அடுத்த வாரம் அறிமுகமாகிறது மஹிந்திரா தார் 3 டோர் ஃபேஸ்லிஃப்ட் மாடல்?
இந்தியாவில் ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக மஹிந்திரா தார் உள்ளது. ஏற்கனவே 3 டோர் தார் பல ஆண்டுகளாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நிலையில், அதன் தோற்றத்தை மேலும் நவீனப்படுத்தும் வகையில் புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலை மஹிந்திரா விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
முக்கியமாக, புதிய தார் 3 டோர் மாடலில் அதன் 5 டோர் தார் ராக்ஸ் எஸ்யூவியின் வடிவமைப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளன. தற்போது சோதனையில் இருக்கும் கார்களின் புகைப்படங்கள் மற்றும் சமீபத்திய தகவல்கள் மூலமாக இந்த மாற்றங்கள் குறித்து ஓரளவு தெரியவந்துள்ளது.

புதிய தாரில் அதிக கவனம் செலுத்தப்பட்டிருப்பது முன்பக்க வடிவமைப்பில்தான். தற்போதைய மாடலில் இருந்து மாறுபட்டு, வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட்கள் கிரில் உடன் ஒரே தளத்தில் பொருத்தப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹெட்லைட்டுக்குள் C வடிவ எல்இடி டிஆர்எல் இடம்பெறலாம். இந்த வடிவமைப்பு தார் ராக்ஸ் மாடலை நினைவுபடுத்தும் வகையில் இருக்கும். இதன் மூலம் 3-டோர் தாருக்கு ஏற்கனவே இருக்கும் முரட்டுத்தனமான தோற்றத்துடன், சற்று நவீனமான தோற்றமும் கிடைக்கும்.
முன்புறத்தில் கிரில் பகுதியிலும் மாற்றங்கள் வர உள்ளன. புதிய கிரில் வடிவமைப்பு, மாற்றியமைக்கப்பட்ட முன்பக்க பம்பர் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்களுடன் இணைந்து புதிய தோற்றத்தை வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தாரின் அடிப்படை பெட்டி போன்ற பாக்ஸி டிசைன் தொடர்ந்து இடம்பெறும் என்றாலும், பக்கவாட்டு பகுதியில் புதிய அலாய் வீல் கொடுக்கப்படும். சோதனை ஓட்ட கார்களில் காணப்பட்ட வீல் வடிவமைப்பு தார் ராக்ஸ் பயன்படுத்தும் வீல்களை ஒத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பின்புறத்திலும் சிறிய அளவிலான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தற்போதைய செங்குத்தான டெயில் லேம்ப் வடிவம் தொடர்ந்தாலும், அதன் உள்ளே இருக்கும் லைட்டிங் கிராஃபிக்ஸ் மற்றும் பம்பர் ஆகியவற்றில் மாற்றங்கள் செய்யப்படலாம். புதிய கலர் ஆப்ஷன்களும் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.
தோற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டாலும், எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் விஷயத்தில் பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய 3 எஞ்சின் ஆப்ஷன்களே தொடர்ந்து பயன்படுத்தப்படலாம். இதில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் 152 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும். அடுத்து 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் 132 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்குகிறது. 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 119 பிஎச்பி பவரை வழங்குகிறது.
இந்த எஸ்யூவியில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தொடர்ந்து கிடைக்கும். 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜின்களுடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். 4x4 வசதியும் இந்த இரண்டு எஞ்சின் ஆப்ஷன்களுடன் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2025ம் ஆண்டு மஹிந்திரா தார் 3 டோர் மாடலுக்கு ஒரு அப்டேட் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒரு குறிப்பிடத்தக்க டிசைன் அப்டேட் கொடுக்கப்பட உள்ளது. தார் ராக்ஸ் எஸ்யூவியின் வடிவமைப்புக்கு நெருக்கமாக கொண்டு வரும் வகையில் புதிய தார் 3 டோர் மாடலின் மாற்றங்கள் இருக்கும்.
சமீபத்திய தகவல்களின்படி, புதிய மஹிந்திரா தார் 3 டோர் ஃபேஸ்லிஃப்ட் இந்த மாத இறுதியில், அதாவது அடுத்த வாரமே இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்குப் பிறகே வேரியண்ட் வாரியான வசதிகள், விலை மற்றும் முழுமையான மாற்றங்கள் குறித்த விபரங்கள் தெரியவரும்.


Click it and Unblock the Notifications


