பெட்ரோல் விலை உயர்வு அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் அடுத்த ஷாக்... நிலைமை கை மீறி போயிட்டு இருக்கா?
அமெரிக்கா (United States) மற்றும் இஸ்ரேல் (Israel) ஆகிய நாடுகள் இணைந்து, கடந்த சில வாரங்களாக ஈரான் (Iran) மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவின் நட்பு நாடுகளாக கருதப்படும் ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates), சவுதி அரேபியா (Saudi Arabia) மற்றும் கத்தார் (Qatar) போன்ற நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
அத்துடன் ஹார்மூஸ் நீரிணை (Strait Of Hormuz) வழியாக நடைபெற்று வந்த கப்பல் போக்குவரத்தையும் ஈரான் முடக்கியது. இதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்போது பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மற்றும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் எல்பிஜி (LPG) சிலிண்டர்கள் போன்ற மிக முக்கியமான எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து அவற்றின் விலையும் உயர்ந்துள்ளது. இந்தியாவை பொறுத்தவரையில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பாக வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது. இந்த வரிசையில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் என 2 மிக முக்கியமான எரிபொருட்களின் விலையும் இன்று (மே 15) அதிரடியாக உயர்த்தப்பட்டது (Price Hike).
இந்த அதிர்ச்சியில் இருந்து பொதுமக்கள் மீள்வதற்குள் தற்போது மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ள நிலையில், அவற்றை வாங்குவதற்கும் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கேரளம் (Keralam) மாநிலத்தில்தான் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது கேரளம் மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்க்குகளில் ஒருவருக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பெட்ரோல் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் அங்கு ஒருவருக்கு 200 லிட்டர் டீசல் மட்டுமே விற்பனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்த அளவிற்கு மேல் யாருக்கும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுவதில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து மாத்ரூபூமி செய்தி வெளியிட்டுள்ளது. அனைவருக்கும் ஒரே சீராக பெட்ரோல், டீசல் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் அதிக 'டிமாண்ட்' இருக்க கூடிய தற்போதைய நேரத்தில் திடீரென பெட்ரோல், டீசல் தீர்ந்து போவதை உறுதி செய்வதும் கூட இந்த திட்டத்தின் நோக்கம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே பங்க்குகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் சப்ளை செய்வதில் தேசிய அளவில் எந்தவொரு தட்டுப்பாடும் என இல்லை என எரிபொருள் விநியோகம் செய்யும் நிறுவனங்கள் விளக்கம் அளித்துள்ளன. இருப்பினும் எரிபொருள் சப்ளையில் ஒரு சில சமயங்களில் மட்டும் தற்காலிகமான இடையூறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
எனவே பெரிய அளவில் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காகவே கேரளம் மாநிலத்தில் பெட்ரோல், டீசல் விற்பனையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அனைவருக்கும் தொடர்ந்து எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வாகன ஓட்டிகள் அனைவருக்கும் தேவையான அளவு எரிபொருள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது மத்திய அரசின் கடமை ஆகும். எனவே இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதை மத்திய அரசு உறுதி செய்யும் என நாம் உறுதியாக நம்பலாம்.
அதே நேரத்தில் எரிபொருளை சிக்கனமாக பயன்படுத்தி, மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டிய பொறுப்பு, வாகன ஓட்டிகளாகிய நமக்கும் உள்ளது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி (Prime Minister Narendra Modi) கேட்டு கொண்டபடி, சாத்தியமுள்ள நிறுவனங்கள் அனைத்தும், தங்கள் ஊழியர்களுக்கு, வீட்டில் இருந்தே வேலை செய்யும் (Work From Home) வாய்ப்பை வழங்கலாம்.
இதன் மூலம் வாகன பயன்பாடு வெகுவாக குறைந்து, எரிபொருள் சேமிக்கப்படும். அத்துடன் பொதுமக்கள் சொந்த வாகனங்களில் பயணம் செய்வதற்கு பதிலாக, பஸ் போன்ற பொது போக்குவரத்து வாகனங்களில் பயணம் செய்யலாம். இதன் மூலம் எரிபொருள் சேமிக்கப்படுவதுடன் மட்டுமல்லாது, சாலைகளில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையும் குறையும். அத்துடன் காற்று மாசுபாடு பிரச்சனையும் கட்டுக்குள் வரும்.


Click it and Unblock the Notifications