நிலைமை ரொம்ப மோசமாயிட்டே இருக்கு... இனி புதுசா ஒரு வண்டி வாங்கி மெயின்டெய்ன் பண்றது கஷ்டம்...
மேற்கு ஆசிய (West Asia) பிராந்தியத்தில் இஸ்ரேல்-அமெரிக்கா-ஈரான் (Israel-US-Iran) நாடுகளுக்கு இடையே தற்போது கடுமையான போர் (War) நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் (Petrol, Diesel Prices) மிக கடுமையாக உயர்ந்துள்ளன. இனி வரும் நாட்களில் பெட்ரோல், டீசல் விலைகள் மீண்டும் உயர்வதற்கான சூழல் தற்போது உருவாகியுள்ளது.
போரில் ஈடுபட்டுள்ள நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் அமலான நிலையில், அதை மீறி தற்போது மீண்டும் போர் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை (Crude Oil Price) மீண்டும் உயர தொடங்கியுள்ளது. போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 130 அமெரிக்க டாலர்கள் வரை சென்றது.

அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான சமயத்தில் அது வெறும் 70 அமெரிக்க டாலர்களாக குறைந்தது. தற்போது மீண்டும் போர் தொடங்கியுள்ளதால், மீண்டும் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கியுள்ளது. தற்போதைய நிலையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 78 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.
போர் மீண்டும் உச்சத்தை எட்டினால், பெட்ரோல், டீசல் விலைகளும் மீண்டும் உச்சம் தொடுவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளன. இது போதாதென்று இந்தியாவில் தற்போது பல்வேறு கார் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்தி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் (Tata Motors), கியா (Kia) மற்றும் ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) போன்ற நிறுவனங்களின் கார்களின் விலை கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து உயர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் பிஎம்டபிள்யூ (BMW) போன்ற சொகுசு கார் நிறுவனங்களின் தயாரிப்புகளின் விலையும் கடந்த ஜூலை 1ம் தேதியில் இருந்து உயர்ந்துள்ளது. முன்னதாக இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகியின் (Maruti Suzuki) தயாரிப்புகளின் விலை கடந்த ஜூன் மாதமே உயர்த்தப்பட்டு விட்டன.
இந்த வரிசையில் தற்போது மஹிந்திரா (Mahindra) நிறுவனமும் விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மஹிந்திரா நிறுவனத்தின் கார்கள் மட்டுமல்லாது, வர்த்தக வாகனங்களின் (Commercial Vehicles) விலையும் அதிரடியாக உயரவுள்ளது. மஹிந்திரா நிறுவன கார்களின் விலை 2.7 சதவீதம் வரையும், வர்த்தக வாகனங்களின் விலை 2 சதவீதம் வரையும் உயரவுள்ளது. இந்த அதிரடியான விலை உயர்வு நாளை முதல் (ஜூலை 10) அமலுக்கு வரவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போது பல்வேறு வாகன நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்தியுள்ளதால் இனி புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் கூடுதல் தொகையை செலவழிக்க நேரிடும். அத்துடன் பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துள்ளதால், வாகனங்களை இயக்குவதற்கான செலவும் அதிகரிக்கும்.
எனவே இனி வாகனங்களின் 'ஓனர்ஷிப் காஸ்ட்' மிகவும் அதிகமாக இருக்கும். இதன் காரணமாக புதிய வாகனங்களை வாங்கும் முடிவை பலர் தள்ளி போடுவதற்கோ அல்லது கை விடுவதற்கோ வாய்ப்புகள் உள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எனவே வரும் மாதங்களில் வாகன விற்பனையில் சற்று சுணக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications