விலை உயரும் மாருதி கார்கள்? அப்போ இனி வாங்கவே முடியாதா!
சர்வதேச பிரச்சினைகளினால் ஆட்டோமொபைல் துறையே அழுத்தத்தைச் சந்தித்து வரும் நிலையில், இந்தியாவில் செயல்பட்டு வரும் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்களும் கார்களின் விலைகளை உயர்த்தி வருகின்றன. இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி இதுவரை அந்த மாதிரி விலை உயர்வுகள் எதையும் அறிவிக்கவில்லை. ஆனால், விரைவில் மாருதியும் சிறிய கார்களின் விலைகளை உயர்த்தலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மாருதி நிறுவனத்தின் முதுகெழும்பாக இருப்பவை அதன் சிறிய ரக கார்கள் தான். செலரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட், பெலினோ மற்றும் டிசையர் ஆகியவையே பட்ஜெட் வாடிக்கையாளர்கள் மற்றும் முதல் முறை கார் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வாக இருந்து வருகிறது. தற்போது இதன் தேவை மற்றும் தயாரிப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை, ஆனால் உற்பத்தி செலவு தொடர்ந்து உயர்ந்து வருவதாகத் தெரிவித்துள்ளது மாருதி சுஸூகி.

பணமதிப்பு ஏற்ற இறக்கம், போக்குவரத்து மற்றும் விநியோகச் சிக்கல்கள் ஆகியவை கார் தயாரிப்பிற்கான உற்பத்தி செலவை உயர்த்தி வருகின்றன. சர்வதேச அளவில் நிலவும் பிரச்சினைகள் இதற்கு முக்கியக் காரணிகளாக இருக்கின்றன. இதனால் இந்தக் கூடுதல் செலவில் சிறிதளவை வாடிக்கையாளர்களுக்கும் கடத்த வேண்டிய துரதிர்ஷ்டமான சூழலில் மாருதி இருப்பதாக அந்நிறுவனத்தின் மூத்த செயல் அதிகாரியான பார்த்தோ பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் செயல்பட்டு வரும் சில மாஸ் மார்க்கெட் மற்றும் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஏற்கனவே கார்களின் விலைகளை ஏப்ரல் 1 முதல் உயர்த்தி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எம்ஜி மோட்டார், டாடா மோட்டார், பிஎம்டபிள்யூ குழுமம், மெர்சிடீஸ் பென்ஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார் மாடல்களின் விலைகளை உயர்த்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மாருதிக்கு சிறிய ரக கார்களே அதிகம் விற்பனையாகும் ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் மேற்கூறிய வகையில் பட்ஜெட் கார் வாடிக்கையாளர்களும், முதல் முறை கார் வாடிக்கையாளர்களும் மட்டுமே. சர்வீஸ் முதல் அனைத்து வகையிலும் மாருதி கார்கள் அனைவரும் வாங்கக்கூடிய வகையில் இருப்பதே அதன் சிறிய ரக கார்கள் அதிக வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்கான காரணமாக உள்ளது.
கடந்த மார்ச் மாதம் மட்டும் சுமார் 83,530 சிறிய ரக கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது மாருதி. இதுவே மார்ச் 31ல் நிறைவடைந்த கடந்த நிதியாண்டில் எடுத்துக் கொண்டால் சுமார் 9.20 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது அந்நிறுவனம். மேலும், மாருதியின் சிறிய ரக கார்களுள் ஒன்றான டிசையரே கடந்த நிதியாண்டில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கார் மாடலாகவும் இருக்கிறது.
டிசையர் செடான் மட்டும் கடந்த நிதியாண்டில் சுமார் 2.3 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது குறைவான விலையில் ஒரு நல்ல கார் வாங்க வேண்டும் என்றால் அது மாருதியிடம் மட்டுமே சாத்தியம். கடந்தாண்டு ஜிஎஸ்டி வரிக்குறைப்பு அமல்படுத்தப்பட்ட பின்பு மாருதியின் சிறிய ரக கார்களின் விலை மேலும் குறைந்தது. தற்போது ரூ.3.50 லட்சம் என்ற குறைவான விலையில் மாருதியின் எஸ்-பிரஸ்ஸோ ஹேட்ச்பேக் மாடலை வாடிக்கையாளர்கள் வாங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்னும் விலை உயர்வு அறிவிப்பை மாருதி அறிவிக்கவில்லை. ஆனால், விரைவில் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விலை உயர்வு அறிவிப்பால் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டில் துண்டு விழும் அளவிற்கு கார்களின் விலைகள் உயருமா என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். 2% முதல் 4% வரை கார்களின் விலைகளை மாருதி உயர்த்த வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டுகளிலும் இந்த அளவிற்கே கார்களின் விலைகளை அந்நிறுவனம் உயர்த்தியிருக்கிறது.


Click it and Unblock the Notifications








