையப்படுத்தியே ஹூண்டாய் உருவாக்கி வருகிறது. எனவே வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் வகையிலான அம்சங்களை இந்தக் கார்களில் நாம் கண்டிப்பாக எதிர்பார்க்கலாம். அடுத்த சில மாதங்களில் இந்த இரண்டில் ஒரு காரின் அறிமுகத்தை இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மிட்-சைஸ் எஸ்யூவி பிரிவில் தொடர்ந்து போட்டி அதிகரித்து வருகிறது. கிரெட்டா தற்போது வலுவான நிலையில் தான் இருக்கிறது. எனினும் தொடர்ந்து அதே இடத்தை தக்க வைக்க புதிய யுக்திகளை ஹூண்டாய் கையாள வேண்டியிருக்கிறது. அதனால் தான் புதிய காரை களமிறக்குகிறது. 4 மீட்டர்களுக்கு மேலான கார்கள் பிரிவில் விலை குறைவான காராக ஹூண்டாயின் புதிய எஸ்யூவி கார் இருக்கும்.
அயானிக் 5 மற்றும் கிரெட்டா எலெக்ட்ரிக் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் ஹூண்டாய் விற்பனை செய்து வருகிறது. ஆனால் இரண்டுமே வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை. அயானிக் 5 விலை கூடுதலான கார். ஆனால் கிரெட்டா எலெக்ட்ரிக் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தது ஹூண்டாய். தற்போது எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் ஹூண்டாய் இருந்தும் இல்லாதது போலத்தான்.
எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் தற்போது ஹூண்டாய் நிறுவனத்திற்கு ஒரு பெரிய வெற்றி தேவையாக இருக்கிறது. எனவே தான் சப்-காம்பேக்ட் ஆயுதத்தைக் கையில் எடுத்திருக்கிறது. எலெக்ட்ரிக் கார்களப் பொறுத்தவரை மிட்-சைஸ் வகை கார்களுக்கிடையில் தான் போட்டி அதிகமாக இருந்து வருகிறது. எனவே ஹூண்டாயின் புதிய சப்-காம்பேக்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு ஒரு சிறிய வாய்ப்பு இருக்கிறது.


Click it and Unblock the Notifications