ஃபேக்ட்ரி நாலு இருந்தும் பத்தல... இரவும் பகலுமாக ஓடும் மாருதி சுஸுகி தொழிற்சாலைகள்!
மாருதி சுஸுகி (Maruti Suzuki) கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 23.4 லட்சம் கார்களை உற்பத்தி செய்து அசத்தி உள்ளது. 2025 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2026 மார்ச் வரையிலான 2025-26ஆம் நிதியாண்டில் இத்தனை லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ள நிலையில், மாருதி சுஸுகி ஒரு நிதியாண்டில் இந்த அளவிற்கு அதிகமான கார்களை உற்பத்தி செய்தது இல்லை.
இன்னும் சொல்லப்போனால், ஜப்பானின் சுஸுகி மோட்டார் கார்பிரேஷனின் கீழ் பல்வேறு நாடுகளில் செயல்படும் நிறுவனங்களில் எது ஒன்றும் கூட ஒரு வருட காலக்கட்டத்தில் இத்தனை லட்சம் கார்களை உற்பத்தி செய்தது இல்லை. இதில் இருந்து இந்திய சந்தை எந்த அளவிற்கு பெரிய கார் சந்தை என்பதையும், அதில் மாருதி சுஸுகி எந்த அளவிற்கு ஆதிக்கம் செலுத்துகிறது. என்பதை அறிய முடிகிறது.

குறிப்பாக, மாருதி சுஸுகியின் டிசைர் (Dzire), ஸ்விஃப்ட் (Swift), எர்டிகா (Ertiga), பலேனோ (Baleno) கார்கள் ஓய்வே இன்றி தொடர்ச்சியாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. எந்த அளவிற்கு என்றால், இந்த ஒவ்வொரு மாருதி சுஸுகி கார் மாடல்களும் கடந்த ஒரு வருடத்தில் தலா 2 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த சூழலை இந்தியாவில் கடந்த பல தசாப்தங்களாக உருவாக்கி வந்ததாகவும், இதற்கு அனைத்து பணியாளர்களும், விநியோகஸ்தர்கள் மற்றும் டீலர்களும் தான் காரணம் எனவும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், சிஇஓ ஹிசாஷி தகுஜி தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய அரசாங்கத்தின் ஜிஎஸ்டி 2.0 (GST 2.0) கார்களுக்கான தேவையை தொடர்ந்து நிலையானதாக வைத்திருந்ததாகவும் ஹிசாஷி தகுஜி தெரிவித்துள்ளார்.

கார்களுக்கான தேவை அதிகமாக கிடைத்தாலும், அவற்றை உற்பத்தி செய்யும் அளவிற்கு நிறுவனத்திற்கு உற்பத்தி திறன் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் மாருதி சுஸுகி வலுவானதாக உள்ளது. ஏனெனில், மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு இந்தியாவில் மொத்தம் 4 உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. இவை ஹரியானா மாநிலத்தின் குருக்கிராம், மனேசர் மற்றும் கார்கோடா பகுதிகளிலும், குஜராத்தின் ஹன்சல்புர் பகுதியிலும் செயல்படுகின்றன.
இவை நான்கிலும் மொத்தமாக சேர்த்து வருடத்திற்கு 24 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த வகையில் பார்த்தால், மாருதி சுஸுகி கடந்த 2025-26ஆம் நிதியாண்டில் கார்கள் உற்பத்தியில் கிட்டத்தட்ட முழு கொள்ளளவை எட்டியுள்ளது. வருங்காலங்களில் இந்த 4 தொழிற்சாலைகள் மட்டும் போதாது என்பதை உணர்ந்து 5வது தொழிற்சாலையை அமைப்பதற்கான பணிகளில் ஏற்கனவே மாருதி சுஸுகி ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது.
குஜராத்தின் சனந்த் பகுதியில் அமையவுள்ள இந்த 5வது தொழிற்சாலைக்கான இடம் கையகப்படுத்தும் பணிகள் கடந்த மார்ச் மாதத்தில்தான் நிறைவு பெற்றன. முழுவதுமாக கட்டமைப்பு பணிகள் நிறைவு பெற்ற பின், இந்த 5வது தொழிற்சாலை ஆனது வருடத்திற்கு 10 இலட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
இருப்பினும், ஒட்டுமொத்தமாக வருடத்திற்கு 40 இலட்சம் கார்களை உற்பத்தி செய்யக்கூடிய அளவிற்கு திறனை வளர்த்துக் கொள்ளும் முனைப்பில் மாருதி சுஸுகி உள்ளது. ஏனெனில், மாருதி சுஸுகி கார்களின் உள்நாட்டு விற்பனை மட்டுமின்றி, வெளிநாட்டு ஏற்றுமதிகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கார்களை உற்பத்தி செய்வதில் உலகளாவிய மையமாக இந்தியாவை கருதும் நிறுவனங்களுள் சுஸுகியும் ஒன்றாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வருடத்திற்கு 23.4 லட்சம் கார்கள் உற்பத்தி என்பதே முதலில் பெரிய சாதனை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியிருக்க, வருடத்திற்கு 40 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய விரும்புவது மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிரம்மாண்டத்தை காட்டுகிறது. 40 லட்சம் கார்கள் உற்பத்தியை எட்ட இன்னும் பல வருடங்கள் ஆகும் என்றாலும், 2026-27ஆம் நிதியாண்டில் இதனை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான கார்களை மாருதி சுஸுகி உற்பத்தி செய்யும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications