பொள்ளாச்சிக்கு ரயிலில் வந்த 120 மாருதி கார்கள்... ஆண்டுக்கு 11,000 கார்களை அனுப்ப திட்டம்!
பொள்ளாச்சி நகரம் தற்போது மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார் டெலிவிரிப் பணிகளில் புதிய மையமாக மாற இருக்கிறது. இதுவரை டிரக்குகள் மூலமாக புதிய கார்களை டீலர்களுக்கு அனுப்பும் போக்குவரத்து முறையை படிப்படியாக குறைத்து தற்போது ரயில்கள் மூலமாக அனுப்பும் திட்டத்திற்கு கார் நிறுவனங்கள் மாறி வருகின்றன. அந்த வகையில், மாருதி கார் நிறுவனமும் தனது கார்களை சரக்கு ரயில் மூலமாக அனுப்புவதற்கான திட்டத்தை விரிவுப்படுத்தி வருகிறது.
அதன்படி, ஹரியானா மாநிலம் மானேசரில் உள்ள மாருதி சுஸுகி ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட 120 புதிய கார்கள் ரயில் மூலம் பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. கடந்த 18ந் தேதி மானேசர் ஆலையில் இருந்து புறப்பட்ட அந்த சரக்கு ரயில் கடந்த 24ம் தேதி பொள்ளாச்சி ரயில் நிலையத்திற்கு வந்தது. இதில் வேகன் ஆர், எர்டிகா, டிசையர், செலிரியோ உள்ளிட்ட மாருதி நிறுவனத்தின் பிரபலமான கார்கள் இருந்தன.

பொள்ளாச்சி ரயில்வே டெர்மினலை கார் போக்குவரத்துக்காக பயன்படுத்துவதில் மாருதி நிறுவனம்தான் முதல் பயணிகள் கார் தயாரிப்பு நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்திய ரயில்வேயுடன் இணைந்து இந்த வசதியை செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் நகரத்திற்கு ஏற்கனவே மாருதி கார் வினியோக மைய பட்டியலில் உள்ள நிலையில், பொள்ளாச்சி நகரமும் தற்போது தென் இந்திய நகரங்களுக்கான மற்றொரு முக்கிய கார்களுக்கான ரயில் போக்குவரத்து முனையமாக மாற உள்ளது.

பொள்ளாச்சி ரயில் டெர்மினல் மூலம் ஆண்டுக்கு 11,000க்கும் அதிகமான கார்களை டீலர்களுக்கு அனுப்புவதற்கு மாருதி திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், ரயில் மூலமாக அனுப்பப்படும் கார்கள் பொள்ளாச்சி சுற்றி உள்ள முக்கிய நகரங்களுக்கு விரைவாக எடுத்துச் செல்ல முடியும். குறிப்பாக கேரளாவில் ஓணம் பண்டிகை காலத்தில் கார்களுக்கான தேவை அதிகரித்த நிலையில், இந்த புதிய டெர்மினில் மூலமாக டீலர்களுக்கு மிக விரைவாக கார்களை அனுப்பும் வசதியை மாருதி பெற்றுள்ளது.
தனது பசுமை போக்குவரத்துத் திட்டத்தின் ஒரு பகுதியாக ரயில் மூலமாக கார்களை டீலர்களுக்கு அனுப்பும் திட்டத்தை மாருதி சுஸுகி பல வருடங்களாக பயன்படுத்தி வருகிறது. கடந்த 2014-15 நிதியாண்டில் மொத்த வாகன வினியோகத்தில் ரயில் மூலமாக சுமார் 5 சதவீத கார்களை அனுப்பிய மாருதி கடந்த 2025-26 நிதியாண்டு காலத்தில் 26.5 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுவரை 32 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களை ரயில் மூலம் அந்நிறுவனம் அனுப்பியுள்ளது.

சாலை போக்குவரத்தில் நெரிசலை குறைப்பதுடன், சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தும் எரிபொருளில் இயங்கும் வாகன பயன்பாட்டை குறைப்பதையும் இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாக மாருதி தெரிவித்துள்ளது. வரும் 2030-31 நிதியாண்டுக்குள் தனது வாகன வினியோகத்தில் ரயில் போக்குவரத்தின் பங்கை 35 சதவீதமாக உயர்த்த மாருதி சுஸுகி இலக்கு வைத்துள்ளது. பொள்ளாச்சி டெர்மினல் பயன்பாட்டுக்கு வந்திருப்பது, கோயம்புத்தூர் மட்டுமின்றி மேற்கு மற்றும் தென் தமிழகப் பகுதிகள், கேரளா உள்ளிட்ட சந்தைகளுக்கு மாருதி கார்களை எளிதாகவும், விரைவாகவும் டீலர்களுக்கு அனுப்புவதற்கான புதிய வாய்ப்பை உருவாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications

