ஒரு துளி பெட்ரோல் கூட தேவையில்ல... மத்திய அரசின் சொல்லை கேட்டு மாருதி உருவாக்கிய காரின் விலை அறிவிப்பு!
மாருதி சுஸுகி நிறுவனம் அதன் வேகன்-ஆர் காரை எத்தனாலில் இயங்கக் கூடியதாக சமீபத்தில் ஜூன் 4ஆம் தேதியன்று அறிமுகப்படுத்தியதை கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். வேகன்-ஆர் பயோ ஃபிளெக்ஸ் என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அப்போது காரின் விலைகள் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது வேகன்-ஆர் பயோ ஃபிளெக்ஸ் காரின் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனாலை பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஏனெனில், இதன் மூலமாக வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் கச்சா எண்ணெயின் அளவை குறைத்து, அந்நிய செலவாணிகளை குறைக்கலாம் என்பது இந்திய அரசின் திட்டமாக உள்ளது. நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் பெட்ரோலில் ஏற்கனவே 20% எத்தனால் கலக்கப்படுகிறது.

ஆனால் அதுவும் போதாது என கருதும் மத்திய அரசு நேரடியாக இ100 என்கிற ஒரு துளி பெட்ரோல் கூட கலக்கப்படாத முழுக்க முழுக்க எத்தனாலில் இயங்கக்கூடிய வாகனங்களை உருவாக்க ஆட்டோமொபைல் நிறுவனங்களை நிர்பந்திக்க ஆரம்பித்துள்ளது. அதன்படி, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமான மாருதி சுஸுகி எத்தனாலில் இயங்கக்கூடிய அதன் முதல் ஃபிளெக்ஸ்-ஃப்யுல் காரை அறிமுகப்படுத்தியது.
அதுதான், கடந்த ஜூன் 4ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட வேகன்-ஆர் பயோ ஃபியுல் கார் ஆகும். வேகன்-ஆர் காரின் வெளிப்புற மற்றும் உட்புற தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றமும் கொண்டுவரப்படாமல், எத்தனாலில் இயங்கக்கூடியதாக காரை மாற்றியுள்ளனர். இன்னும் சொல்லப்போனால், அதே வழக்கமான 1.2 லிட்டர் 4-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் தான் வேகன்-ஆர் பயோ ஃபியுல் காரிலும் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக, என்ஜினின் ஃபியுல் இன்ஜெக்டர்கள், ஃபியுல் பம்ப்கள், ஃபியுல் செல்லும் வழிகள் மற்றும் ECU-இல் மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பதுடன், எத்தனால் சென்சார் புதியதாக பொருத்தப்பட்டுள்ளது. வேகன்-ஆர் காரின் வழக்கமான ZXi+ வேரியண்ட்டின் அடிப்படையில் புதிய பயோ ஃபியுல் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, அந்த வேரியண்ட்டில் கிடைக்கக்கூடிய அனைத்தையும் வேகன்-ஆர் பயோ ஃபியுல் காரில் பெறலாம்.
ஆனால், வேகன்-ஆர் ZXi+ வேரியண்ட்டை போன்று ட்யூயல்-டோன் பெயிண்ட்டில் புதிய வேகன்-ஆர் பயோ ஃபியுல் கார் கிடைக்காது. சிங்கிள்-டோன் பெயிண்ட்டில் மட்டுமே கிடைக்கும். ட்யூயல்-டோன் பெயிண்ட்டில், காரின் மேற்கூரை ஒரு நிறத்திலும், மற்ற உடல் பாகங்கள் வேறொரு நிறத்திலும் என கார் இரு நிறங்களில் கிடைக்கும்.
சிங்கிள்-டோன் பெயிண்ட்டில் புதிய வேகன்-ஆர் பயோ ஃபியுல் காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.7.24 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுவே, சிங்கிள்-டோன் பெயிண்ட்டில் வேகன்-ஆர் காரின் வழக்கமான ZXi+ வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.6.38 லட்சம் ஆகும். இரண்டிற்கும் இடையேயான வித்தியாசம் சுமார் ரூ.86 ஆயிரம் ஆகும்.
வேகன்-ஆர் காரின் புதிய பயோ ஃபியுல் வெர்சனை தற்போதைக்கு கமர்ஷியல் பயன்பாட்டிற்காக மட்டுமே மாருதி சுஸுகி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, டாக்சி உள்ளிட்ட பணிகளுக்காக வேகன்-ஆர் பயோ ஃபியுல் காரை வாங்கலாம். சொந்த பயன்பாட்டிற்காக தற்போதைக்கு இந்த கார் கிடைக்கவில்லை என்றாலும், மிக விரைவில் அதற்காகவும் அறிமுகம் செய்யப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிக பேர் வாங்கும் கார்களுள் ஒன்றாக விளங்குவதினாலேயே மாருதி சுஸுகி வேகன்-ஆரில் பயோ ஃபியுல் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு கமர்ஷியல் பயன்பாட்டிற்காக மட்டுமே இந்த கார் விற்பனைக்கு கிடைக்கும் நிலையில், வேகன் ஆர் டூர் ஏற்கனவே கமர்ஷியல் பயன்பாட்டிற்காக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications