அட்டகாசமான வசதியைக் கொடுத்து செல்டோஸ் எஸ்யூவியை அப்டேட் செய்த கியா
கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் மேம்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை செல்டோஸ் எஸ்யூவி மாடலை வெளியிட்டது கியா. தற்போத அதனைத் தொடர்ந்து தென்கொரியாவில் அப்டேட் செய்யப்பட்ட புதிய செல்டோஸ் மாடலை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மிட்-சைஸ் எஸ்யூவியாக விற்பனை செய்யப்படும் இந்தக் கார் மாடல், தென்கொரியா உள்ளிட்ட வெளிநாட்டுச் சந்தைகளில் காம்பேக்ட் எஸ்யூவியாக அறியப்படுகிறது.
மேலும், கடந்த மார்ச் மாதம் தென்கொரியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட காம்பேக்ட் எஸ்யூவியாகவும் செல்டோஸே இருக்கிறது. அந்நாட்டில் புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் புத்தம் புதிய மேம்படுத்தப்பட்ட செல்டோஸ் மாடலில் புதிய அம்சம் ஒன்றைக் கொடுத்துள்ளது கியா. இந்திய மாடலில் அது இல்லை. அது என்ன அம்சம் என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.

புதிய செல்டோஸ் எஸ்யூவி மாடலில் 'வைப்ரோ சவுண்டு சீட்ஸ்' (Vibro Sound Seats) என்ற புத்தம் புதிய வசதியினைக் கொடுத்திருக்கிறது கியா. துள்ளலான இசையை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக இந்த வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், காரில் பயணம் செய்யும் இந்தப் புதிய வசதியின் மூலம் மேம்பட்ட இசை அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும் எனவும் அந்நிறுவனம் குறிப்பிட்டிருக்கிறது.
பெயரில் உள்ளது போலவே இசைக்கு ஏற்ற வகையில் சீட்களில் அதிர்வுகளை ஏற்படுத்த வைப்ரேட்டர்கள் (Vibrators) கொடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் நான்கு வைப்ரேட்டர்கள். இரண்டு சீட்டில் சாயும் இடத்தில் கீழ்பகுதியிலும், இரண்டு நமது தொடைப்பகுதியினை வைக்கும் இடத்திலும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இசைக்கும் இசைக்கு ஏற்ப இந்த வைப்ரேட்டர்கள் வேலை செய்யும். மேலும் அதிர்வின் அளவையும் 1 முதல் 5 வரையிலான நிலைகளில் நம் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றும் வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த அம்சமானது காரில் இசை கேட்கும் அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைப்ரேட்டர்கள் காரின் முன்பக்க இருக்கைகளில் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. பின்பக்க இருக்கைகளில் இந்த அம்சம் கொடுக்கப்படவில்லை. தற்போது தென்கொரியாவில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் செல்டோஸ் மாடலில் மட்டுமே இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்டோஸ் எஸ்யூவி மாடல்களிலும் இந்த வசதியினைக் கொடுத்து கியா அப்டேட் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைவான விலையில் வாடிக்கையாளர்கள் எதிர்பாராத வகையில் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டதாக முதன் முதலில் செல்டோஸை 2019ல் வெளியிட்டது ஆச்சரியப்படுத்தியது கியா. எனவே இந்த வசதியினை இந்திய மாடல்களில் அந்நிறுவனம் கொடுக்காது என்பதற்கு எந்தக் காரணமும் இல்லை.
இந்தியாவில் பின்னாட்களில் அப்டேட் செய்யப்படும் போது டாப் எண்டு வேரியன்ட்களில் மட்டும் இந்த வசதி கொடுக்கப்படலாம் என நாம் எதிர்பார்க்கலாம். இளம் வாடிக்கையாளர்களை மையப்படுத்தியே இந்த வசதியினை புதிய செல்டோஸில் கியா கொடுத்திருக்கிறது. வயது முதிர்ந்தவர்கள் அல்லது இளம் வயதைக் கடந்தவர்கள் இந்த வசதியினை அயர்ச்சியாகக் கருதக்கூடும்.
தென்கொரியாவில் செல்டோஸின் விற்பனைத் தரவுகளும், அந்தக் காரை இளம் வாடிக்கையாளர்களே அதிகளவில் விரும்பி வாங்குவதாகக் காட்டுகிறது. இந்தியாவிலும் அதிகளவிலான எஸ்யூவி கார்களை இளம் வாடிக்கையாளர்களே விரும்பி வாங்கி வருகின்றனர். ரூ.10.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி இந்தியாவில் இந்த மிட்-சைஸ் எஸ்யூவி கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதனை ஒரு சொகுசு வசதியாகவே நாங்கள் கருதுகிறோம். இந்த வசதி பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்த மட்டுமே என்பதனால், கூடுதல் தேர்வாகக் கூட இதனை கியா கொடுக்கலாம். இந்தியாவில் இந்த வசதி அறிமுகமானாலும், ஒன்றிரண்டு வேரியன்ட்களைக் கடந்து கொடுக்கப்படாது என்றே நினைக்கிறோம். பட்ஜெட்டை முக்கியமாகக் கருதும் இந்திய வாடிக்கையாளர்கள் வட்டத்தில் இந்த வசதி காரின் விலையை உயர்த்தும், அது தேவையற்றதும் கூட.


Click it and Unblock the Notifications








