பெட்ரோல், டீசல் விலை உயர்வு அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இதுவா! நொந்து போன இந்திய மக்கள்!
இந்திய சந்தையின் நம்பர் 1 கார் உற்பத்தி நிறுவனம் எது என்று கேட்டால், மாருதி சுஸுகி (Maruti Suzuki) என அனைவரும் கோரஸாக கூறுவார்கள். இதற்கு அடுத்து 2வது இடத்தை மிக நீண்ட காலமாக ஹூண்டாய் (Hyundai) நிறுவனம்தான் தன் வைவசம் வைத்திருந்தது. இது தென் கொரியாவின் தலைநகரான சியோலை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருவது ஆகும்.
ஆனால் கடந்த ஒரு சில வருடங்களாக ஹூண்டாய் நிறுவனத்தின் 2வது இடத்தை இந்தியாவை சேர்ந்த டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்கள் மாறி மாறி பிடித்து வருகின்றன. இந்த சூழலில் ஹூண்டாய் நிறுவனம் தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சிகரமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதிர்ச்சிகரமான என்றாலே உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம், இது விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்புதான். ஹூண்டாய் நிறுவன கார்களின் விலை வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்து உயரவுள்ளது. ஹூண்டாய் நிறுவன கார்களின் விலை எவ்வளவ உயர்கிறது? என்பது, கார்கள் மற்றும் அதன் வேரியண்ட்களை (Variants) பொறுத்து மாறுபடும்.
ஆனால் ஹூண்டாய் நிறுவன கார்களின் விலை அதிகபட்சமாக 12,800 ரூபாய் வரை உயரவுள்ளது. நீங்கள் ஹூண்டாய் நிறுவனத்தின் காரை வாங்க திட்டமிட்டிருந்தால், அந்த கார் மற்றும் வேரியண்ட்டின் விலை துல்லியமாக எவ்வளவு உயரவுள்ளது? என்பதை தெரிந்து கொள்ள உங்களுக்கு அருகில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகுவது சிறந்தது.

ஹூண்டாய் நிறுவனம் நடப்பு 2026ம் ஆண்டில், அதன் கார்களின் விலையை உயர்த்துவது இது 4வது முறை ஆகும். உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணங்களால்தான் கார்களின் விலையை உயர்த்துவதாக ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கார்வாலே தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்திற்கு முன்னதாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு விட்டது. மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலை அதிகபட்சமாக 30 ஆயிரம் ரூபாய் வரை உயரவுள்ளது. மாருதி சுஸுகி நிறுவன கார்களின் விலையும் வரும் ஜூன் 1ம் தேதியில் இருந்துதான் உயரவுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: மாருதி சுஸுகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களை தொடர்ந்து இன்னும் பல்வேறு நிறுவனங்களும் தங்கள் வாகனங்களின் விலைகளை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் வரும் நாட்களில் வெளியாகலாம். எனவே புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் அதிக தொகையை செலவு செய்ய தயாராகி கொள்வது நல்லது.
இந்தியாவில் கடந்த ஒரு சில நாட்களாக பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மற்றும் சிஎன்ஜி (CNG) என மிக முக்கியமான எரிபொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இந்த சூழலில் வாகனங்களின் விலையும் தற்போது உயர தொடங்கியுள்ளதால் இந்திய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். எரிபொருள் மற்றும் வாகனங்களின் விலை உயர்வு காரணமாக இந்தியாவில் வரும் மாதங்களில் வாகனங்களின் விற்பனை வெகுவாக குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் இதை நாம் சற்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications