பெட்ரோல் கார்களை ஓரங்கட்டும் சிஎன்ஜி மற்றும் EV கார்கள்... தலைகீழாக மாறும் இந்திய கார் சந்தை
இந்திய கார் சந்தையில் காலம்காலமாக ஆதிக்கம் செலுத்தி வந்த பெட்ரோல் கார்களின் சாம்ராஜ்யம் மெல்ல மெல்ல சரிவைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. இந்திய கார் வாடிக்கையாளர்களின் விருப்பம் இப்போது பெட்ரோலைத் தாண்டி மாற்று எரிபொருள் வாகனங்களை நோக்கி மிக வேகமாக நகர்ந்து வருகிறது.
சமீபத்தில் வெளியான பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான ஈக்கியூரஸ் செக்யூரிட்டீஸ் (Equirus Securities) நிறுவனத்தின் அறிக்கையின்படி, நாட்டின் ஒட்டுமொத்த பயணிகள் வாகன விற்பனையில் சிஎன்ஜி (CNG), ஹைபிரிட் (Hybrid) மற்றும் மின்சார கார்களின் (EV) கூட்டு பங்களிப்பு 42 சதவீதமாக உயர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது.

இதன் மூலம் இந்திய கார் விற்பனை வரலாற்றிலேயே முதன்முறையாக, பெட்ரோல் கார்களின் பங்களிப்பை மாற்று எரிபொருள் கார்கள் முந்தியுள்ளன. முந்தைய ஆண்டுகளில் விற்பனையில் பெரும்பான்மை சந்தைப் பங்கைக கொண்டிருந்த பெட்ரோல் கார்களின் விற்பனை பங்கு, 41 சதவீதமாகக் குறைந்து இதுவரை இல்லாத அளவுக்குச் சரிவைக் கண்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே காலத்தில் 46 சதவீதமாக இருந்த பெட்ரோல் கார்களின் சந்தை பங்கு, தற்போது 5 சதவீதம் வரை சரிந்து 41 சதவீதமாக மாறியுள்ளது. அதேசமயத்தில் சிஎன்ஜி கார்களின் விற்பனை பெருமளவில் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் 21 சதவீதமாக இருந்த சிஎன்ஜி கார்களின் சந்தைப் பங்கு, தற்போது 25 சதவீதம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உச்சத்தைத் தொட்டுள்ளது.
பெட்ரோல் விலை உயர்வு மற்றும் நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் சிஎன்ஜி நிரப்பும் நிலையங்களின் கட்டமைப்பு ஆகியவை சிஎன்ஜி கார்களை நோக்கி மக்கள் அதிகளவில் படையெடுக்க முதன்மை காரணமாக அமைந்துள்ளன.மேலும், இந்தியாவில் விற்பனையாகும் 4ல் ஒரு கார் சிஎன்ஜி எரிபொருள் மாடலாக இருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாக உள்ளது.
சிஎன்ஜி போன்றே மின்சார கார் பிரிவிலும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பதிவாகியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் 30,700 மின்சார கார்கள் விற்பனையாகி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை விட 52 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த கார் சந்தையில் எலெக்ட்ரிக் கார்களின் பங்களிப்பு 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்திய மின்சார கார் சந்தையில் டாடா மோட்டார்ஸ் மீண்டும் தனது பலத்தை நிரூபித்துள்ளது. எலெக்ட்ரிக் கார் சந்தையில் 43 சதவீத சந்தைப் பங்கைப் பிடித்து அந்நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. டாடா டியாகோ எலெக்ட்ரிக், பன்ச் எலெக்ட்ரிக், நெக்ஸான் எலெக்ட்ரிக் உள்ளிட்ட பட்ஜெட் ரக மாடல்களுக்கு இருக்கும் வரவேற்பு இதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
அதேவேளையில், மஹிந்திரா நிறுவனம் 21 சதவீத பங்கையும், ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் நிறுவனம் 15 சதவீத பங்கையும் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. நாட்டின் தலைநகரான டெல்லியில் மட்டும் மின்சார கார்களின் பங்கு என்பது 19 சதவீதத்தை எட்டியுள்ளது கவனிக்கத்தக்கது.
பெட்ரோலில் 20% எத்தனால் கலக்கும் E20 எரிபொருள் நாடு முழுவதும் பயன்பாட்டில் உள்ளது. E20 குறித்து வாகன உரிமையாளர்களிடம் மைலேஜ் மற்றும் நீண்டகால பராமரிப்பு தொடர்பான கவலைகள் உள்ளன. மேலும், மைலேஜ் குறையும் என்ற தகவலும் அவர்களது கவலையை இரட்டிப்பாக்கி உள்ளது.
இதனால், எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் பக்கம் வாடிக்கையாளர்கள் கவனத்தை திருப்பி உள்ளதாக கருதப்படுகிறது. வெறும் பெட்ரோல், டீசல் எரிபொருள் மட்டுமே என்ற நிலையைத் தாண்டி, எரிபொருளுக்கு குறைந்த செலவு மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை நோக்கி இந்திய கார் வாடிக்கையாளர்கள் முதிர்ச்சியான நகர்வாகவே இது பார்க்கப்படுகிறது.
Source: Equirus Securities


Click it and Unblock the Notifications


