மாருதி கார்களில் எது நடக்க கூடாதுனு நெனைச்சமோ அது நடக்க போகுது! கார் வாங்குவது கனவாகவே போய்டும் போல!
மாருதி சுஸுகி நிறுவனம் அதன் கார்களின் விலைகளை வருகிற ஜூன் மாதம் முதல் அதிகரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் உற்பத்தி செலவை கருத்தில் கொண்டு இவ்வாறான முடிவிற்கு மாருதி சுஸுகி நிறுவனம் வந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி, இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனம். இருப்பினும், கார்களை உற்பத்தி செய்வதில் தொடர்ந்து அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவுகள் உள்ளிட்டவை மாருதி சுஸுகி நிறுவனத்தை கூட பாதிக்கின்றன என்பதுதான் இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

இதனால், மற்ற கார் நிறுவனங்களை போன்று ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியிலும் மறக்காமல் கார்களின் விலைகளை அதிகரித்துவிடும் மாருதி சுஸுகி, அந்த வரிசையில் அடுத்ததாக வருகிற ஜூன் மாதம் முதல் அதன் கார்களின் விலைகளை மீண்டும் அதிகரிக்க தயாராகி வருகிறது. வழக்கம்போல் இந்த முறையும் தொடர்ந்து அதிகரித்து வரும் செலவீனங்களையும், உயர்ந்துவரும் இந்திய ரூபாய் பண மதிப்பு இழப்பையும் விலை அதிகரிப்புக்கு காரணமாக மாருதி சுஸுகி சுட்டிக் காட்டியுள்ளது.
ஆனால், இந்த முறை மாருதி கார்களின் விலைகள் பெரிய அளவிற்கு உயர்த்தப்பட போவதில்லை. அதிகப்பட்சமாகவே ரூ.30,000 வரையில் மட்டுமே கார்களின் விலைகளை உயர்த்த மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது. விலை அதிகரிப்புக்கான காரணங்களை முடிந்தவரையில் தவிர்க்க விரும்பியதாகவும், அதனையும் தாண்டி ஏற்படும் நஷ்டங்களை ஈடுசெய்ய இந்த விலை உயர்வை கொண்டுவர வேண்டியுள்ளதாகவும் வழக்கம்போல் மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.

மாருதி சுஸுகி கார்களின் விலைகள் கார் மாடல்களை பொறுத்தும், அவற்றின் வேரியண்ட்களை பொறுத்தும் அதிகரிக்கப்பட உள்ளன. கார்களின் விலைகளை கடந்த சில மாதங்களாகவே கார் நிறுவனங்கள் உயர்த்தி வரும் நிலையில், அந்த வரிசையில் தற்போது மாருதி சுஸுகி நிறுவனமும் இணைந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்திலேயே டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்கள் அவற்றின் கார்களின் விலைகளை உயர்த்தி இருந்தன.
இந்த வகையில் டாடா மற்றும் மஹிந்திரா கார்களின் விலைகள் முறையே 1.5% மற்றும் 2.5% உயர்த்தப்பட்டன. அவற்றை தொடர்ந்து, ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்த மே மாதம் துவங்கிய பின் வெறும் 1% உயர்த்துவதாக அறிவித்து, அதன் கார்களின் விலைகளை உயர்த்தியது. இந்த வரிசையில் தற்போது மாருதி சுஸுகி இணைந்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தை போன்று மாருதி சுஸுகியும் 1% மட்டுமே அதன் கார்களின் விலைகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால்தான், கார்களின் விலைகள் அதிகப்பட்சமாகவே ரூ.30,000 வரையில் மட்டுமே உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இது மாருதி கார்களின் விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனம் அடுத்ததாக அறிமுகம் செய்ய பல புதிய கார் மாடல்களை தயார் செய்து வருகிறது. இதற்கிடையில் கொண்டுவரப்படும் இந்த விலை அதிகரிப்பானது ஏற்கனவே கூறியதுபோல் மாருதி சுஸுகி கார்களின் விற்பனையை பாதிக்கும் என கருதுகிறோம். இருப்பினும், மற்ற முன்னணி கார் நிறுவனங்களும் விலை உயர்வை அறிவித்துள்ளதால், வரும் மாதங்களில் புதியதாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications