வெறும் 65 ரூபாய்க்கு ஒரு லிட்டர் எரிபொருள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வை சமாளிக்க மத்திய அரசு அதிரடி திட்டம்!
இந்தியாவில் கடந்த ஒரு சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை (Petrol, Diesel Price Hike) தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால், பால், காய்கறி, மளிகை சாமான்கள் என அனைத்து அத்தியாவசியமான பொருட்களின் விலையும் உயரும். எனவே இந்திய மக்கள் தற்போது கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியா தனது பெட்ரோல், டீசல் தேவையில் சுமார் 87 சதவீதத்தை இறக்குமதியின் மூலமாகவே பூர்த்தி செய்து கொள்கிறது. எனவே நாட்டிற்கும் இது பாதகமான விஷயமாகவே கருதப்படுகிறது. அதிகப்படியான இறக்குமதியால், இந்தியாவின் அந்திய செலாவணி (Forex) கையிருப்பு குறைகிறது. எனவே எத்தனால் (Ethanol) போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

எத்தனாலை இந்தியாவின் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யலாம். கரும்பு, மக்காச்சோளம் மற்றும் கோதுமை போன்றவற்றில் இருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. எனவே இது இந்தியாவின் விவசாயிகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும். இந்த சூழலில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) தற்போது மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அது மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனத்தின் (Flex Fuel Vehicle) அறிமுகம் பற்றிய அறிவிப்பு ஆகும். வரும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில், மாருதி சுஸுகி நிறுவனம் புதிய ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனம் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளதாக நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

அனேகமாக இது E100 (E100) எரிபொருளில் இயங்க கூடியதாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அதாவது 100 சதவீதம் எத்தனாலில் இயங்க கூடிய வாகனமாக இது இருக்கலாம். தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் ஒரு ஃப்ளக்ஸ் ஃப்யூயல் நான்கு சக்கர வாகனம் கூட விற்பனையில் இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
எனவே மாருதி சுஸுகி நிறுவனம் வரும் ஜூன் 5ம் தேதி அறிமுகம் செய்யவுள்ள ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. முன்னதாக கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோ வாகன திருவிழாவில், இந்தியாவில் தற்போது விற்பனையில் உள்ள ஃப்ரான்க்ஸ் (Fronx) காரின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.
இது அதிகபட்சமாக E85 எரிபொருள் வரை இயங்கும். அதாவது 85 சதவீதம் எத்தனால் மற்றும் 15 சதவீதம் பெட்ரோல் கலக்கப்பட்ட எரிபொருளில் இதை இயக்க முடியும். ஆனால் 100 சதவீதம் எத்தனாலில் இயங்க கூடிய திறன் அதற்கு இல்லை. எனவே மாருதி சுஸுகி நிறுவனத்தின் வேறு ஏதேனும் ஒரு காரின் 100 சதவீதம் எத்தனாலில் இயங்க கூடிய வெர்ஷன் வரும் ஜூன் 5ம் தேதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. மாருதி சுஸுகி (Maruti Suzuki) மட்டுமல்லாது, டாடா மோட்டார்ஸ் (Tata Motors) போன்ற இன்னும் பல்வேறு முன்னணி நிறுவனங்களும், இந்திய சந்தையில் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டாடா நிறுவனத்தின் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனம் நடப்பு 2026ம் ஆண்டின் இறுதிக்குள்ளாகவோ அல்லது 2027ம் ஆண்டின் தொடக்கத்திலோ விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அனேகமாக டாடா பன்ச் (Tata Punch) ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன்தான், டாடா நிறுவனத்தின் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காராக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நிதின் கட்கரி கூற்றுப்படி, தற்போதைய நிலையில் ஒரு லிட்டர் எத்தனாலின் விலை (Price) வெறும் 65 ரூபாயாக மட்டுமே உள்ளது. எனவே இதை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம், வாகனங்களை இயக்குவதற்கான செலவும் குறையும். தற்போது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்து கொண்டே வருவதால், எத்தனால் மூலமாக இயங்கும் வாகனங்கள் எதிர்காலத்தில் இந்திய சாலைகளை ஆளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சரான நிதின் கட்கரி, இந்தியாவில் எத்தனால் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் மிகவும் உறுதியாக உள்ளார். இதற்காகவே இந்திய சந்தையில் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்களை அறிமுகம் செய்யும்படி பல்வேறு முன்னணி நிறுவனங்களையும் மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மத்திய அரசின் இந்த திட்டத்திற்கு எதிர்காலத்தில் வெற்றி கிடைக்கும் என்றே நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications