ஃபேக்ட்ரியில் இருந்து கார்கள் ஷோரூமுக்கு கூட வர்றது இல்ல! வந்தாரை வாழ வைக்கும் சென்னைனு சொல்றது சும்மாவா!!
2025 டிசம்பர் மாதத்தில், நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Nissan Motor India Private Limited - NMIPL) நிறுவனம் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகச் சிறந்த ஏற்றுமதியாக சுமார் 13,470 யூனிட் கார்களை இந்தியாவில், சென்னை தொழிற்சாலையில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.
ஆனால், இந்த ஜப்பானிய கார் நிறுவனம் இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்த மொத்த கார்களின் எண்ணிக்கை வெறும் 1,902 யூனிட்கள் மட்டுமே ஆகும். மொத்தத்தில் நிசானின் கடந்த மாத ஒருங்கிணைந்த விற்பனை எண்ணிக்கை 15,372 யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது. இது நிசானின் 'மேட்-இன்-இந்தியா' ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி யுக்தியின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்குச் சான்றாகும்.

நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்திய வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், உலகளாவிய தரங்களுடன் வடிவமைக்கப்பட்ட வலுவான தயாரிப்புகளுடன் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கு தயாராகி வருகிறது. இதன் முதல் படியாக, வருகிற 2026 ஜனவரி 21 அன்று, புதியதாக 'கிராவைட்' (Gravite) என்கிற 7-சீட்டர் பி-எம்பிவி (B-MPV) காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்கிறது.
அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 4இல் நிசான் டெக்டான் (Tekton) என்கிற 5-சீட்டர் சி-எஸ்யூவி (C-SUV) ரக காரை உலகளவில் அறிமுகப்படுத்த உள்ளது. இந்த வரிசையில், 2027இல் 7-சீட்டர் சி-எஸ்யூவி கார் ஒன்றும் வரவுள்ளது. இவ்வாறு, மக்கள் எதிர்பார்க்கும் பிரிவுகளில் தனது இருப்பை மேலும் வலுப்படுத்த நிசான் திட்டமிட்டுள்ளது.

வரவிருக்கும் இந்த அனைத்து தயாரிப்புகளும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு, உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இவ்வாறான, நிசானின் மேட்-இன்-இந்தியா கார்கள் உலகளவில் வரவேற்பை பெற்று வருகிறது என்பதற்கு கடந்த டிசம்பர் மாதத்தில் 13,470 நிசான் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பதுதான் சாட்சியாகும்.
நிசான் டெக்டான் மற்றும் 7-சீட்டர் சி-எஸ்யூவி ஆகியவை, 'ஒன் கார், ஒன் வேர்ல்ட்' (One Car, One World) தத்துவத்தின் கீழ், குறிப்பிட்ட வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இதற்கிடையில், நிசான் மோட்டார் இந்தியா நிறுவனம் நாடு தழுவிய அளவில் தனது டீலர்ஷிப் நெட்வொர்க்கை விரிவுபடுத்துகிறது.
2027 மார்ச்சில் நிறைவடையும் 2026-27ஆம் நிதியாண்டின் இறுதிக்குள், இந்தியாவில் அதன் ஷோரூம்களின் எண்ணிக்கையை 250 ஆக அதிகரிக்க நிசான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது நாடு முழுவதும் வாடிக்கையாளர் அணுகல்தன்மை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய நிசானின் சேவையை கணிசமாக மேம்படுத்தும். சமீபத்தில், ஹிமாச்சலப் பிரதேசத்தின் கங்ரா மற்றும் பஞ்சாபின் ஹோஷியார்பூரில் நிசானின் புதிய, அதிநவீன 3எஸ் ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2025 டிசம்பர் என்கிற ஒரே மாதத்தில் சுமார் 13 ஆயிரத்திற்கும் அதிகமான நிசான் கார்கள் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருப்பது, உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளுக்கான உற்பத்தி மையமாக இந்தியாவின் முக்கியத்துவத்தை நிசான் நிறுவனத்திற்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திட்டமிடப்பட்டுள்ள நிசானின் புதிய தயாரிப்புகள், வலுவான சந்தைப் பிடிப்பிற்கான ஒரு முக்கிய நகர்வாக இருக்கும். நிசானின் உலகளாவிய திட்டங்களில் இந்தியா ஒரு முக்கியப் பங்கை வகிக்கிறது. இதன் காரணமாக இந்திய வாடிக்கையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த, 'மேட்-இன்-இந்தியா' தயாரிப்புகளை வழங்குவதற்கான ஒருமித்த இலக்குடன் இந்தியாவில் நிசான் செயல்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications








