E20 பெட்ரோல் பயன்பாடு பிரச்சினையா.? வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்திய மெர்சிடீஸ் பென்ஸ்
20 சதவீதம் எத்தனால் கலப்பு கொண்ட E20 பெட்ரோலே கடந்த ஆண்டிலிருந்து இந்தியா முழுவதும் அனைத்து எரிபொருள் விற்பனை நிலையங்களிலும் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த சில வாரங்களாக இந்த விஷயம் மக்களிடையே கவனம் பெற்றிருக்கிறது. குறிப்பாக பல்வேறு தரப்பினரும் E20 பெட்ரோலைப் பயன்படுத்துவதனால் தங்களது கார்/ பைக்கின் மைலேஜ் வெகுவாகக் குறைந்திருப்பதாகத் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில் வடஇந்தியாவைச் சேர்ந்த பிரபல விலாகரான சௌரவ் ஜோஷியும் இது தொடர்பாக காணொளி ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில் தன்னுடைய மெர்சிடீஸ் பென்ஸ் GLC 300 4Matic எஸ்யூவியின் மைலேஜ் வெகுவாகக் குறைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளது. 48 மணி நேரத்தில் தன்னுடைய எஸ்யூவியின் மைலேஜ் அளவு லிட்டருக்கு 17 கிமீ-ல் இருந்து 5 கிமீ ஆக குறைந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அந்தக் காணொளியில் அவர் வாகனத்தின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் காட்டப்படும் மைலேஜ் அளவைக் காட்டுகிறார். ப்ரீமியம் மற்றும் சொகுசு எஸ்யூவிக்களில் நிகழ்நேர கார் பயன்பாடு மற்றும் கையாளுதலைக் கொண்டு காரின் மைலேஜ் அளவு காட்டப்படும். அதனைக் காட்டியோ சௌரவ் ஜோஷி மைலேஜ் மிகவும் குறைந்திருப்பதாக வீடியோவில் பேசியிருப்பது தெரிகிறது.
இந்தியாவில் இந்த எஸ்யூவி 80 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தக் காருக்கு இவ்வளவு செலவு செய்திருக்கிறோம், ஆனால் எத்தனால் கலப்பு கொண்ட பெட்ரோலினால் கார் சேதமாகிறது என்பது போல அந்தக் காணொளியில் அவர் பேசியிருக்கிறார். மேலும், முன்னர் டேங்க்கை ஃபில் செய்தால் இந்த GLC எஸ்யூவி 800 கிமீ வரையிலான ரேஞ்சைக் கொடுத்து வந்ததாகவும், தற்போது 480 கிமீ வரையிலான ரேஞ்சே காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ப்ரீமியம் எஸ்யூவிக்களில் எரிபொருளின் அளவைப் பொறுத்து எவ்வளவு தூரம் காரை ஓட்டலாம் என்ற ரேஞ்சு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் காட்டப்படும். அதனையே அவர் குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த காணொளி இணையத்தில் வேகமாகப் பரவி E20 பெட்ரோல் தொடர்பாக மேலும் விவாதங்களை ஏற்படுத்தி வரும் வரும், இது தொடர்பாக மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனமே சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், வாடிக்கையாளர்ளின் பாதுகாப்பு, தங்களுடைய தயாரிப்பின் நம்பகத்தன்மை மற்றும் பெர்ஃபாமன்ஸ் ஆகியவை தங்களுக்கு மிக மிக முக்கியம் எனக் குறிப்பிட்டுள்ள அந்நிறுவனம், தொடர்ந்து தங்களுடைய கார்கள் அனைத்தும் E20 எரிபொருள் பயன்பாட்டிற்கு ஏற்றவை எனவும், இதுதொடர்பான முறையான அதிகாரிகள் மூலம் சான்றளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக தொழில்நுட்ப ரீதியாக எந்தவித கோளாறு ஏற்பட்டாலும், வாடிக்கையாளர்களுக்கு தயங்காமல் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனம் தாங்கள் வெளியிட்ட குறிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதனை வாடிக்கையாளர்கள் E20 பெட்ரோல் பயன்பாடு குறித்து கவலைப்படத் தேவையில்லை என்ற வகையிலேயே வெளியிட்டுள்ளது மெர்சிடீஸ் பென்ஸ்.
E20 பெட்ரோலினைப் பயன்படுத்துவதினால் எந்தவொரு பிரச்சினையும் வாகனங்களுக்கு ஏற்படாது என மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. மேலும், ஆட்டோமொபைல் நிறுவனங்களும் இது தொடர்பாக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறி வருகின்றன. இதற்கிடையில் தான் சௌரவ் ஜோஷியின் வீடியோவும், அதற்கு பதிலளிக்கும் விதமாக மெர்சிடீஸ் பென்ஸின் அறிவுறுத்தலும் வெளியாகியிருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: E20 எரிபொருள் தொடர்பாக பல்வேறு விவாதங்களும், சந்தேகங்களும் எழுந்த வண்ணமே இருக்கின்றன. வாடிக்கையாளர்களும் E20 பெட்ரோல் குறித்து ஒருவித அச்சத்தில் தான் இருக்கின்றனர். மேலும், இப்போது தயாரிப்பில் இருக்கும் வாகனங்களுக்கு E20 பெட்ரோலினால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றாலும், முன்னர் தயாரிக்கப்பட்ட E20 எரிபொருள் பயன்பாட்டிற்கு ஏற்ப இல்லாத வாகனங்கள் என்னவாகும் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications