வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்க போகும் கார் நிறுவனங்கள்... இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாமே மாற போகுது...
இந்திய சந்தையில் கார் நிறுவனங்கள் அவ்வப்போது விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்புகளை வெளியிடுவது வழக்கம். குறிப்பாக காலண்டர் வருடத்தின் தொடக்கத்திலும் (ஜனவரி 1), நிதியாண்டின் தொடக்கத்திலும் (ஏப்ரல் 1) பெரும்பாலான நிறுவனங்கள் கார்களின் விலைகளை உயர்த்துவதை வாடிக்கையாக வைத்துள்ளன.
இந்த சூழலில், நடப்பு 2025-26ம் நிதியாண்டு வரும் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதை தொடர்ந்து வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, 2026-27ம் நிதியாண்டு தொடங்கவுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், கார் நிறுவனங்கள் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட தொடங்கியுள்ளன.

இந்திய சந்தையில் தற்போது முதல் ஆளாக மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) நிறுவனம் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார்கள் விலை வரும் ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தங்கள் கார்களின் விலை சுமார் 2 சதவீதம் வரை உயரும் எனவும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவை இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளன. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தை தொடர்ந்து ஆடி (Audi) நிறுவனமும் தங்கள் கார்களின் விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவன கார்களை போலவே, ஆடி நிறுவனத்தின் கார்கள் விலையும் 2 சதவீதம்தான் உயர்த்தப்படவுள்ளது.

மெர்சிடிஸ் பென்ஸ் மற்றும் ஆடி ஆகிய நிறுவனங்களை தொடர்ந்து மற்ற கார் நிறுவனங்களும், வரும் நாட்களில் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார் நிறுவனங்கள் மட்டுமல்லாது, டூவீலர் நிறுவனங்களும் தங்கள் தயாரிப்புகளின் விலையை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே வரும் ஏப்ரல் மாதம் அல்லது அதற்கு பிறகு புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், சற்று கூடுதல் தொகையை செலவு செய்ய தயாராகி கொள்வது சிறந்தது.
அதே நேரத்தில் விலை உயர்வு பிரச்சனையை தவிர்க்க நினைக்கும் வாடிக்கையாளர்கள், நடப்பு மார்ச் மாதமே புதிய வாகனங்களை முன்பதிவு செய்வதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எனவே நடப்பு மார்ச் மாதத்தில் இந்திய சந்தையில் வாகனங்களின் விற்பனை மற்றும் முன்பதிவு எண்ணிக்கை வெகுவாக உயரலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களின் விலை பெரும்பாலும் 2 சதவீதத்தில் இருந்து 4 சதவீதம் வரை உயரலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பார்ப்பதற்கு சிறிய விலை உயர்வு போன்று தோன்றலாம். ஆனால் 10 லட்ச ரூபாய் மதிப்பு கொண்ட ஒரு காரின் விலை 4 சதவீதம் வரை உயர்கிறது என்றால், அது 40 ஆயிரம் உயர்வு ஆகும்.
அதுவே மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் என்றால், 4 சதவீதம் என்பது அதிகப்படியான விலை உயர்வு ஆகும். எனவே புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள், நடப்பு மார்ச் மாதத்திலேயே முன்பதிவு செய்து கொள்வது சிறந்தது என்பது டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் கருத்து.


Click it and Unblock the Notifications








