இந்தியாவின் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காரை அறிமுகம் செய்த மாருதி! இனி அரபு நாடுகளை நம்பி இருக்க வேண்டியது இல்ல!
இந்தியாவின் முதல் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காரை (Flex Fuel Car) மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் இன்று (ஜூன் 4) பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இது மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன் ஆகும். மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் (BioFlex) என்ற பெயரில் இந்த கார் அழைக்கப்படும்.
E85 வரையிலான எரிபொருளில் இயங்கும் திறன் இதற்கு உண்டு. அதாவது 15 சதவீதம் பெட்ரோல் மற்றும் 85 சதவீதம் எத்தனால் (Ethanol) கலந்த எரிபொருளில் இயங்கும் திறனை மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் கார் பெற்றுள்ளது. கடந்த 2023 மற்றும் 2025ம் ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ வாகன திருவிழாக்களில் மாருதி சுஸுகி வேகன் ஆர் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

தற்போது அது தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு, அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் (Crude Oil) இறக்குமதியை குறைப்பது மற்றும் கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்துவது போன்ற இந்தியாவின் இலக்குகளை அடைய உதவி செய்யும் வகையில், மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி (Nitin Gadkari) மற்றும் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri) ஆகியோர் முன்னிலையில் மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

இவர்கள் இருவருமே மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் அதிக ஆர்வம் உடையவர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ஆனால் மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் காரின் விலை எவ்வளவு? என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை. எனினும் கூடிய விரைவில் விலை அறிவிக்கப்பட்டு இந்த கார் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் தற்போது 80 சதவீதம் பெட்ரோல் மற்றும் 20 சதவீதம் எத்தனால் கலந்த E20 எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது. இதை தொடர்ந்து பெட்ரோல் உடன் கலக்கப்படும் எத்தனாலின் அளவை படிப்படியாக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே மாருதி சுஸுகி வேகன் ஆர் பயோ ஃப்ளக்ஸ் போன்ற கார்களின் வருகை அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
எத்தனால் என்பது கரும்பு போன்ற விவசாய பொருட்களில் இருந்து தயாரிக்கப்படுவதாகும். இதை இந்தியாவிலேயே தயாரிக்க முடியும். எனவே இதை எரிபொருளாக பயன்படுத்துவதன் மூலம் இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய்யின் அளவு குறையும். அத்துடன் இது இந்தியாவின் விவசாயிகளுக்கும் பொருளாதார ரீதியில் நன்மைகளை ஏற்படுத்தும்.
இந்தியாவில் தற்போது அதிக அளவிலான ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்கள் விற்பனைக்கு வர தொடங்கியுள்ளன. முன்னதாக நேற்று (ஜூன் 3) ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் தனது ஸ்பிளெண்டர் ப்ளஸ் (Splendor Plus) மற்றும் ஹெச்எஃப் டீலக்ஸ் (HF Deluxe) பைக்குகளின் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷன்களை விற்பனைக்கு அறிமுகம் செய்தது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனின் ஆரம்ப விலை 82,710 ரூபாய் ஆகவும், ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வெர்ஷனின் விலை 72,792 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். இவை E20 முதல் E85 வரையிலான எரிபொருட்களில் இயங்கும் திறன் வாய்ந்தவை.
ஹீரோ ஸ்பிளெண்டர் ப்ளஸ் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் மற்றும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் ஃப்ளக்ஸ் ஃப்யூயல் ஆகிய 2 பைக்குகளின் டெலிவரி முதலில் டெல்லி (Delhi) மற்றும் மஹாராஷ்டிரா (Maharashtra) மாநிலத்தில் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்கப்படவுள்ளது. இதை தொடர்ந்து படிப்படியாக நாடு முழுவதும் டெலிவரி பணிகள் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: வழக்கமான பெட்ரோல் , டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை. உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day) நாளை (ஜூன் 5) கொண்டாடப்படும் நிலையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஏராளமான ஃப்ளக்ஸ் ஃப்யூயல் வாகனங்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகி கொண்டிருப்பது சிறப்பான ஒரு விஷயம் ஆகும்.
வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications