வெறும் 55 லிட்டர் பெட்ரோலில் 1,980 கி.மீ. பயணித்த நிஸான் கார்.. சாத்தியப்படுத்திய சிம்பிளான தொழில்நுட்பம்!!
எரிபொருள் விலையால் இன்னல் படும் வாகன உரிமையாளர்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், நிஸான் நிறுவனம் உருவாக்கியிருக்கும் e-POWER தொழில்நுட்பம் உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்துடன் இயக்கப்பட்ட நிஸான் காஷ்கய் இ-பவர் எஸ்யூவி, ஒரே ஒரு முழு டேங்க் பெட்ரோலில் 1,980 கி.மீ. தூரம் பயணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.
இந்த சாதனை ஆய்வக சோதனை போன்ற கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் நடத்தப்படவில்லை. கொலம்பியாவில் நகர்ப்புற போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், ஏற்ற இறக்கமான சாலைகள் என பல்வேறு விதமான சாலை நிலைகளில் இந்த பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பயணத்திற்கு முன்பு நிஸான் காஷ்கய் e-POWER எஸ்யூவியின் 55 லிட்டர் பெட்ரோல் டேங்க் முழுமையாக நிரப்பப்பட்டது. அதன் பிறகு 1,980 கி.மீ. தூரம் பயணித்துள்ளது. இதை வைத்து கணக்கிட்டால், ஒரு லிட்டருக்கு சுமார் 36 கி.மீ. என்ற அளவில் மைலேஜ் கிடைத்துள்ளது.

ஆனால் இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். கணக்கீடுகளின்படி குறிப்பிடப்படும் லிட்டருக்கு 36 கிமீ மைலேஜ் என்பது நிஸான் அதிகாரப்பூர்வமாக அறிவித்த மைலேஜ் விபரம் கிடையாது. இந்த கார் 1,980 கி.மீ. பயணத்தையும் 55 லிட்டர் பெட்ரோல் பயன்படுத்தியதையும் வைத்து கணக்கிடப்பட்ட தோராய அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பரான தொழில்நுட்பம்
நிஸான் காஷ்கய் இ-பவர் எஸ்யூவியில் பயன்படுத்தப்பட்டிருக்கும் தொழில்நுட்பம்தான் இந்த சாதனையின் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த கார் ஹைப்ரிட் என குறிப்பிடப்பட்டாலும், இது நாம் வழக்கமாக பார்க்கும் ஹைப்ரிட் கார்களின் செயல்பாட்டிலிருந்து சற்று வேறுபட்டது. பொதுவாக ஹைப்ரிட் கார்களில் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்மோட்டார் ஆகிய இரண்டும் குறிப்பிட்ட சூழ்நிலைகளில் காரின் சக்கரங்களை நேரடியாக இயக்கும். ஆனால் e-POWER தொழில்நுட்பத்தை கொண்ட இந்த காரில் சக்கரங்களை மின் மோட்டார்கள் மட்டுமே இயக்கியது.

பெட்ரோல் எஞ்சின் எதற்காக?
இங்குதான் e-POWER தொழில்நுட்பம் வழக்கமான ஹைப்ரிட் தொழில்நுட்பத்திலிருந்து வேறுபடுகிறது. பெட்ரோல் எஞ்சின் மூலமாக சக்கரங்களை நேரடியாக இயக்காமல், பெட்ரோல் மூலமாக ஜெனரேட்டரை இயக்கி மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்த மின்சாரம் பேட்டரிக்கும் எலெக்ட்ரிக் மோட்டாருக்கும் தேவையான சக்தியை வழங்குகிறது.
இதனால் ஓட்டும்போது சக்கரங்களுக்கு கிடைக்கும் இயக்கம் எலெக்ட்ரிக் மோட்டார் மூலமாகவே நடைபெறுகிறது. அதேநேரத்தில், வழக்கமான மின்சார கார் போல வெளிப்புற சார்ஜ் செய்வது போன்று காரின் பேட்டரியை plug-in செய்து சார்ஜ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பெட்ரோல் நிரப்பினால் போதும். மேலும், பிரேக் பிடிக்கும்போது ஏற்படும் ஆற்றலை ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் தொழில்நுட்பம் மூலமாக மீண்டும் மின்சாரமாக மாற்றி பேட்டரியில் சேமிக்க முடியும்.
1,980 கி.மீ. பயணம் சாத்தியமானது எப்படி?
இந்த நீண்ட சாதனை பயணம் கொலம்பியாவில் உள்ள போகோட்டோ நகரில் இருந்து கரீபியன் கடற்கரை பகுதி நோக்கி மேற்கொள்ளப்பட்டது. போகோட்டோ நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. அங்கிருந்து பல்வேறு நிலப்பரப்புகளை கடந்து கார் பயணித்துள்ளது. இந்த சோதனை பயணத்தில் பயிற்சி பெற்ற டிரைவர்கள் காரை இயக்கியுள்ளனர். எரிபொருள் சிக்கனத்தை அதிகரிக்கும் வகையில் வேகம் மற்றும் ஓட்டுதல் முறையும் முக்கிய பங்கு உள்ளது.
நிஸான் ஏற்கனவே இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் தாஸ்மானியா மாநிலத்திலும் e-POWER தொழில்நுட்பத்துடன் காஸ்கய் எஸ்யூவியை சோதனை செய்துள்ளது. ஆனால், 1,980 கி.மீ. தூரம் ஒரே டேங்கில் பயணித்த இந்த முயற்சிதான் கின்னஸ் உலக சாதனையில் அங்கீகாரம் பெற்ற சாதனையாக பதிவாகி உள்ளது.
ஏற்கனவே இதே அடிப்படையிலான தொழில்நுட்பம்தான் டீசல்-எலெக்ட்ரிக் ரயில் எஞ்சின்களில் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, டீசல் ஜெனரேட்டர் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின் மோட்டார்கள் மூலமாக ரயில் எஞ்சின் செல்லும். அதற்கு பதிலாக நிஸான் இ-பவர் தொழில்நுட்பத்தில் பெட்ரோல் ஜெனரேட்டர் மூலமாக மின் உற்பத்தி செய்யப்பட்டு மோட்டார்கள் மூலமாக காரின் சக்கரங்களுக்கு சக்தி வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications