ரூ.8 லட்சத்தில் சிறிய எலெக்ட்ரிக் கார்... டாடா டியாகோ போட்டியாளரை களமிறக்கும் மாருதி?
இந்தியாவில் குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார் வாங்க வேண்டும் என்றால், தற்போது டாடா டியாகோ EV முக்கியமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கிறது. இந்த நிலையில், மாருதி சுஸுகியும் இந்த பிரிவில் நேரடியாக களமிறங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரூ.8 லட்சம் ஆரம்ப விலையில் சிறிய எலெக்ட்ரிக் காரை அந்நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலான இ விட்டாரா ஏற்கனவே இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால், அது சற்றே பிரீமியம் வாடிக்கையாளர்களை குறிவைக்கும் வகையில் நெக்ஸா ஷோரூம்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. அடுத்ததாக வரவுள்ளதாக கூறப்படும் சிறிய எலெக்ட்ரிக் கார் அரேனா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும்.

சிட்டி கார்
இந்த புதிய மாடலை வைத்து மாருதியின் சிறிய வகை கார் வாங்க வரும் வாடிக்கையாளர்களையும் எலெக்ட்ரிக் கார் வாங்கும் வாய்ப்பை வழங்க முடியும். குறிப்பாக நகர்ப்புற பயன்பாட்டை மையமாக வைத்து இந்த கார் உருவாக்கப்பட்டு வருகிறது. தினசரி அலுவலகப் பயணம், குடும்ப பயன்பாடு, நகரத்திற்குள் குறுகிய மற்றும் நடுத்தர தூர பயணம் போன்ற தேவைகளுக்கு ஏற்ற வகையில் இதன் பேட்டரி மற்றும் செயல்திறன் இருக்கும்.
பட்ஜெட் கார்
தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, இந்த புதிய மாருதி எலெக்ட்ரிக் காருக்கு ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயித்து கொண்டு வரும் வாய்ப்பு உள்ளது. விலையை சவாலாக நிர்ணயிக்கும் வகையில், உள்நாட்டு உதிரி பாகங்களை பயன்படுத்துவதுடன், அதிக திறன் வாய்ந்த பேட்டரி பேக்கிற்கு பதிலாக காம்பேக்ட் வகை பேட்டரி பேக் பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.
மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் 250 முதல் 315 கி.மீ வரையிலான ரேஞ்ச் வழங்கும் வகையில் சந்தைக்கு கொண்டு வருவதற்கு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது நீண்ட தூர பயணத்துக்கான பிரீமியம் எலெக்ட்ரிக் காராக இல்லாமல், அன்றாட நகரப் பயன்பாட்டை மையமாகக் கொண்ட மாடலாக இருக்கும் என்பதையே காட்டுகிறது.
ரேஞ்ச்
இதனை ஒப்பிடும்போது, 2026 மாடலாக வந்த டாடா டியாகோ எலெக்ட்ரிக் கார் தற்போது 19.2kWh மற்றும் 24kWh பேட்டரி ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படுகிறது. அதன் ARAI ரேஞ்ச் 226 கி.மீ முதல் 285 கி.மீ வரை உள்ளது. இதனால், மாருதியின் புதிய எலெக்ட்ரிக் கார் சந்தைக்கு வந்தால், டியாகோ எலெக்ட்ரிக் காருக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும்.
ஏற்கனவே உள்ள பெட்ரோல் மாடல்களின் அடிப்படையில் இல்லாமல், இதனை முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் கார் மாடலாக மாருதி உருவாக்கி வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இதற்காக பிரத்யேக கட்டமைப்புக் கொள்கையும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் பேட்டரியை பொருத்தும் விதம், கேபின் இடவசதி மற்றும் எலெக்ட்ரிக் பவர்டிரெயின் ஆகியவற்றை காரின் தேவைக்கு ஏற்ப வடிவமைக்க வாய்ப்பு ஏற்படும்.
பேட்டரி பேக்
மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி அண்மையில் ஜப்பானில் e Sky என்ற புதிய எலெக்ட்ரிக் காரை வெளியிட்டது. இந்த மாடலில் 26kWh பேட்டரி மற்றும் 310 கி.மீ வரை ரேஞ்ச் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவுக்காக உருவாக்கப்படும் புதிய மாருதி எலெக்ட்ரிக் காருக்கும், e Sky எலெக்ட்ரிக் காருக்கும் தொடர்பு இருப்பதாக கருதமுடியாது.
இ விட்டாரா எலெக்ட்ரிக் காரைப் போலவே இந்த எலெக்ட்ரிக் காரையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து, எதிர்காலத்தில் ஏற்றுமதிக்கும் பயன்படுத்தும் திட்டம் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், இதன் அடிப்படையில் டொயோட்டா பிராண்டிலும் ஒரு மாடல் உருவாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவும் தற்போது உறுதி செய்யப்படவில்லை.
மாருதி சுஸுகி இந்த காரை உண்மையில் ரூ.8 லட்சத்திற்குள் கொண்டு வர முடிந்தால், இந்தியாவின் குறைந்த விலை எலெக்ட்ரிக் கார் சந்தையில் போட்டி அதிகரிக்கும். அத்துடன், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தைவிட விற்பனைக்கு பின் சிறப்பான சேவையை வாடிக்கையாளர்கள் பெறும் வாய்ப்பும் உள்ளது.
Source: Fortune India


Click it and Unblock the Notifications

