ஆடிப் போன ஆட்டோமொபைல் நிறுவனங்கள்.. மாருதியால மட்டும் தான் இப்படி சம்பவம் பண்ண முடியும்!
இந்தியாவில் எத்தனை நிறுவனங்கள் விதவிதமாக கார்களை வெளியிட்டாலும், நிறைய வாடிக்கையாளர்கள், குறிப்பாக முதல் முறை கார் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து மாருதி கார்களையே தேர்ந்தெடுப்பதற்கு சில முக்கியக் காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சர்வீஸ் நெட்வொர்க் மற்றும் சிறப்பான சர்வீஸ் அனுபவம். இந்த நிலையில் விற்பனையில் மட்டுமின்றி கார்களுக்கு விற்பனைக்குப் பின்னான சர்வீஸ் வழங்குவதிலும் புதிய மைல்கல்லை எட்டியிருக்கிறது மாருதி சுஸூகி.
கடந்த 2026ம் நிதியாண்டில் மட்டும் (2025 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான ஓராண்டு காலம்) சுமார் 2.84 கோடி வாகனங்களை சர்வீஸ் செய்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது மாருதி சுஸூகி. இது தான் இருப்பதிலேயே அதிகளவு மாருதி சர்வீஸ் செய்த வாகன அளவாகும். ஒவ்வொரு நிதியாண்டும் இது தொடர்ந்து உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது.

2022ம் நிதியாண்டில் இந்த அளவு 1.9 கோடி வாகனங்களாக இருந்தது. தொடர்ந்து 2023 மற்றும் 2024ம் நிதியாண்டுகளில் 2.29 கோடி மற்றும் 2.51 கோடி வாகனங்களாக உயர்ந்த நிலையில், கடந்த நிதியாண்டு 2.84 கோடி வாகன அளவை எட்டியிருக்கிறது. இதன் மூலம் ஏன் இந்தியாவில் முன்னணி வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக இருக்கிறோம் என மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது மாருதி சுஸூகி.
எப்படி தொடர்ந்து சிறப்பான சேவை வழங்குவது மாருதியால் சாத்தியப்படுகிறது என்ற கேள்விக்கு, ஒரே ஒரு பதிலை மட்டுமே அந்நிறுவனம் வைத்திருக்கிறது. அதாவது விற்பனை உயர்வதற்கு முன்னாள் அதற்கான சர்வீஸ் நெட்வொர்க் மேம்பட்டிருக்க வேண்டும் என்பதே அது. விற்பனை ஆகட்டும் பின்னர் சர்வீஸை பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்காமல், அதிக விற்பனையை அடைவதற்கு முன்பே அதற்கான சர்வீஸ் நெட்வொர்க்கை செயல்படுத்தத் தொடங்குவது சிறப்பான அனுகுமுறை.

பெருநகரங்களில் மட்டுமின்றி இப்போது சிறிய கிராமக் கூட்டங்களுக்கு அருகிலும் கூட மாருதியின் சர்வீஸ் செண்டர்கள் மற்றும் ஷோரூம்களை நீங்கள் பார்க்க முடியும். இதன் மூலம் இந்தியாவின் அடியாழம் வரை ஊடுருவியிருக்கிறது மாருதியின் விற்பனை மற்றும் சர்வீஸ் நெட்வொர்க். மேலும், கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது இந்தாண்டு வாகன விற்பனை பெரிதாக உயர்ந்திருக்கும் நிலையில், அதற்கு இணையாக சர்வீஸ் நெட்வொர்க்கையும் மேம்படுத்த மாருதி திட்டமிட்டிருக்கிறது.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் மொத்தமாக 1.79 லட்சம் கார்களையே இந்தியாவில் விற்பனை செய்திருந்தது மாருதி. அதுவே கடந்த ஏப்ரல் மாதம் 2.39 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இது உள்நாட்டு விற்பனை மட்டுமல்ல, வெளிநாட்டு ஏற்றுமதியையும் சேர்த்துத் தான். இந்த விற்பனை அளவு உயர்ந்திருப்பதற்கு ஏற்ப சர்வீஸ் நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யவும் மாருதி திட்டமிட்டுள்ளது.
தற்போது இந்தியா முழுவதும் 5,926 சர்வீஸ் செண்டர்களை செயல்படுத்தி வருகிறது மாருதி. இதனை 2030-31ம் ஆண்டிற்குள் 8,000 செண்டர்களாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. அப்படியென்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக 2,074 சர்வீஸ் செண்ட்களை அமைக்க மாருதி திட்டமிட்டுள்ளது. பெரிய சர்வீஸ் நெட்வொர்க் இருப்பது மட்டுமின்றி குறைவான விலையில் கார் சர்வீஸை வழங்குவதும் மாருதியின் சிறப்பம்சங்களில் ஒன்றாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதியை அப்படியே பின்பற்றி குறைவான விலையில் கார்களை வெளியிட்டால் இந்திய சந்தையில் வெற்றி பெற்று விடலாம் என நிறைய நிறுவனங்கள நினைத்திருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் மாருதியின் முதுகெலும்பாக இருக்கும் இந்த சர்வீஸ் நெட்வொர்க்கைப் பற்றி யோசித்ததாகத் தெரியவில்லை. தல தோனியின் வார்த்தைகளில் சொன்னால், சர்வீஸ் செண்டர்கள் என்ற உழைப்பிற்கு கிடைக்கும் பை-ப்ராடக்ட் தான் மாருதியின் அதிக விற்பனை என்பது. இதனை உணர்ந்தால் அனைத்து நிறுவனங்களுமே இந்திய சந்தையில் வெற்றி பெறலாம்.


Click it and Unblock the Notifications