ஒரே நாள் இரவில் பல லட்ச ரூபாய் விலை குறைந்த கார்கள்! எவ்வளவு பெரிய காரியம் செஞ்சிட்டு சைலண்ட்டா இருக்காங்க!
ஜாகுவார் லேண்ட் ரோவர் இந்தியா (Jaguar Land Rover India) நிறுவனம் அதன் பிரபலமான ரேஞ்ச் ரோவர் (Range Rover) கார்களின் விலைகளை அதிரடியாக பெரிய அளவில் குறைத்துள்ளது. இதன் விளைவாக இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் கார்கள் இனி எவ்வளவு விலையில் விற்பனை செய்யப்பட உள்ளன என்பதை பற்றியும், எதனால் இந்த விலை குறைப்பு என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரேஞ்ச் ரோவர் கார்கள் மூலமாக உலகளவில் பிரபலமான சொகுசு கார் நிறுவனமாக லேண்ட் ரோவர் விளங்குகிறது. இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் உதவியுடன் லேண்ட் ரோவர் செயல்படுகிறது. இந்த நிலையில், ரேஞ்ச் ரோவர் எஸ்வி (SV) கார்களின் விலைகளை லேண்ட் ரோவர் நிறுவனம் குறைத்துள்ளது.

இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் எஸ்வி மட்டுமின்றி, விலை குறைவான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வி எடிஷனும் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ரேஞ்ச் ரோவர் எஸ்வி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.4.25 கோடியில் இருந்து ரூ.3.50 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வி எடிஷனின் விலை ரூ.2.75 கோடியில் இருந்து ரூ.2.35 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது, இந்த இரு ரேஞ்ச் ரோவர் எஸ்வி கார்களின் விலைகளும் சுமார் ரூ.75 இலட்சம் குறைக்கப்பட்டுள்ளன. இந்த விலை குறைப்புக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுவது, விரைவில் அமலுக்குவர இருக்கும் இந்தியா-ஐக்கிய இராஜ்ஜியம் (UK) இடையேயான வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஆகும். இந்த ஒபந்தத்தின்படி, ஐக்கிய இராஜ்ஜியத்தில் இருந்து இந்தியாவிற்கு கொண்டுவரப்படும் பொருட்களுக்கான இறக்குமதி வரி கணிசமாக குறையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, இங்கிலாந்தை சேர்ந்த லேண்ட் ரோவர் நிறுவனத்தின் கார்களுக்கான இறக்குமதி வரியும் குறைய வாய்ப்புள்ளது. அதாவது, முழுவதுமாக வெளிநாட்டில் உருவாக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் கார்களுக்கான இறக்குமதி வரி ஆனது தற்சமயம் 110% ஆக உள்ளது. இதனால், அத்தகைய கார்களின் விலைகள் இந்தியாவில் டபுள் மடங்காக நிர்ணயிக்கப்படுகின்றன.
புதிய இந்தியா-ஐக்கிய இராஜ்ஜியம் வர்த்தக ஒப்பந்தத்தின்படி, இந்த இறக்குமதி வரி ஆனது 30% ஆக குறைக்கப்பட உள்ளது. அத்துடன், அடுத்த 5 வருடங்களில் இது வெறும் 10% ஆக குறைக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஒப்பந்தம் இன்னும் அமலுக்கே வராத நிலையில், அதற்கு முன்னதாகவே லேண்ட் ரோவர் நிறுவனம் அதன் ரேஞ்ச் ரோவர் எஸ்வி மற்றும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எஸ்வி எடிஷன்களின் விலைகளை குறைத்துள்ளது.
கார்களின் விலைகளை குறைத்ததுடன், ரேஞ்ச் ரோவர் எஸ்வி கார்களுக்கான புதிய அல்ட்ரா-மெட்டாலிக் பெயிண்ட் ஆப்ஷன்களையும் பளபளப்பான மற்றும் சடின் ஃபினிஷிங்கில் லேண்ட் ரோவர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் ரேஞ்ச் ரோவர் எஸ்வி கார்களை மேலும் பிரீமியம் தரத்திலானதாக காட்டுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஜாகுவார் லேண்ட் ரோவர் கடந்த சில வருடங்களாகவே விலை குறைவான ரேஞ்ச் ரோவர் கார்களை இந்தியாவில் அசெம்பிள் செய்து விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டது. அதாவது, ரேஞ்ச் ரோவர் கார்களுக்கான பாகங்கள் வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் முழு காராக அசெம்பிள் செய்யப்பட்டு டெலிவிரி செய்யப்படுகின்றன.
இருப்பினும், விலையுயர்ந்த ரேஞ்ச் ரோவர் எஸ்வி கார்கள் மட்டும் முழுவதுமாக வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், அதிக விலையை கொண்டிருந்தன. இந்த நிலையில் தற்போது மத்திய அரசாங்கத்தின் முயற்சியால் அவற்றின் விலைகளும் சுமார் ரூ.75 லட்சம் வரையில் குறைந்துள்ளது. லேண்ட் ரோவரின் இந்த விலை குறைப்பின் மூலமாக, புதிய இந்தியா-ஐக்கிய இராஜ்ஜியம் வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமலுக்கு வந்துவிடும் என்பது உறுதியாகிறது.


Click it and Unblock the Notifications