4.39 லட்சம் கார்கள்... 20 லட்சம் டூ வீலர்கள்.. ஆகஸ்ட்டில் இந்திய வாகன சந்தை படைத்த 'மாஸ்' சாதனை
இந்திய ஆட்டோமொபைல் சந்தை தொடர்ந்து வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, கடந்த ஆகஸ்ட் மாதம் பயணிகள் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் என மூன்று முக்கிய பிரிவுகளும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. இதுதொடர்பான ஆகஸ்ட் மாத அதிகாரப்பூர்வ தரவுகளை இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கமான சியாம் அமைப்பு (SIAM) இன்று வெளியிட்டுள்ளது.
இன்று சியாம் அமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மாதத்தில் ஆலையிலிருந்து டீலர்களுக்கு அனுப்பப்பட்ட இந்தியாவின் பயணிகள் வாகனங்களின் (Passenger Vehicles) உள்நாட்டு விற்பனையானது 4,39,309 யூனிட்களாக பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 3,21,901 யூனிட்டுகள் மட்டுமே டீலர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 36.5 சதவீதம் அளவுக்கு கூடுதலாக பதிவாகி உள்ளது.

இதன் மூலம் ஆகஸ்ட் மாதத்திற்கான பயணிகள் வாகன விற்பனை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. எஸ்யூவி உள்ளிட்ட புதிய மாடல்களின் வரவு, வாடிக்கையாளர்களின் தேவை, எளிய நிதி வசதிகள் மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு ஏற்பட்டுள்ள சந்தை தேவை குறித்த எதிர்பார்ப்பு ஆகியவை இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகின்றன.
2 மில்லியன் இருசக்கர வாகனங்கள்
இருசக்கர வாகனப் பிரிவிலும் மிகப்பெரிய வளர்ச்சி பதிவாகியுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 20,34,698 இருசக்கர வாகனங்கள் ஆலையிலிருந்து டீலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 18,41,954 யூனிட்கள் பதிவான நிலையில், கடந்த மாதம் 10.5 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே மாதத்தில் 20 லட்சத்துக்கும் அதிகமான இருசக்கர வாகனங்கள் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதும் சாதனை எண்ணிக்கையாக மாறி இருக்கிறது.
குறிப்பாக, ஸ்கூட்டர் பிரிவில் ஏற்பட்டுள்ள வலுவான தேவை இருசக்கர வாகன சந்தையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியுள்ளது. கிராமப்புற தேவை மற்றும் பண்டிகைக் கால வாங்கும் ஆர்வமும் சந்தைக்கு சாதகமாக அமைந்துள்ளன.
மூன்று சக்கர வாகனங்கள்
கடந்த மாதம் டீலர்களுக்கு 93,764 மூன்று சக்கர வாகனங்கள் டீலர்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 22.8 சதவீத வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பயணிகள் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் என அனைத்தும் ஆகஸ்ட் மாதத்தில் இரட்டை இலக்க வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
அதிகரிக்கும் தேவை
இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் முக்கியமான காலகட்டமாக பார்க்கப்படுகின்றன. நாடுமுழுவதும் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் இந்த காலக்கட்டத்தில் புதிய வாகனங்கள் வாங்குவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். எனவே, தேவையை கருதி டீலர்களுக்கு அனைத்து வாகன தயாரிப்பு நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் வாகனங்களை இருப்பு வைக்க அனுப்பி வைத்துள்ளன.


Click it and Unblock the Notifications


