ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தை கையகப்படுத்துகிறது ஜேஎஸ்டபிள்யூ?
இந்திய வாகனத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், ஜெர்மனியின் ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் இந்தியப் பிரிவான 'ஸ்கோடா ஃபோக்ஸ்வேகன் இந்தியா' நிறுவனத்தில் பெரும்பான்மை பங்குகளைக் கைப்பற்ற ஜேஎஸ்டபிள்யூ (JSW) குழுமம் அதிகாரப்பூர்வமாக முதற்கட்ட நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இது தொடர்பான பிணைப்பற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் (Non-binding MoU) இரு நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்தாகியுள்ளது.
இதன்படி, ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் 51 சதவீதப் பங்குகளைச் சஜ்ஜன் ஜிண்டால் தலைமையிலான ஜேஎஸ்டபிள்யூ குழுமம் கைப்பற்ற உள்ளது. மீதமுள்ள 49 சதவீதப் பங்குகள் ஜெர்மனியை சேர்ந்த ஃபோக்ஸ்வேகன் குழுமத்திடம் இருக்கும். இரு தரப்பும் இணைந்து கூட்டு நிர்வாகக் கட்டுப்பாட்டுடன் (Joint Control) புதிய நிறுவனமாக இந்திய வர்த்தகத்தை கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளன.

இந்திய வாகனச் சந்தையில் மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா போன்ற நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு மத்தியில், ஐரோப்பிய நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் தனது சந்தைப் பங்கை உயர்த்துவதற்கு நீண்ட காலமாகப் போராடி வருகிறது. 2018 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட 'இந்தியா 2.0' திட்டத்தின் கீழ் ஸ்கோடா குஷாக், ஸ்லாவியா, ஃபோக்ஸ்வேகன் டைகூன் மற்றும் விர்டஸ் போன்ற வெற்றிகரமான கார்கள் விற்பனைக்கு வந்தபோதிலும், நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தைப் பங்கு சுமார் 2.5 சதவீதமாக மட்டுமே உள்ளது.
காரின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கும், எலக்ட்ரிக் வாகனத் துறையில் பெரும் முதலீடுகளைச் செய்வதற்கும் உள்நாட்டு நிறுவனத்தின் உதவி ஃபோக்ஸ்வேகன் குழுமத்திற்குத் தேவைப்படுகிறது. அதேநேரத்தில், இந்திய வாகனத் துறையில் ஒரு முக்கியச் சக்தியாக உருவெடுக்கத் துடிக்கும் ஜேஎஸ்டபிள்யூ குழுமத்திற்கு இந்த இணைப்பு மிகப்பெரிய நன்மையை அளிக்கும். ஏற்கனவே எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தில் கணிசமான பங்கை வைத்துள்ள ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம், தற்போது ஸ்கோடா-ஃபோக்ஸ்வேகன் கூட்டணியின் மூலம் தனது அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
உள்நாட்டு உற்பத்தி திறன் அதிகரிப்பு
மஹாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜி நகர் (அவுரங்காபாத்) மற்றும் சகன் ஆகிய பகுதிகளில் உள்ள ஃபோக்ஸ்வேகனின் உற்பத்தி ஆலைகளை முழுத் திறனுடன் பயன்படுத்த இந்த கூட்டணி மூலமாக வாய்ப்பு கிடைக்கும். ஆண்டுக்கு 4 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்யக்கூடிய இந்த ஆலைகளில், அதிக எண்ணிக்கையில் வாகனங்களைத் தயாரிப்பதன் மூலம் உற்பத்திச் செலவு பெருமளவில் குறையும்.
உள்நாட்டு பாகங்கள் பயன்பாடு
வாகனங்களின் உதிரிபாகங்களை இந்தியாவிலேயே அதிகளவில் உற்பத்தி செய்வதன் மூலம், கார்களின் விலையைக் கணிசமாகக் குறைக்க முடியும். இது இந்திய வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் தரமான ஐரோப்பிய கார்கள் கிடைக்க வழிவகுக்கும்.
புதிய எலக்ட்ரிக் வாகனத் திட்டம்
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் 'இந்தியா மெயின் பிளாட்ஃபார்ம்' (IMP) என்ற புதிய எலக்ட்ரிக் வாகனக் கட்டமைப்பிற்கு ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் முதலீடு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும். இந்தியச் சாலைகள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும் இந்தத் தளத்தில் பல புதிய எலக்ட்ரிக் எஸ்யூவிகள் தயாரிக்கப்படும்.
ஏற்றுமதி மையமாகும் இந்தியா
இந்தியாவில் குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படும் கார்களைப் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் இரு நிறுவனங்களும் திட்டமிட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்கு இடையேயான வர்த்தக ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும் பட்சத்தில், இந்தியா ஃபோக்ஸ்வேகனின் முதன்மை ஏற்றுமதி மையமாக மாறும்.
கூட்டணியால் நன்மைகள்
இந்த கூட்டணியின் மூலம் இந்திய வாடிக்கையாளர்களுக்கு பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது. ஃபோக்ஸ்வேகன் மற்றும் ஸ்கோடா பிராண்டுகளின் அதிக பாதுகாப்பு, சிறந்த ஓட்டுதல் அனுபவம் மற்றும் கட்டமைப்புத் தரம் கொண்ட மாடல்களை சரியான விலையில் கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில், ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் இரும்பு உற்பத்தி உள்ளிட்ட நிறுவனங்கள் மூலமாக கார்களுக்கு தேவையான பாகங்களை சரியான விலையில் மூலப்பொருட்களை பெறும் வாய்ப்பும் உண்டு.
எதிர்காலத்தில் ஸ்கோடா கோடியாக் போன்ற பிரீமியம் மாடல்களை இந்தியாவிலேயே முழுமையாக அசெம்பிள் செய்வதற்கும், மூன்று வரிசை இருக்கைகள் கொண்ட புதிய எஸ்யூவிகளை அறிமுகப்படுத்துவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் சொகுசு பிராண்டுகளான ஆடி, போர்ஷே போன்றவற்றை இந்த நிறுவனக் கூட்டமைப்பிற்குள் கொண்டுவருவது குறித்தும் பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இறுதி ஒப்பந்தம் எப்போது?
இதுதொடர்பான இறுதி ஒப்பந்தம் இந்த ஆண்டின் இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மதிப்பீடுகள் மற்றும் பிற ஒழுங்குமுறை ஒப்புதல்கள் பெறப்பட்ட பிறகு, இந்திய வாகனச் சந்தையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த கூட்டு நிறுவனம் அதிகாரப்பூர்வமாகச் செயல்படத் தொடங்கும்.
எம்ஜி மோட்டார் இந்தியா மற்றும் ஃபோக்ஸ்வேகன்-ஸ்கோடா நிறுவனங்களோடு கூட்டணி அமைத்து செயல்படுதுடன் தனது சொந்த பிராண்டில் புதிய கார்களை அறிமுகப்படுத்தவும் ஜேஎஸ்டபிள்யூ திட்டமிட்டுள்ளது. இதற்காக, சீனாவை சேர்ந்த செரி வாகன குழுமத்துடன் இணைந்து செயலாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications


