டாடா பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவியை கட்டம் கட்டிய கியா... சிறிய எலெக்ட்ரிக் எஸ்யூவியை களமிறக்குகிறது!!
டாடா பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு நேரடி போட்டியாக சிறிய எலெக்ட்ரிக் எஸ்யூவியை களமிறக்க கியா நிறுவனம் தயாராகி வருகிறது. இந்தியாவுக்காக கியா திட்டமிட்டுள்ள பல புதிய மாடல்கள் வரிசையில் இந்த எஸ்யூவியும் இடம்பெற்றுள்ளது. அதாவது, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட சைரோஸ் எலெக்ட்ரிக் காரைவிட விலை குறைவான மாடலாக வர இருக்கிறது.
தற்போது கியா மோட்டார் நிறுவனம் இந்தியாவில் சைரோஸ், கேரன்ஸ், க்ளாவிஸ், இவி6 மற்றும் இவி9 என 5 எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக, சமீபத்தில் அறிமுகமான சைரோஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.13.49 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வந்தது.

(Representational Image - KIA EV2 Prototype)
இந்த கார் ARAI சான்றுப்படி அதிகபட்சமாக 526 கி.மீ. ரேஞ்ச் என்பதால் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்தியாவுக்கான மாடல்கள் குறித்து கியா முதலீட்டாளர்கள் நாள் நிகழ்வில் பல முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட புதிய ஏ செக்மென்ட் எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்வதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது. இந்த சந்தையில் தற்போது பிரபலமாக இருக்கும் டாடா பன்ச் எலெக்ட்ரிக் உள்ளிட்ட மாடல்களுக்கு இந்த புதிய கியா எலெக்ட்ரிக் எஸ்யூவி நேரடி போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாடல் இந்திய சந்தையை மனதில் வைத்து உருவாக்கப்படும். கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் பல்வேறு மாடல்களில் பிளாட்பார்ம் மற்றும் தொழில்நுட்பங்களை பகிர்ந்து வருகின்றன. அந்த வகையில், ஹூண்டாய் உருவாக்கி வரும் சிறிய எலெக்ட்ரிக் எஸ்யூவியின் அடிப்படையில் இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுகுறித்து கியா இதுவரை முழுமையான தொழில்நுட்ப விவரங்களை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
டிசைன்
அதிக கேபின் இடவசதியை வழங்கும் வகையில் பாக்ஸி வடிவமைப்பு இடம்பெறலாம். உட்புறத்தைப் பொறுத்தவரை, பிரீமியம் மற்றும் தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த கேபினை கியா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரட்டை 10.25 இன்ச் டிஸ்ப்ளேக்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், முன் மற்றும் பின்புற சீட் வென்டிலேஷன், வயர்லெஸ் சார்ஜர், லெதரெட் அப்ஹோல்ஸ்ட்ரி, ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல் உள்ளிட்ட வசதிகள் இடம்பெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேட்டரி
பேட்டரி மற்றும் செயல்திறனைப் பொறுத்தவரையில் இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியில் இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் கொடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 42 kWh மற்றும் 49 kWh பேட்டரி பேக்குகள் இடம்பெறலாம் என்றும், சிறிய பேட்டரி 97 பிஎச்பி பவரையும், பெரிய பேட்டரி பதிப்பு சுமார் 115 பிஎச்பி பவரையும் வழங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ரேஞ்ச்
இதன் ரேஞ்ச் சுமார் 300 முதல் 350 கி.மீ. வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்காகவே உருவாக்கப்படும் மாடலாக இருந்தால், போட்டியாளர்களை சமாளிக்கும் வகையில் விலையை கியா நிறுவனம் மிகவும் சவாலாக நிர்ணயிக்க வாய்ப்புள்ளது.
புதிய எலெக்ட்ரிக் மாடல்கள்
கியா நிறுவனம் 2030-க்குள் இந்தியாவில் 10 மாடல்களைக் கொண்ட வரிசையில் எட்டு மின்சாரம் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி 2029ம் ஆண்டுக்குள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கியா மோட்டார் நிறுவனத்தின் எதிர்கால வர்த்தகத்தில் மிக முக்கியமான மாடலாக கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications