மாருதி கார்களை இந்தவொரு காரணத்திற்காகவே கண்ணை மூடிட்டு வாங்கலாம்! ஒரே வருடத்தில் நடந்த மாற்றம்
மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் (Maruti Suzuki India Limited) நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 502 சர்வீஸ் மையங்களை அமைத்துள்ளது. இந்தியாவில் கார்களுக்கான சேவைகளை வழங்குதில் பெரிய நெட்வொர்க் உடன் செயல்படும் மாருதி சுஸுகி கடந்த நிதியாண்டில் மேலும் 502 சர்வீஸ் செண்டர்கள் மூலமாக தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ளது.
இதன் மூலமாக, நாடு முழுவதும் மாருதி சுஸுகி சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கை 5,926 என்கிற இமாலய எண்ணிக்கையை எட்டியுள்ளது. இந்த 5,926 சர்வீஸ் மையங்கள் இந்தியாவில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பகுதிகளில் அமைந்துள்ளன. இவை இல்லாமல், வாகனங்களில் நடமாடும் சர்வீஸ் மையங்களையும் மாருதி சுஸுகி வழங்கி வருகிறது. மாருதி சுஸுகியின் இந்த நடமாடும் சர்வீஸ் மையங்கள் நேரடியாக கஸ்டமர்களின் இருப்பிடத்திற்கே சென்று பழுதுப்பார்ப்பு சேவையை வழங்குகின்றன.

மாருதி சுஸுகி கார்கள் அரேனா (Arena) மற்றும் நெக்ஸா (Nexa) என இரு விதமான டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதில் அரேனா ஆனது விலை குறைவான மாருதி சுஸுகி கார்கள் கிடைக்கும் ஷோரூமாக விளங்குகிறது. அதுவே, நெக்ஸா ஆனது விலைமிக்க பிரீமியம் தரத்திலான மாருதி சுஸுகி கார்கள் விற்பனை செய்யப்படும் ஷோரூம்களாக உள்ளன.
இதேபோன்று, இந்த டீலர்ஷிப் ஷோரூம்களில் விற்பனை செய்யப்படும் கார்களை சர்வீஸ் செய்வதற்காகவும் அரேனா மற்றும் நெக்ஸா என தனித்தனியாக வொர்க்ஷாப்கள் செயல்படுகின்றன. சர்வீஸ் செண்டர்களை கிராமப்புறங்களில் வசிப்பவர்களும் எளிதாக அணுகக்கூடிய வகையில் வழங்க விரும்பும் மாருதி சுஸுகி, அதேநேரம் மாநகரங்களிலும் தனது நெட்வொர்க்கை இன்னும் விரிவுப்படுத்தி கஸ்டமர்களை ஈர்க்க விரும்புகிறது.

1983ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட மாருதி சுஸுகி நிறுவனம் அதன் சர்வீஸ் மையங்களின் எண்ணிக்கையில் ஆயிரம் என்கிற மைல்கல்லை தொட 14 வருடங்களை எடுத்துக் கொண்டது. அதன்படி, 1997ஆம் ஆண்டில் 1,000 ஆவது சர்வீஸ் செண்டரை திறந்த மாருதி சுஸுகி இந்த எண்ணிக்கையில் 5 ஆயிரம் என்கிற மைல்கல்லை கடந்த 2024ஆம் ஆண்டு மே மாதத்தில் எட்டியது.
அதாவது, அதற்கடுத்த 4 ஆயிரம் சர்வீஸ் செண்டர்களை 27 வருடங்களில் திறந்துள்ளது. 2024 மே மாதத்தில் இருந்து கூடுதலாக 926 சர்வீஸ் செண்டர்களை அதற்கடுத்த 2 வருடங்களுக்கு உள்ளாக மாருதி சுஸுகி திறந்துள்ளது. இதில் இருந்து புது, புது சர்வீஸ் செண்டர்களை திறப்பதில் மாருதி சுஸுகி எந்த அளவிற்கு தீவிரமாக உள்ளது என்பதை அறியலாம்.
ஏனெனில், சர்வீஸ் மற்றும் ஸ்பேர் பார்ட்ஸ் கிடைப்பதன் மூலமாகவே காரின் உரிமையாளருக்கான அனுபவத்தை அனுபவிக்க முடியும் என மாருதி சுஸுகி நம்புகிறது. இதனாலேயே வொர் ஷாப்களிலும், வாடிக்கையாளர்களின் இருப்பிடத்திற்கே சென்று சேவைகளை வழங்குவதிலும் மாருதி சுஸுகி தீவிரமாக உள்ளது. இதன்படி, 2030-31ஆம் நிதியாண்டிற்குள் நாடு முழுவதும் 8 ஆயிரம் சர்வீஸ் செண்டர்களுக்கு சர்வீஸ் செண்டர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தும் இலக்குடன் மாருதி சுஸுகி செயல்பட்டு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகியின் இத்தகைய வளர்ச்சிக்கு அதன் தொடர்ச்சியான சர்வீஸ் செண்டர்களின் விரிவாக்கம் முக்கிய காரணமாகும். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 502 சர்வீஸ் செண்டர்களை திறந்து வைத்திருப்பதன் மூலம் மாருதி சுஸுகி வாடிக்கையாளர்கள் அவர்களின் கார்களுக்கான சேவையை பெறுவது எளிதாகி உள்ளது.


Click it and Unblock the Notifications








