இந்திய கார் சந்தையில் புதிய வரலாறு... ஒரே மாதத்தில் பல நிறுவனங்கள் உச்சபட்ச விற்பனை பதிவு செய்தது ஏன்?
கடந்த ஜூலை மாதம் இந்திய கார் சந்தைக்கு வரலாற்று சிறப்புமிக்க மாதமாக அமைந்துள்ளது. இந்தியாவில் மொத்த கார் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு மிக உச்சபட்ச எண்ணிக்கையை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. நாட்டின் முன்ணணி நிறுவனங்களான மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், கியா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது உச்சபட்ச மாத விற்பனையை பதிவு செய்துள்ளனர்.
கடந்த மாதம் இந்திய சந்தையில் மொத்தமாக 4.7 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில், இது 33 சதவீதம் உயர்வாகும். இந்திய கார் உள்ளிட்ட பயணிகள் வாகனப் பிரிவு இந்த அளவுக்கு அதிரடி வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி 2,00,123 கார்களை விற்பனை செய்து தனது வரலாற்றிலேயே அதிகபட்ச உள்நாட்டு மாத விற்பனையை பதிவு செய்துள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா உள்நாடு மற்றும் ஏற்றுமதியை சேர்த்து 75,360 கார்களை விற்பனை செய்துள்ளது. அடுத்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 63,760 பயணிகள் வாகனங்களையும், கியா மோட்டார் இந்தியா 28,200 வாகனங்களையும் ஜூலையில் விற்பனை செய்துள்ளன. இந்த சிறப்பான விற்பனை வளர்ச்சி ஆட்டோமொபைல் துறையினர் மத்தியில் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஜூலையில் கார் விற்பனை அதிகரித்ததற்கு பல காரணிகள் உள்ளன. பொதுவாக ஆகஸ்ட் முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில் நாடு முழுவதும் பல முக்கிய பண்டிகைகள் வர இருக்கின்றன. ஓணம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி போன்ற முக்கிய பண்டிகைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் விமரிசையாக கொண்டாடப்படும். இந்த காலக்கட்டத்தில் இந்தியாவில் புதிய கார் வாங்குவோரின் எண்ணிக்கை வழக்கத்தைவிட மிக அதிகமாக இருக்கும்.
இதனால், டீலர்கள் அதிக அளவில் கார்களை கையிருப்பு வைக்க தொடங்கி உள்ளனர். இதனால், கார் தயாரிப்பு நிறுவனங்கள் முன்கூட்டியே ஜூலை மாதத்தில் அதிக கார்களை தங்களது ஆலையில் இருந்து டீலர்களுக்கு அனுப்பி உள்ளது. அடுத்ததாக, எஸ்யூவி கார்களுக்கான தேவை தொடர்ந்து சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வரும் அதேநேரத்தில் சிறிய கார்களுக்கான தேவையும் குறிப்பிட்டத்தக்க அளவு வளர்ந்து வருகிறது.
கடந்த மாதம் பல புதிய கார் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. பொதுவாக புதிய கார் மாடல்களுக்கு முன்கூட்டியே அதிக புக்கிங் கிடைத்திருக்கும். அந்த கார்களை டீலர்களுக்கு அதிக அளவில் அனுப்பியதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. பண்டிகை காலத்திற்கு முன்னதாக சில நிறுவனங்கள் அதிக ஆஃபர்களையும் வழங்கியது. ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் சப்ளையர் ஆலைகளில் ஏற்பட்ட தீவிபத்து காரணமாக தடைப்பட்ட உற்பத்தி கடந்த மாதம் சீரானதும் முக்கிய காரணமாக இருக்கிறது.
கடந்த ஆண்டு கார் உள்ளிட்ட வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரிச் சீர்திருத்தங்கள் மற்றும் கடந்த சில மாதங்களாக சந்தையில் நிலவிய சாதகமான சூழல் ஆகியவை கார் சந்தைக்கு நல்ல அடித்தளத்தை உருவாக்கி உள்ளது. இதனுடன் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு டீலர்கள் கையிருப்பை அதிகரித்ததும், புதிய மாடல்களின் அறிமுகத்துடன் தள்ளுபடி சலுகைகளும் இணைந்து ஜூலை மாத விற்பனையை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன.


Click it and Unblock the Notifications