இந்தியர்களை பெருமைப்பட வைத்த மஹிந்திரா.. உலகிலேயே இது தான் முதல் முறை!
மஹிந்திரா நிறுவனத்தை இந்தியாவிலேயே கூட பெரும்பான்மையான வாடிக்கையாளர்கள் கார்களுடன் தான் தொடர்புபடுத்தி அறிந்திருப்போம். ஆனால் சர்வதேச அளவில் வேறொரு தயாரிப்பிற்காக மஹிந்திரா மிகவும் பிரபலம். அது வேறெதுவும் இல்லை, ட்ராக்டர்கள் தான். இந்த நிலையில் உலகளவில் ட்ராக்டர்கள் தயாரிப்பில் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது மஹிந்திரா.
தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை மொத்தமாக 70 லட்சம் ட்ராக்டர்களைத் தயாரித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது மஹிந்திரா. இதில் சிறப்பான விஷயம் என்னவென்றால், உலகளவில் இந்த மைல்கல்லை எட்டும் முதல் நிறுவனம் மஹிந்திரா தான். ஆம், உலகிலேயே ட்ராக்டர் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கிறது மஹிந்திரா. கடந்த பல ஆண்டுகளாகவே முதலிடத்தில் இருந்து வரும் மஹிந்திராவிற்கு, இந்த விற்பனை மைல்கல் மற்றொரு மகுடமாகச் சேர்ந்திருக்கிறது.

மஹிந்திரா குழுமத்தின் ஒரு பகுதியாக மஹிந்திரா விவசாய உபகரணங்கள் பிரிவு (Mahindra Farm Equipment Business) செயல்பட்டு வருகிறது. இந்தப் பிரிவே மஹிந்திரா ட்ராக்டர்களையும் உற்பத்தி செய்து வருகிறது. மஹிந்திரா ட்ராக்டர்கள் என்று குறிப்பிடுவது, மஹிந்திரா ட்ராக்டர்களை மட்டும் அல்ல. மஹிந்திரா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஸ்வராஜ் மற்றும் மஹிந்திரா கூட்டணியில் செயல்பட்டு வரும் குரோமேக்ஸ் ட்ராக்டர்களையும் சேர்த்துத் தான்.
அனைத்து பிராண்டுகளின் ட்ராக்டர் தயாரிப்பையும் சேர்த்தே 70 லட்சம் ட்ராக்டர்கள் என்ற தயாரிப்பு மைல்கல்லை மஹிந்திரா பிராண்டு எட்டியிருக்கிறது. மஹிந்திரா ட்ராக்டர்கள் இந்தியாவில் மட்டும் விற்பனை செய்யப்படுவதில்லை. சர்வதேச அளவில் 50-க்கும் மேலான நாடுகளில் ட்ராக்டர்களை விற்பனை செய்து வருகிறது மஹிந்திரா. இன்னும் சொல்லப்போனால், இந்தியாவிற்கு அடுத்தபடியாக மஹிந்திரா ட்ராக்டர்கள் அதிகம் விற்பனையாவது அமெரிக்காவில் தான்.

உலகளவில் ஒட்டுமொத்தமாக 350-க்கும் மேலான ட்ராக்டர் மாடல்கள் மற்றும் வேரியன்ட்கள் மஹிந்திரா குழும நிறுவனங்களினால் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. விவசாய வேலைகளுக்கு நிறைய அளவுகளில், நிறைய வகைகளில் ட்ராக்டர்கள் தேவைப்படும். எனவே பலவிதமான ட்ராக்டர்கள் மஹிந்திரா குழும நிறுவனங்களால் விதவிதமாக உலகமெங்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
கடந் 2026ம் நிதியாண்டு (FY2026) மஹிந்திரா விவசாய உபகரணப் பிரிவுக்கு சிறப்பான ஒரு ஆண்டாக இருந்திருக்கிறது. கடந்த ஒரு நிதியாண்டில் மட்டும் 5.26 லட்சம் ட்ராக்டர்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. ஒரே ஆண்டில் மஹிந்திரா விற்பனை செய்த அதிகபட்ச ட்ராக்டர்களின் அளவு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
1963ம் ஆண்டு முதல் முறையாக ட்ராக்டர் தயாரிப்பில் ஈடுபடத் தொடங்கியது மஹிந்திரா. அங்கிருந்து உலகின் பெரிய ட்ராக்டர் தயாரிப்பு நிறுவனமாக, குழுமமாக மஹிந்திரா வளர்ந்திருக்கிறது. மஹிந்திரா ட்ராக்டர்கள், ஸ்வராஜ் ட்ராக்டர்களைக் கடந்து, குரோமேக்ஸ் நிறுவனத்துடனான கூட்டணியின் கீழ் ட்ராக்ஸ்டார் மற்றும் ஹிந்துஸ்தான் ட்ராக்டர்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
60 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் ட்ராக்டர்களை விற்பனை செய்து வரும் மஹிந்திரா, அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாய உபகரணங்களை விற்பனை செய்து வருகிறது. 1992ல் அந்நாட்டில் கால்பதித்து தற்போது அந்நாட்டின் முன்னணி ட்ராக்டர் விற்பனை நிறுவனங்களுள் ஒன்றாக மஹிந்திரா வலிமையாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவில் இரண்டு உற்பத்தி ஆலைகளையும் அந்நிறுவனம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலும் மும்பை, நாக்பூப், ஸகீராபாத் உட்பட பல்வேறு இடங்களில் மஹிந்திராவின் ட்ராக்டர் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய நிறுவனம் ஒன்று சர்வதேச அளவில் முன்னணியில் இருப்பது இந்தியர்களாகிய நமக்கு பெருமையான விஷயம் தான். எனினும் எண்ணிக்கை அளவில் தான் மஹிந்திரா ட்ராக்டர் விற்பனையில் முதலிடத்தில் இருக்கிறது. வருவாய் அளவில் அமெரிக்காவின் ஜான் டீர் ட்ராக்டர் தயாரிப்பு நிறுவனமே முன்னணியில் இருக்கிறது. விரைவாகவே அதனையும் மஹிந்திரா முறியடிக்கும் என விரும்புவோம்.


Click it and Unblock the Notifications