இப்போதைக்கு வெளியீடு இல்ல.. அதிர்ச்சி கொடுத்த கார் தயாரிப்பு நிறுவனம்!
லம்போர்கினி நிறுவனம் தங்களது முதல் எலெக்ட்ரிக் காரை 2030ம் ஆண்டிற்குள் வெளியிடும் என வாடிக்கையாளர்கள் ஆர்வமாகக் காத்திருக்க தற்போது எலெக்ட்ரிக் காரின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார் அந்நிறுவனத்தின் பிராண்டு தலைமையான ஸ்டெஃபன் வின்கெல்மன். முன்னதாக 2030ம் ஆண்டிற்கு முன்னதாக எலெக்ட்ரிக் கார் மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருப்பதாக லம்போர்கினியே தெரிவித்திருந்தது.
இதனால் தான் வாடிக்கையாளர்கள் இந்தப் புதிய காருக்காக ஆர்வமாகக் காத்திருந்தனர். இந்த நிலையில் தான், 2030-க்கு முன்பு எலெக்ட்ரிக் காரின் வெளியீடு இருக்காது என வின்கெல்மன் தெரிவித்துள்ளார். 2030ம் ஆண்டிற்கு முன்பாக லான்ஸடார் இவி (Lanzador EV) மாடலை லம்போர்கினி சந்தைக்குக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தது. தற்போது அந்த முடிவு தள்ளிவைக்கப்பட்டிருக்கும் நிலையில், பிளக்-இன் ஹைபிரிட் எலெக்ட்ரிக் காராக லான்ஸடார் வெளியாகலாம் எனத் தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

நான்கு பேர் அமரும் வகையில், இரண்டு டோர்களுடன் கூடிய பிளக்-இன் ஹைபிரிட் மாடலாக புதிய லம்போர்கினி லான்ஸடாரை 2030ம் ஆண்டிற்கு முன்பு லம்போர்கினி வெளியிடலாம். தற்போது லம்போர்கினியின் அதிகம் விற்பனை செய்யப்படும் கார் மாடலாக இருக்கும் உரூஸ் எஸ்யூவிக்குக் கீழே புதிய லான்ஸடாரை அந்நிறுவனம் பிளேஸ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. உரூஸின் பிளாட்ஃபார்ம் மற்றும் அதன் ட்வின்டர்போ V8 இன்ஜினையும் புதிய லான்ஸடாரில் லம்போர்கினி கொடுக்கலாம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சரி, லான்ஸடார் எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டைத் தள்ளிவைக்க ஏன் முடிவெடுத்தது லம்போர்கினி? நிறுவனங்களின் திட்டங்களுக்கும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு இடையிலான இடைவெளி தான் இதற்குக் காரணம். அதிக விலை கொடுத்து சொகுசு எலெக்ட்ரிக் கார்களை வாங்க வாடிக்கையாளர்கள் தயாராக இல்லை. இது மட்டுமின்றி, டாப் எண்டு பெர்ஃபாமன்ஸைக் கொடுக்கக்கூடிய எலெக்ட்ரிக் கார் மாடலை அடிப்படையில் இருந்து உருவாக்குவதற்கான முதலீடும் மிகவும் அதிகம் என பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் வின்கெல்மன்.

இவையெல்லாம் சேர்த்து தான் லம்போர்கினியின் முதல் எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டை 2030க் கடந்து தள்ளி வைத்திருக்கிறது. லம்போர்கினி மட்டுமல்ல, போர்ஷே, ரோல்ஸ் ராய்ஸ் உள்ளிட்ட மற்ற சொகுசு மற்றும் பெர்ஃபாமன்ஸ் கார் தயாரிப்பு நிறுவனங்களும் கூட முழுவதுமாக எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்ற தங்களது திட்டங்களில் இருந்து சற்று பின்வாங்கியிருக்கின்றன. குறிப்பிட்ட ஆண்டிலிருந்து எரிபொருள் கார்களின் தயாரிப்பை முழுவதுமாக நிறுத்த இந்த நிறுவனங்கள் திட்டமிட்டிருந்தன.
ஆனால், தற்போது எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்டதை விடக் குறைந்து வரும் நிலையில், இந்த நிறுவனங்கள் எரிபொருள் கார்கள் விற்பனை நிறுத்தம் என்ற தங்களது நிலையிலிருந்து சற்று பின்வாங்கியிருக்கின்றன.சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எலெக்ட்ரிக் கார்கள் தான் எதிர்காலம் என நோக்கத்தில் விரைவாக அனைத்து மாடல்களையும் எலெக்ட்ரிக்காக மாற்றும் திட்டங்களை சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள் வகுத்து வந்தன.
ஆனால், தற்போது எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை, குறிப்பாக சொகுசு எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எதிர்பார்த்த அளவை விடக் குறைந்திருக்கிறது. இந்த காரணங்களினாலேயே லம்போர்கினியும் தங்களது முதல் எலெக்ட்ரிக் காரின் வெளியீட்டைத் தள்ளி வைத்திருக்கிறது. முழுமையான எலெக்ட்ரிக் கார்கள் இல்லையென்றாலும், ஹைபிரிட் கார்களின் வெளியீட்டை லம்போர்கனியிடமிருந்து அடுத்த சில ஆண்டுகளுக்கு நாம் எதிர்பார்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மேலே கூறியது போல எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்ற கருத்தே அனைத்து தரப்பினரிடையேயும் பரவலாக நிலவி வருகிறது. அதனையே லம்போர்கினியின் முடிவும் எடுத்துக் காட்டியிருக்கிறது. எலெக்ட்ரிக் கார்கள் தான் எதிர்காலம் என்றாலும், எரிபொருள் கார்களின் ஆயுட்காலம் நாம் எதிர்பார்த்ததை விட சில காலம் நீண்டிருக்கிறது. லம்போர்கினியின் இந்த முடிவால், அதன் பெர்ஃபாமன்ஸ் இன்ஜின்களை இன்னும் சில ஆண்டுகள் வகை கூடுதலாக வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








