செம லுக், பிரிமீயம் அம்சங்கள்... அறிமுகமானது மஹிந்திராவின் புதிய ஸ்கார்ப்பியோ பிக்கப் டிரக்!
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய மஹிந்திரா நிறுவனத்தின் ஸ்கார்ப்பியோ என் பிக்கப் டிரக் இன்று பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. மஹிந்திரா ஸ்கார்ப்பியோ லைஃப்டைலர் (Scorpio Lifestyler) என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பிக்கப் டிரக் இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் பல்வேறு வெளிநாடுகளிலும் விற்பனைக்கு செல்ல இருக்கிறது. வரும் 2027ம் ஆண்டு ஏப்ரலில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.
2023ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் காட்சிப்படுத்திய குளோபல் பிக்கப் டிரக் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பிக்கப் டிரக் ஸ்கார்ப்பியோ என் கட்டமைக்கப்பட்ட லேடர் ஃப்ரேம் சேஸீயை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஸ்கார்ப்பியோ என் எஸ்யூவியின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும், சரக்கு வைப்பதற்கான இடத்தை கருத்தில்கொண்டு சற்று நீளம் அதிகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய பிக்கப் டிரக் வணிக பயன்பாட்டுக்கான மாடலாக இல்லாமல் மேலை நாடுகளில் வரவேற்பை பெற்ற தனிநபர் பயன்பாட்டு குடும்ப வாகனமாக பயன்படுத்தும் வகையில் பிரிமீயம் பிக்கப் டிரக் மாடலாக இருக்கும். இந்தியாவில் இந்த வகை மாடல்களுக்கு பெரிய அளவிலான வரவேற்பு இல்லாவிட்டாலும் ஆஃப்ரோடு பயன்பாடு மற்றும் குடும்பத்துடன் பயணங்களுக்கான மாடலாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஸ்கார்ப்பியோ லைஃப்ஸ்டைலர் பிக்கப் டிரக் ரீஃப் (Reef), ட்ரெயில் (Trail) மற்றும் (Valley) என மூன்று மாடல்களில் வர இருக்கிறது. இந்த புதிய பிக்கப் டிரக்கில் வழங்கப்பட உள்ள எஞ்சின் விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. அது விற்பனைக்கு அறிமுகம் செய்யும்போதுதான் தெரியவரும்.

அதேநேரத்தில், 2.2 லிட்டர் எம்ஹாக் டீசல் எஞ்சின் மற்றும் 2.0 லிட்டர் எம்ஸ்டாலியன் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது. மேலும், 4 வீல் டிரைவ் சிஸ்டம், ஆஃப்ரோடு பயன்பாட்டு தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெறும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் எதிர்பார்க்கலாம்.
இந்த புதிய பிக்கப் டிரக்கில் இரண்டு இருக்கை வரிசை அமைப்பு உள்ளதால், ஓட்டுனரை சேர்த்து 5 பேர் பயணிப்பதற்கான டபுள் கேபினுடன் வந்துள்ளது. மேலும், சொகுசான இருக்கைகள், புதிய டிசைனிலான சென்டர் கன்சோல், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தனிநபர் பயன்பாட்டு பிக்கப் டிரக் சந்தையில் மிக சொற்ப எண்ணிக்கையிலான மாடல்களே இருப்பதால், மஹிந்திராவின் இந்த புதிய பிக்கப் டிரக் வாடிக்கையாளர்களை கவரும் வாய்ப்பு உள்ளது. விலையை வைத்து ஒப்பிட முடியாவிட்டாலும், அண்மையில் வந்த புதிய டொயோட்டா ஹைலக்ஸ், இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
வரும் 2027ம் ஆண்டு ஏப்ரலில்தான் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா தெரிவித்ததுடன், அனைத்து வேரியண்ட்டுகளிலும் விலை விபரங்களை வெளியிடவில்லை. அதேநேரத்தில், வாடிக்கையாளர்களுக்கு ஒரு தெளிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக ரூ.19.79 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையிலிருந்து கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவை தொடர்ந்து ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து மற்றும் தென்ஆப்பிரிக்க நாடுகளிலும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications
