இந்தியாவின் மிகப்பெரிய கார் ஆலை... 10 லட்சம் கார்களை தயாரிக்கலாம்... சாதனை படைத்த மாருதி!!
நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் ஆண்டுக்கு 2 மில்லியன் கார்களுக்கு மேல் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 23.4 லட்சம் கார்களை தயாரித்து பிரமிப்பில் ஆழ்த்தியது. உள்நாட்டு தேவை மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து கார்களை ஏற்றுமதியும் செய்து வருகிறது. எனவே, எதிர்கால வர்த்தக வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, இந்தியாவில் உள்ள தனது கார் ஆலைகளின் உற்பத்தித் திறனை மாருதி நிறுவனம் வெகுவாக உயர்த்தி வருகிறது.
அதன்படி, குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்க முடிவு செய்தது. ஏற்கனவே அங்குள்ள மாருதி சுஸுகி ஆலை வளாகத்தில் கார் தயாரிக்கும் மூன்று உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலமாக, ஆண்டுக்கு 7.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இந்த நிலையில், 3,900 கோடி ரூபாய் முதலீட்டில் நான்காவது உற்பத்தி ஆலையையும் அந்த வளாகத்தில் அமைத்துள்ளது.

அந்த வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ள இந்த நான்காவது உற்பத்தி ஆலை மூலமாக ஆண்டுக்கு 2.5 லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும். இதன்மூலமாக, ஹன்சல்பூர் தொழிற்சாலை வளாகத்தின் மூலமாக ஆண்டுக்கு 10 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் திறனை மாருதி சுஸுகி எட்டி உள்ளது. ஹன்சல்பூரில் உள்ள மாருதி சுஸுகி தொழிற்சாலை வளாகமானது உலகிலேயே சுஸுகி நிறுவனத்தின் மிகப்பெரிய கார் உற்பத்தி ஆலையாக மாறி இருக்கிறது.
கடந்த 2017ம் ஆண்டு குஜராத் மாநிலம் ஹன்சல்பூரில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆலை அமைக்கப்பட்டு உற்பத்தி துவங்கியது. முதலாவதாக மாருதி பலேனோ கார் உற்பத்தியுடன் இந்த ஆலை ஆரம்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஸ்விஃப்ட், ஃப்ரான்க்ஸ் உள்ளிட்ட முக்கிய மாடல்களின் உற்பத்தியும் இங்கு துவங்கப்பட்டது.
இந்த புதிய ஆலை மூலமாக மாருதி கார்களின் உற்பத்தி விரைவாக செய்யும் வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதனால், புக்கிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த காத்திருப்பு காலத்துடன் விரைவாக கார்களை டெலிவிரி செய்யும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன், டொயோட்டாவில் விற்பனை செய்யப்படும் சில ரீபேட்ஜ் கார்களையும் விரைவாக சப்ளை செய்யவும், வெளிநாடுகளுக்கு குறித்த நேரத்தில் ஏற்றுமதி செய்யும் வாய்ப்பும் கிடைக்கும். மாருதி சுஸுகியின் முதல் எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலான இ விட்டாரா உள்ளிட்ட புதிய மாடல்களை உற்பத்தி செய்யும் மையமாகவும் இது இருக்கும்.
குஜராத் ஹன்சல்பூர் கார் தொழிற்சாலை மட்டுமின்றி, ஹரியானாவில் உள்ள கார்கோடா தொழிற்சாலையும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆலையும் முழு அளவில் உற்பத்தித் திறனை எட்டிய பிறகு ஆண்டுக்கு 10 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறனை எட்டும்.
இந்த நிலையில், ஆண்டுக்கு 40 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் தனது கார் ஆலைகளில் உற்பத்தித் திறனை அதிகரிக்க பெரிய அளவில் முதலீடு செய்து வருகிறது மாருதி சுஸுகி. தனது மார்க்கெட் பங்களிப்பை ஸ்திரமாக கொண்டு செல்வதற்கும், காத்திருப்பு காலத்தை குறைத்து மிக விரைவாக கார்களை டெலிவிரி செய்யும் நோக்கத்துடன் மாருதி தீவிரமான திட்டங்களோடு செயலாற்றி வருகிறது.


Click it and Unblock the Notifications