இந்திய இராணுவத்திற்காக மஹிந்திரா உருவாக்கிய சூப்பர் எஸ்யூவி.. நம்மளும் வாங்க முடியுமா?
பார்க்கவே வித்தியாசமாக இருக்கும் இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி மாடலை வாங்க வேண்டும் என்ற ஆவல் உங்களுக்கும் எழுகிறதா. இது தார் ராக்ஸ் மாடலை அடிப்படையாக்க கொண்ட ஒரு எஸ்யூவி மாடல் தான். ஆனால் இதனை நாம் வாங்க முடியாது. ஏனென்றால் இதனை இந்திய இராணுவத்திற்காக மஹிந்திரா நிறுவனம் பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கிறது.
இராணுவப் பயன்பாட்டிற்காக மஹிந்திரா பிரத்தியேக கார் ஒன்றை உருவாக்குது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு அர்மாடோ, மார்க்ஸ்மேன் மற்றும் ஸ்கார்பியோ கிளாஸிக் ஆகிய எஸ்யூவி மாடல்களையும் இந்திய இராணுவத்திற்காக மஹிந்திரா பிரத்தியேகமாக உருவாக்கியிருக்கிறது. அந்த வரிசையில் புதிதாக இணைகிறது இந்த தார் ராக்ஸ் அடிப்படையிலான ATV (All Terrain Vehicle). இந்தப் புதிய எஸ்யூவி மாடலின் சிறப்பம்சங்களை இங்கே நாம் பார்க்கலாம்.

முகப்புப் பக்கத்தில் இருந்து தொடங்கலாம். ஸ்டாண்டர்டு தார் ராக்ஸ் மாடலில் கொடுக்கப்பட்டிருக்கும் அதே LED முகப்புவிளக்குகள் மற்றும் ஆறு ஸ்லாட்கள் கொண்ட கிரில் தான் இந்த புதிய ATV மாடலிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பம்பர்கள் ஸ்டாண்டர்டு மாடலில் இருப்பதை விட பெரிதாகவும் ரக்கடாகவும் இருப்பதுடன், மற்ற வாகனங்களை இழக்கும் வகையிலான வின்ச்சையும் கொண்டுள்ளது.
விண்டுஷீல்டுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுக்கும் வகையில் அதற்கு மேலே மெட்டல் டியூப் ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதிலேயே விளக்குகளைப் பொறுத்திக் கொள்வதற்கான மவுண்டுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. சாலை வசதிகள் இல்லாத இடங்களில் ரிப்பேர்களுக்கு உதவ பானெட்டில் ஃபார்ம் ஜேக் (Farm Jack) ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக டோர்களுக்குப் பதிலாக மெட்டல் பைப்புகளால் ஆன டோர்களை இந்த ATV மாடலில் மஹிந்திரா கொடுத்துள்ளது. ஒட்டுமொத்தமாக காரின் எடையைக் குறைப்பதற்கு இந்த விதமான செட்டப் கொடுக்கப்பட்டிருப்பதோடு, இராணுவ வீரர்கள் எளிதாக வாகனத்தின் உள்ளேயும் வெளியேயும் எளிதாக ஏறி இறங்கும் வகையிலும் இந்த மெட்டல் பைப் டோர் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல் இந்த இராணுவப் பயன்பாட்டு வாகனத்தில் ரூஃபையும் மஹிந்திரா கொடுக்கவில்லை. அதற்கு மாற்றாக ரோல் கேஜும், அதற்கு மேலே மெஷின் துப்பாக்கியை பொறுத்தும் வகையிலான செட்டப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன் எளிதாக ரூஃப் அணுகும் வகையில் இடவசதியையும் கொடுக்கப்பட்டிருக்கிறது. காரின் டோர் ஹின்ஜ் பாயிண்ட்களுக்குப் பதிலாக கிராப் ஹேண்டில்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அனைத்து விதமான பாதைகளையும் எதிர்கொள்ளும் வகையில் ஆல் டெரைன் டயர்களுடன் கூடிய 18 வீல்களை இந்த ATV மாடலில் மஹிந்திரா கொடுத்துள்ளது. சாதாரண ஆஃப்-ரோடு எஸ்யூவியிலேயே சிறப்பான கிரௌண்டு கிளியரன்ஸ் கொடுக்கப்படும் நிலையில் இந்த வாகனத்தில் கொடுக்காமல் இருக்குமா. எனவே மிகச்சிறப்பான கிரௌண்டு கிளியரன்ஸை இந்த ATV-யில் மஹிந்திரா கொடுத்துள்ளது.
காரின் மெக்கானிக்கல் பாகங்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த வாகனத்திற்கு அண்டர்பாடி ப்ரொடெக்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. காரின் பின்பக்கம் இரண்டு ஸ்பேர் வீல் கேரியர்களுடன், இரண்டு ஜெர்ரி கேன் ஹோல்டர்களையும் கொடுத்துள்ளது. இந்த ஜெர்ரி கேன்கள் காரின் ரேஞ்சை உயர்த்துகின்றன. காரின் பின்பக்க ஃபெண்டரில் MOLLE (Modular Lightweight Load-carrying Equipment) ஸ்டோரேஜும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த தார் ராக்ஸ் அடிப்படையிலான ATV வாகனத்தில் தார் ராக்ஸ் மாடலில் பயன்படுத்தப்பட்டு வரும் 2.2 லிட்டர் டீசல் இன்ஜினே கொடுக்கப்பட்டுள்ளது. 6 ஸ்பீடு டார்க் கன்வர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த இன்ஜினானது 172 hp பவர் மற்றும் 400 Nm டார்க்கை உற்பத்த செய்யும் திறனைக் கொண்டுள்ளது. இந்த வாகனத்தில் 4X4 டிரைவ்ட்ரெயினையும் மஹிந்திரா கொடுத்திருக்கிறது.
காரின் உள்ளே ஆர்மி கிரீன் நிறத்திலான சீட்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. டேஷ்போர்டு ஸ்டாண்டர்டு கார் ராக்ஸ் மாடலில் இருப்பதைப் போலவே கொடுக்கப்பட்டிருக்கும் என்றே தெரிகிறது. முதலில் இந்த வாகனத்தை இந்திய இராணுவத்திற்கு ட்ரையல் காண்பிக்கவிருக்கிறது மஹிந்திரா. அதனைத் தொடர்ந்து இராணுவத்தின் தேவைக்கேற்ப இந்த ATV மாடலைத் தயாரிக்கவிருப்பதாகத் தெரிவித்துள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா இராணுவத்திற்கு உருவாக்கும் வாகனங்களை நாம் பயன்படுத்த முடியாது என்றாலும் அதினை பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இல்லாதவர்கள் இருக்க முடியாது. இந்திய இராணுவத்திற்கான வாகனத்தை இந்திய ராணுவமே தயாரிக்கிறது என்பது சிறப்பான விஷயம். அனைத்து விதங்களிலும் மேம்பட்ட மற்றும் கடினமான வாகனங்களாகவே இராணுவத்திற்கு தயாரிக்கப்படும் வாகனங்கள் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications