இந்தியாவின் ஜேஎஸ்டபிள்யூ பிராண்டில் அறிமுகமாகும் முதல் சீன கார் மாடல் இதுதான்!
டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா நிறுவனங்களை போலவே இந்தியாவின் மிக முக்கியமான வாகன தயாரிப்பு குழுமமாக மாற வேண்டும் என்ற வேட்கையுடன் களமிறங்கி உள்ளது ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் நிறுவனம். சீனாவின் செயிக் குழுமத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் இங்கிலாந்து பிராண்டான எம்ஜி மோட்டார் நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க பங்குடன் ஏற்கனவே இந்திய சந்தையில் கால் பதித்து விட்ட ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் அடுத்து சொந்த பிராண்டிலும் கார்களை மிக விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.
இதற்காக, சீனாவை சேர்ந்த செரி குழுமத்தின் கூட்டணியில் அந்நிறுவனத்தின் மிக முக்கிய மாடல்களை ரீபேட்ஜ் செய்து தனது பிராண்டில் இந்தியாவில் களமிறக்க திட்டமிட்டுள்ளது ஜேஎஸ்டபிள்யூ. இந்த நிலையில், ஜேஎஸ்டபிள்யூ பிராண்டில் வரும் முதல் மாடல் காம்பேட் (Combat) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ஜேஎஸ்டபிள்யூவின் முதல் கார்
செரி நிறுவனத்தின் ஜேடூர் டி2 (Jetour T2) எஸ்யூவிதான் இந்தியாவில் ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் என்ற பிராண்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி மாடலானது பிரிமீயம் வகை ப்ளக் இன் ஹைப்ரிட் மாடலாக வர இருப்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது, பெட்ரோல் எஞ்சின் மற்றும் பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் மாடலாகவும் பயன்படுத்தும் வாய்ப்பை இந்த புதிய எஸ்யூவி வழங்கும்.
ஜேஎஸ்டபிள்யூ பிராண்டில் வரும் அறிமுக எஸ்யூவி என்பதால் காம்பேட் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, வழக்கமான பெட்ரோல் அல்லது டீசல் எஸ்யூவிகளில் இருந்து மாறுபட்டு, இதில் Plug-in Hybrid தொழில்நுட்பம் இடம்பெற இருப்பது முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது.
ரீபேட்ஜ் மாடல்
செரி ஜேடூர் டி2 எஸ்யூவியில் சிறிய அளவிலான மாற்றங்களை செய்து ஜேஎஸ்டபிள்யூ மோட்டார் பிராண்டில் வர இருக்கிறது. ஆனால், பெரிய அளவிலான டிசைன் மாற்றங்கள் இருக்காது. முன்புற ஹெட்லைட், க்ரில், பம்பர்களில் கூட சிறிய அளவிலான மாற்றங்களை எதிர்பார்க்கலாம். ஜேடூர் பிராண்டிற்கு பதிலாக ஜேஎஸ்டபிள்யூ பிராண்டு பெயர் இடம்பெற்றிருக்கும்.
பெட்டி போன்ற வடிவமைப்புடன் உயர்ந்த அமைப்புடன் கம்பீரமான எஸ்யூவி மாடலாக இருக்கிறது. பெரிய பம்பர்கள், தடிமனான பாடி கிளாடிங் சட்டங்கள், ரூஃப் ரெயில்கள், 20 அங்குல கலப்பு உலோக சக்கரங்கள், பின்புற கதவில் கூடுதல் சக்கரம் பொருத்தப்பட்டு தன்னை ஒரு முழுமையான எஸ்யூவி மாடலாக காட்ட முனைகிறது.
பிரிமீயம் ரகம்
இது பிரிமீயம் ரகத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளதால், உட்புறத்திலும் உயர்தர பாகங்கள், அதிக தொழில்நுட்ப வசதிகள் இடம்பெற்றிருக்கும். இந்த காரில் 15.6 அங்குல பெரிய திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 10.6 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், வயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ, பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் இருக்கைகள், வயர்லெஸ் சார்ஜர் வசதி, அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல் வசதி, 540 டிகிரி கேமரா ஆகியவையும் கொடுக்கப்படும் வாய்ப்பு இருக்கிறது.
சக்திவாய்ந்த ஹைப்ரிட் மாடல்
புதிய ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து செயல்படும். அத்துடன், இந்த காரில் 18.4kWh பேட்டரியும் வழங்கப்படும். வெளிநாடுகளில் உள்ள ஜேடூர் டி2 மாடலானது 360எச்பி பவரையும், 610 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கிறது. இந்தியாவிலும் இதே ஆற்றல் வாய்ந்த மாடலாக வரும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த எஸ்யூவியில் 18.4kWh பேட்டரியுடன், T2 PHEV மாடல் NEDC சோதனையில் சுமார் 90 கி.மீ எலெக்ட்ரிக் ரேஞ்சை வழங்குகிறது. முழு சார்ஜ் மற்றும் பெட்ரோல் பயன்பாட்டை சேர்த்து அதன் மொத்த ரேஞ்ச் சுமார் 1,200 கி.மீ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதே அளவிலான ரேஞ்ச் கொண்டதாக இருக்குமா என்பதை பொறுந்திருந்துதான் பார்க்க வேண்டும்.
புதிய ஜேஎஸ்டபிள்யூ காம்பேட் எஸ்யூவி ரூ.30 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கொண்டு வரப்படும் வாய்ப்பு இருக்கிறது. இந்த புதிய மாடலானது ஹோண்டா இசட்ஆர்வி மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications


