இதுக்கும் சீனா கார் கம்பெனி தான் உதவியா! கார் மார்க்கெட்டில் நுழையும் பிரபல இந்திய சிமெண்ட் கம்பெனி!
ஜே.எஸ்.டபிள்யூ (JSW) இந்த கம்பெனி பெயரை உங்களுக்கு எங்கேயோ அடிக்கடி கேள்விப்பட்டது போன்று இருக்கலாம். சிமெண்ட் உற்பத்தி & விற்பனையில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் இந்த நிறுவனம் ஐபிஎல் கிரிக்கெட் (IPL Cricket) தொடரில் கூட பங்கேற்றுள்ளது. இந்த அளவிற்கு பிரம்மாண்டமான ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் சமீபத்தில் எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனத்துடன் கார்கள் உற்பத்தி & விற்பனையிலும் செயல்பட்டு வருகிறது.
குறிப்பாக, எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-ஐ ஜே.எஸ்.டபிள்யூ உடனான இணைவிற்கு பிறகு எம்ஜியில் அதிகமாக பார்க்க முடிகிறது. அவை மார்க்கெட்டில் பெரிதும் கவனத்தையும் பெற்றுள்ளன. ஆதலால், எதிர்காலத்தில் இந்த இரு நிறுவனங்களும் இணைந்து இந்திய கார்கள் மார்க்கெட்டில் பல புதிய சாதனைகளை படைக்கவுள்ளன என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில், ஜே.எஸ்.டபிள்யூ குழுமம் தனியாக ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ் என்கிற ஆட்டோமொபைல் நிறுவனத்தை உருவாக்கி ஆச்சிரியப்படுத்தி உள்ளது.

இந்தியாவின் பயணிகள் வாகனப் பிரிவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கவுள்ள ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ், 'தி எகனாமிக் டைம்ஸ்' (The Economic Times) நாளிதழின் முதல் பக்கத்தில் முழுப்பக்கத்திற்கு விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இருட்டறையில் நிற்கும் எஸ்யூவி (SUV) ரக கார் ஒன்றின் நிழற்படத்துடன், "எதிர்காலம் அழைக்கிறது. இந்த பயணத்தில் நீங்கள் இணைகிறீர்களா?" என்ற கவர்ச்சிகரமான வாசகத்தை வெளியிட்டுள்ளது.
இது, ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ் பிராண்டின் கீழ் முதல் கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளதை உறுதிப்படுத்துகிறது. இந்த விளம்பரம் மூலம் டீலர் பார்ட்னர்களையும் தங்கள் பயணத்தில் இணைய ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ் அழைக்கிறது. இது, முதல் கார் வெளியீட்டிற்கு முன்னதாகவே தனது சில்லறை விற்பனை மைய நெட்க்வொர்க்கை இந்த நிறுவனம் தீவிரமாக உருவாக்கி வருவதை உணர்த்துகிறது.

ஆர்வமுள்ளவர்கள் ஒரு QR குறியீட்டை ஸ்கேன் செய்து, 2026 மார்ச் 11ஆம் தேதிக்குள் தங்கள் ஆர்வத்தைப் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த முயற்சி, பிராண்டின் அறிமுகம் ஒரு செயல்பாட்டு நிலைக்கு வந்துள்ளதைக் காட்டுகிறது. ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸின் முதல் மாடலாக செரி ஜெடூர் டி2 ஐ-டிஎம் (Chery Jetour T2 i-DM) என்கிற பிளக்-இன் ஹைப்ரிட் எஸ்யூவி கார் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது 4.7 மீட்டர் நீளமும், 5 பேர் அமரக்கூடிய வசதியையும் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது. முதல் காரின் பெயரை பார்த்தவுடனே தெரிந்திருக்கும், சீனாவைச் சேர்ந்த செரி ஆட்டோமொபைல் (Chery Automobile) நிறுவனத்துடன் ஜே.எஸ்.டபிள்யூ கூட்டணி அமைக்கவுள்ளதை. இது, சீனாவின் SAIC மோட்டார் குடும்பத்தின் எம்ஜி மோட்டார் நிறுவனத்துடனான ஜே.எஸ்.டபிள்யூ-வின் கூட்டு முயற்சியிலிருந்து தனிப்பட்ட, சுதந்திரமான வாகனப் பயணத்தைத் தொடங்குகிறது.
ஜெடூர் டி2 ஐ-டிஎம் எஸ்யூவி கார்கள், மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகரில் (Chhatrapati Sambhajinagar) அமையவிருக்கும் ஜே.எஸ்.டபிள்யூ-வின் புதிய பசுமை உற்பத்தி தொழிற்சாலையில் அசெம்பிள் (Assemble) செய்யப்படும். அதாவது, காரின் பாகங்களை வெளிநாட்டில் இருந்து கொண்டுவந்து இந்த ஆலையில் முழு காராக அசெம்பிள் செய்யப்பட்டு புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி (Delivery) செய்யப்படும்.
இந்த ஆலையில் ஆகஸ்ட் மாதத்தில் உற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு பிரீமியம் எஸ்யூவி காராக நிலைநிறுத்தப்படும் இது, சுமார் ரூ.45 லட்சம் ஆரம்ப விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. பிளக்-இன் ஹைப்ரிட் எலெக்ட்ரிக் காருக்கு இது ஏற்கக்கூடிய விலையே. எனினும், ஜே.எஸ்.டபிள்யூ குழுமத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால், "நாங்கள் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையிலான விலை வரம்பில் செயல்பட விரும்புகிறோம்" என்று கூறியிருந்தார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா எக்ஸ்யூவி700 (Mahindra XUV700) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) போன்ற கார் மாடல்களுடன் போட்டியிடும் ஆர்வத்தில் உள்ள ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனம் தான் முதல் காரை ரூ.45 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்ய உள்ளது. இது ஆட்டோமொபைல் துறையில் வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றே.
புதியதாக வரும் நிறுவனங்கள் துவக்கத்திலேயே தங்களது முழு திறன்களையும் வெளிப்படுத்தி, ஒரு பிரீமியம் கார் கம்பெனியாக அறிமுகமாகி பின்னர் பட்ஜெட் விலை கார்களை அறிமுகம் செய்வதை வியாபார யுக்தியாக பின்பற்றுகின்றன. இருப்பினும் இது ஜே.எஸ்.டபிள்யூ மோட்டார்ஸ் நிறுவனத்தின் விஷயத்தில் எந்த அளவிற்கு வொர்க்-அவுட் ஆக போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








