மஹிந்திரா எஸ்யூவி கார்களுக்கு செம டிமாண்ட்... ஆகஸ்ட்டில் விற்பனை 50% உயர்வு!
மஹிந்திரா நிறுவனத்தின் வாகன விற்பனை வளர்ச்சி வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக எஸ்யூவி கார் பிரிவில் வலுவான வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அந்நிறுவனத்தின் மொத்த எஸ்யூவி கார் விற்பனை 50 சதவீதம் உயர்ந்துள்ளது. அத்துடன் மொத்த வாகன விற்பனையும் 1.07 லட்சம் யூனிட்டுகளை கடந்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது மொத்த வாகன விற்பனை 42 சதவீத அதிகரித்துள்ளது.
மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விற்பனை அறிக்கையின்படி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 1,07,648 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் ஏற்றுமதியும் அடங்கும். குறிப்பாக, எஸ்யூவி உள்ளிட்ட கார்கள் மற்றும் வாகனங்கள் அடங்கிய அந்நிறுவனத்தின் யுட்டிலிட்டி வாகனப் பிரிவு (UV) இந்த வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்துள்ளது.

எஸ்யூவி விற்பனை ஜோர்
கடந்த மாதம் மஹிந்திரா நிறுவனத்தின் உள்நாட்டு எஸ்யூவி கார் விற்பனை 59,257 யூனிட்டுகளாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 39,399 எஸ்யூவிகளை மட்டுமே மஹிந்திரா விற்பனை செய்த நிலையில், தற்போது விற்பனை 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் மஹிந்திராவின் பயணிகள் வாகன விற்பனை 2,94,050 யூனிட்டுகளாக பதிவாகி உள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 2,41,337 யூனிட்டுகளாக இருந்தது. அதாவது, ஆண்டின் முதல் ஐந்து மாதங்களிலும் 22 சதவீத வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்துள்ளது.
மஹிந்திரா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ஸ்கார்ப்பியோ-N மற்றும் பிஇ6 ஸ்போர்டெக் ஆகிய மாடல்களுக்கு வாடிக்கையாளர்களிடம் வலுவான வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாக எஸ்யூவி பிரிவில் நிறுவனத்தின் விற்பனை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.
வர்த்தக வாகன விற்பனை
எஸ்யூவி கார்கள் மட்டுமின்றி, மஹிந்திராவின் வர்த்தக வாகனப் பிரிவும் ஆகஸ்ட் மாதத்தில் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. உள்நாட்டில் வர்த்தக வாகன விற்பனையானது 27,415 யூனிட்டுகளாக பதிவாகி உள்ளது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் 22 சதவீத வளர்ச்சியாகும்.
குறிப்பாக 2 டன்னுக்கு குறைவான இலகு ரக வாகனப் பிரிவில் 3,999 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 37 சதவீத வளர்ச்சியாக பதிவாகி உள்ளது. மேலும், 2 முதல் 3.5 டன் வரையிலான இலக ரக வாகனப் பிரிவில் 23,416 யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், விற்பனை 20 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
ஏற்றுமதியும் அதிகரிப்பு
உள்நாடு மட்டுமின்றி மஹிந்திராவின் ஏற்றுமதி எண்ணிக்கையும் நல்ல வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 6,054 வாகனங்களை மஹிந்திரா ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 3,548 வாகனங்கள் மட்டுமே ஏற்றுமதி செய்த நிலையில், தற்போது 71 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
மூன்று சக்கர வாகனப் பிரிவில் ஆகஸ்ட் மாத விற்பனை 14,922 யூனிட்டுகளாக பதிவானது. இது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடுகையில் 42 சதவீத வளர்ச்சியாகும். வரும் பண்டிகை காலத்தில் எஸ்யூவி கார்களுக்கு வலுவான தேவை ஏற்படும் என்பதால், விற்பனை மேலும் ஏற்றும் பெறும் என்ற நம்பிக்கையில் மஹிந்திரா உற்சாகமாக தனது வர்த்தக இலக்குகளில் கவனம் செலுத்தி வருகிறது.


Click it and Unblock the Notifications

