எஸ்யூவின்னா மஹிந்திரா தான்.. டாடா, டொயோட்டாவை எல்லாம் தூக்கி சாப்ட்ருச்சு.. இப்படி ஆகும்னு நினைக்கலையே
எஸ்யூவி பிரிவிலேயே கணிசமான அளவில் கார்கள் விற்பனை செய்யும் பிரிவாக 4.5 மீ முதல் 4.8 மீ வரையிலான எஸ்யூவி பிரிவு இருந்து வருகிறது. செடான்களுக்கு இணையான அளவில் இந்தப் பிரிவில் இந்தியாவில் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரே ஒரு வித்தியாசம், செடான்கள் குறைவான விலையில் இருந்த கிடைக்கின்றன. ஆனால் இந்த 4.5மீ அளவிற்கு மேலான எஸ்யூவிக்கள் சற்று ப்ரீமியமாக அதிக விலையிலேயே விற்பனை செய்யப்பட்ட வருகின்றன.
இந்தப் பிரிவில் அதிகம் விற்பனை செய்யப்படும் ஒரு காராக மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாஸிக்/ N மாடல் இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் சுமார் 14,719 யூனிட்டுகள் அளவிற்கு ஸ்கார்பியோ கார்களை மஹிந்திரா இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது இது 5.25 சதவீதம் அளவிற்குக் குறைவு தான்.

முதலிடத்தில் மட்டுமல்ல, இந்தப் பிரிவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களிலும் மஹிந்திராவின் எஸ்யூவிக்களே இருக்கின்றன. இரண்டாவது இடத்தில் 8,630 யூனிட்டுகள் விற்பனையுடன் XUV 7XO எஸ்யூவியும், மூன்றாவது இடத்தில் 3,242 யூனிட்டுகள் விற்பனையுடன் மஹிந்திராவின் XEV 9S எலெக்ட்ரிக் எஸ்யூவியும் உள்ளது. இந்தாண்டு ஜனவரி மாதம் தான் மேம்படுத்தப்பட்ட XUV 7XO ஃபேஸ்லிப்டை மஹிந்திரா விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதனால் இந்த எஸ்யூவியின் விற்பனை 26.71 சதவீதம் உயர்ந்திருக்கிறது.
இந்த மூன்று கார்களுடன் மஹிந்திராவின் மற்றொரு எலெக்ட்ரிக் எஸ்யூவி காரான XEV 9e இந்தப் பிரிவில் 1,611 யூனிட்டுகள் விற்பனையுடன் ஆறாம் இடத்தில் இருக்கிறது. இந்த நான்கு மஹிந்திரா எஸ்யூவிக்களும் சேர்ந்து 28,202 யூனிட்டுகள் கடந்த ஏப்ரல் மாதம் விற்பனையாகியிருக்கின்றன. 4.5 மீ முதல் 4.8 மீ வரையிலான எஸ்யூவி பிரிவில் இது சுமார் 76.11 சதவீதம் ஆகும். அதாவது இந்தப் பிரிவில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நான்கு கார்களில் மூன்று மஹிந்திராவினுடையதாக இருக்கிறது.

சப்-காம்பேட் எஸ்யூவி மற்றும் மிட்-சைஸ் எஸ்யூவிக்கள் பிரிவில் ஆதிக்கம் செலுத்துவதைப் போலவே இந்த பெரிய எஸ்யூவி பிரிவிலும் மஹிந்திரா முழுமையாக ஆதிக்கம் செய்து வருவதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. மஹிந்திராவிற்கு அடுத்தபடியாக இந்தப் பிரிவில் அதிக கார்களை விற்பனை செய்வது டாடா மோட்டார்ஸ் தான்.
இந்த பெரிய எஸ்யூவி பிரிவில் ஹேரியர், ஹேரியர் EV மற்றும் சஃபாரி ஆகிய மூன்று கார் மாடல்களை டாடா விற்பனை செய்து வருகிறது. இந்த மூன்று எஸ்யூவிக்களும் சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 4,012 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இது இந்தப் பெரிய எஸ்யூவி பிரிவின் ஒட்டுமொத்த விற்பனையில் 10.83 சதவீதம் ஆகும்.
மூன்றாவது இடத்தில் ஃபார்ச்சூனர் என்ற ஒரேயொரு எஸ்யூவியுடன் டொயோட்டா இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் சுமார் 2,253 ஃபார்ச்சூனர் எஸ்யூவிக்களை அந்நிறுவனம் விற்பனை செய்திருக்கிறது. இந்த நிறுவனங்களைத் தவிர்த்து எம்ஜி மோட்டார் நிறுவனம் ஹெக்டர் மற்றும் ஹெக்டர் பிளஸ் எஸ்யூவிக்களை 1,297 யூனிட்டுகள் விற்பனை செய்துள்ளது.
ஹூண்டாய் (அல்கஸார்), ஜீப் (காம்பஸ், மெரிடியன்), ஸ்கோடா (கோடியாக்), ஃபோக்ஸ்வாகன் (டேரான், டிகுவான்) ஆகிய நிறுவனங்களும் இந்தப் பிரிவில் கணிசமான அளவில் கார்களை விற்பனை செய்து வருகின்றன. கடைசி இடத்தில் சிட்ரனின் C5 ஏர்கிராஸ் எஸ்யூவி இருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்தக் கார் ஒரு யூனிட் கூட இந்தியாவில் விற்பனையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தப் பெரிய எஸ்யூவிக்களைப் பொறுத்தவரை மஹிந்திரா தான் கிங். எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கள் மூலமாக மட்டுமின்றி எரிபொருள் எஸ்யூவிக்கள் மூலமாகவும் தற்போது வாடிக்கையாளர்களை மஹிந்திரா கவரத் தொடங்கியிருக்கிறது. மஹிந்திராவின் இரண்டு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை ஆகும் அளவிற்குக் கூட மற்ற நிறுவனங்களின் எரிபொருள் எஸ்யூவிக்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுவதில்லை. இதுவே இந்தப் பிரிவில் மஹிந்திரா எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதைக் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications