மத்திய அரசு செய்த சிறிய மாற்றத்தால் கோடிகளை அள்ளும் மாருதி! முதல்முறையா கார் வாங்குபவர்கள் பணத்தை கொட்டுறாங்க!
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki), 2025-26ஆம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் (2025 அக்டோபர்- டிசம்பர்) தனது விலை குறைவான எண்ட்ரி-லெவல் கார்களுக்கான தேவை கணிசமாக உயர்ந்திருப்பதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, முதல்முறையாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு முக்கிய காரணம் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலமாக, இந்த காலாண்டில் மாருதி நிறுவனம் சாதனை விற்பனை எண்ணிக்கையைப் பதிவு செய்துள்ளது.
மாருதி சுஸுகி நிர்வாகிகள் குறிப்பிட்டதன்படி, மொத்த வாடிக்கையாளர்களில் முதல்முறையாக கார் வாங்குபவர்களின் பங்கு சுமார் 47 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது முன்னதாக இருந்த சுமார் 40 சதவீதத்துடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். சிறிய ரக கார்களின் சிறப்பான விற்பனையினால் இந்த வளர்ச்சி கிடைத்துள்ளது.

மாருதி சுஸுகியின் 2025-26ஆம் நிதியாண்டின் Q3 முடிவுகளின்படி, 2025 டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த இந்த மூன்று மாதங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு சுமார் 5,64,669 கார்களை நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 2024இல் இதே 3 மாத காலக்கட்டத்தில் 4,66,993 யூனிட்களாக பதிவாகியது.
முதல்முறையாக கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது, முன்பு மந்தமான வளர்ச்சியைப் பதிவு செய்த சிறிய ரக கார்கள் சந்தையின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. 2025 செப்டம்பரில் மத்திய அரசு கொண்டுவந்த 'ஜிஎஸ்டி 2.0' (GST 2.0) திட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய 18% ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் இந்த வாடிக்கையாளர்கள் அதிகரிப்பிற்கு வித்திட்டன.

முதல்முறையாக கார் வாங்குவோர் மற்றும் பணத்திற்கேற்ற மதிப்பைத் தேடுபவர்களுக்கு இந்த மாற்றம் மிகவும் கவர்ச்சிகரமானதாக அமைந்தது. இதன் விளைவாக, 68,328 மாருதி சுஸுகி கார்கள் 2024-25ஆம் நிதியாண்டை விட கூடுதலாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. சிறிய மற்றும் காம்பாக்ட் வகை கார்கள், ஒட்டுமொத்த உள்நாட்டு விற்பனை எண்ணிக்கையில் கணிசமான பங்கை அளித்துள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்துள்ளது.
ஆல்டோ (Alto), எஸ்-பிரெஸ்ஸோ (S-Presso), பலேனோ (Baleno), செலிரியோ (Celerio), இக்னிஸ் (Ignis), ஸ்விஃப்ட் (Swift), டிசையர் (Dzire), வேகன் ஆர் (WagonR) போன்ற மாருதி சுஸுகியின் மினி மற்றும் காம்பாக்ட் கார்கள், 2025-26ஆம் நிதியாண்டின் 3ஆம் காலாண்டின் உள்நாட்டு விற்பனையில் சுமார் 46.6% பங்களித்துள்ளன.

2025 செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தம், 4 மீட்டர் அல்லது அதற்கும் குறைவான நீளத்துடன் பெட்ரோல் என்ஜின் (1,200 சிசி-க்கும் கீழ்) அல்லது டீசல் என்ஜின் (1,500 சிசி-க்கும் கீழ்) கொண்ட வாகனங்களை 28% இல் இருந்து 18% வரி வரம்பிற்குள் கொண்டு வந்தது. இந்த வரி மாற்றங்கள் பல எண்ட்ரி-லெவல் கார்களின் விலையை ரூ.1.3 லட்சம் வரை குறைத்தன.
ஏற்றுமதியையும் சேர்த்து, இந்த காலாண்டில் மொத்தம் 6,67,769 கார்கள் விற்பனையை மாருதி சுஸுகி எட்டியது. இந்த காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் மொத்த நிகர வருவாய் ஆனது முந்தைய ஆண்டின் ரூ.36,802 கோடியில் இருந்து ரூ.47,534 கோடியாக உயர்ந்தது. வருவாயில் இருந்து நிகர லாபம் ரூ.3,794 கோடியாகப் பதிவானது, இது முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டில் பதிவான ரூ.3,659 கோடியை விட சுமார் ரூ.135 கோடி அதிகமாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய கார் சந்தையில் 50% பங்கை மீண்டும் பெறும் நோக்கில், மாருதி சுஸுகி தனது ஆண்டு உற்பத்தி திறனை விரிவுபடுத்தியது. இதற்கேற்ப, மத்திய அரசால் மாற்றி அமைக்கப்பட்ட ஜிஎஸ்டி, எஸ்யூவி (SUV) பாணியிலான எஸ்-பிரெஸ்ஸோ காரை ஆல்டோ கே10 (K10) காருக்கு இணையாக மலிவான காராக மாற்றியது. முதல்முறையாக கார் வாங்குபவர்களுக்கு இது புதிய மலிவு விலையை உறுதி செய்தது. இது எல்லாம் சேர்ந்து இந்த நிறுவனத்தின் கார்கள் விற்பனையை அதிகரித்து, இலாபத்தையும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications









