எப்படியாவது முதல் கார் வாங்கிவிட துடிப்பவர்களின் முதல் சாய்ஸ் இது! 25 வருஷத்துக்கு அப்புறமும் மவுசு குறையல!
எத்தனை கார்கள் வேண்டுமானாலும் வரலாம் போகலாம்... ஆனால் இந்தியர்களின் மனதில் எப்போதும் நீங்காத இடம்பிடித்த கார் என்றால், அது மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) ஆகும். மாருதியின் விலை குறைவான ஹேட்ச்பேக் (Hatchback) வகையை சேர்ந்த காராக ஆல்டோ கடந்த 1990ஆம் காலக்கட்டத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் அளவில் சிறியதான 800சிசி என்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 1 லிட்டர் கே10 பெட்ரோல் என்ஜின் உடன் விற்பனை செய்யப்படுகிறது. இதனாலேயே, ஆல்டோ கே10 என அழைக்கப்படும் இந்த மாருதி காரின் விற்பனை இடையிடையே குறைந்தாலும் மீண்டும் அதிகரித்துவிடும். இதனை கடந்த பல வருடங்களாக பார்த்து வருகிறோம்.

அந்த வகையில், கடந்த 2025ஆம் வருடத்தில் சற்று குறைந்த ஆல்டோ கே10 காரின் விற்பனை மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. நடந்து முடிந்த கடந்த 2026 ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 10 ஆயிரத்து 856 ஆல்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, கடந்த 2025ஆம் ஆண்டில் இதே ஏப்ரல் மாதத்தில் வெறும் 5 ஆயிரத்து 606 ஆல்டோ கே10 கார்களை மட்டுமே மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில் பார்க்கும்போது, ஆல்டோ கார்களின் விற்பனை ஆனது சுமார் 94% அதிகரித்துள்ளது. அதாவது, 2025 ஏப்ரலை விட கிட்டத்தட்ட டபுள் மடங்கு அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த 2026 மார்ச் மாதத்தில் ஏப்ரலை காட்டிலும் அதிக ஆல்டோ கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்திருந்ததை கூறியே ஆக வேண்டும்.

கடந்த மார்ச் மாதத்தில் 11 ஆயிரத்து 515 ஆல்டோ கே10 கார்கள் விற்பனையாகி இருந்தன. அதனுடன் ஒப்பிடும்போது, ஏப்ரல் மாதத்தில் 659 ஆல்டோ கே10 கார்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்சமயம் விற்பனையில் இருப்பது மூன்றாம் தலைமுறை ஆல்டோ கே10 கார் ஆகும். இதனை கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் மாருதி சுஸுகி அறிமுகம் செய்தது.
அறிமுகம் செய்யப்பட்டு கிட்டத்தட்ட 4 வருடங்கள் நிறைவடைய உள்ள நிலையில், புதிய ஆல்டோ கே10 காரை அறிமுகம் செய்யும் பணிகளில் மாருதி சுஸுகி தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இதற்கிடையில், கடந்த 2024ஆம் ஆண்டின் இறுதியில் ஆல்டோ கே10 காரில் ESP எனப்படும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் வசதியானது ஸ்டாண்டர்ட் அம்சமாக மாற்றப்பட்டது.
அதாவது, அதுவரையில் கூடுதல் ஆக்ஸஸரீயாக வழங்கப்பட்டு வந்த ESP ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறியது. அதன்பின், 6-ஏர்பேக்குகள் ஆல்டோ கே10 காரின் அனைத்து வேரியண்ட்களிலும் வழங்கப்படுவது கடந்த 2025 பிப்ரவரியில் ஸ்டாண்டர்ட் அம்சமாக மாறியது. இந்த காரில் 1 லிட்டர் 3-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 66 பிஎச்பி மற்றும் 89 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
என்ஜின் உடன் ஆல்டோ கே10 காரில் 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸை பெறலாம். சிஎன்ஜி (CNG) ஆப்ஷனிலும் ஆல்டோ கே10 விற்பனை செய்யப்படுகிறது. சிஎன்ஜி ஆப்ஷனில் இந்த கார் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே கிடைக்கிறது. இந்த காரின் டாஷ்போர்டில் வழங்கப்படும் 7-இன்ச் ஸ்மார்ட்ப்ளே ஸ்டூடியோ டச் ஸ்க்ரீன் ஆனது ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதியை கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்துக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்த முக்கியமான கார்களுள் ஒன்றான ஆல்டோ அதன் புதிய ஆல்டோ கே10 வெர்சனில் தொடர்ந்து விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. கடந்த ஆண்டில் இதன் விற்பனை சற்று குறைந்திருப்பினும், 2026இல் மீண்டும் முன்னேற்றம் காண துவங்கியுள்ளது. இது வரும் மாதங்களுக்கும் தொடருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications