E20 எஃபெக்ட்? பெட்ரோல் கார்களுக்கு மவுசு குறைகிறது... சிஎன்ஜி, எலெக்ட்ரிக் கார்களுக்கு அதிகரிக்கும் வரவேற்பு!!
இந்திய கார் சந்தையில் பெட்ரோல் கார்களுக்கு இருந்து வந்த மவுசு மெல்ல குறைந்து வருவது ஜூலை மாத விற்பனை தரவுகள் மூலமாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக E20 பெட்ரோல் தொடர்பாக வாகன உரிமையாளர்கள் மற்றும் கார் வாங்குபவர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வரும் சந்தேகங்களுக்கு இடையே, மாற்று எரிபொருள் கார்களை நோக்கி வாடிக்கையாளர்கள் கவனம் திரும்பியுள்ளதை கடந்த மாத விற்பனை தரவுகள் வெளிப்படுத்துகிறது.
இந்திய வாகன விற்பனையாளர் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டுள்ள கடந்த மாத சில்லறை விற்பனை தரவுகளின்படி, கடந்த ஆண்டு பெட்ரோல் கார்களுக்கும் சிஎன்ஜி, எலெக்ட்ரிக் உள்ளிட்ட மாற்று எரிபொருளுக்கும் இடையே இருந்த விற்பனை இடைவெளி 13 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது வெறும் ஒரு சதவீதமாக மாறி உள்ளது.

பெட்ரோல்/எத்தனால் கார்களின் சந்தைப் பங்களிப்பு கடந்த ஜூன் மாதத்தில் இது 43.15 சதவீதமாகவும், 2025 ஜூலையில் 47.62 சதவீதமாகவும் இருந்த நிலையில், கடந்த ஜூலையில் சந்தைப் பங்களிப்பு 41.68 சதவீதமாக குறைந்துள்ளது. பெட்ரோல் கார்களை விட்டு சிஎன்ஜி, எலெக்ட்ரிக் உள்ளிட்ட மாற்று எரிபொருள் கார்களுக்கு வாடிக்கையாளர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கத் துவங்கி இருப்பது இந்த தரவுகளின் மூலமாக தெரிய வந்துள்ளது. அதாவது, கடந்த ஓராண்டில் பெட்ரோல் கார்களின் சந்தை பங்களிப்பு என்பது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.
அதே நேரத்தில் டீசல் கார்களின் பங்கு ஜூலையில் 17.73 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் இது 16.32 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது ஒரு சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டு ஜூலையில் இருந்த 17.97 சதவீதத்தைவிட தற்போதைய பங்கு குறைவாகவே உள்ளது. எனவே, இதை இந்தியர்கள் மீண்டும் பெருமளவில் டீசல் கார்களுக்கு மாறிவிட்டார்கள் என்று கருதமுடியாது.
உண்மையில் மிகப்பெரிய மாற்றம் என்பது சிஎன்ஜி, ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் வளர்ச்சியில் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. ஒட்டுமொத்த கார் விற்பனையில் கடந்த மாதம் சிஎன்ஜி கார்களின் சந்தைப் பங்களிப்பு என்பது 24.67 சதவீதமாகவும், ஹைபிரிட் கார்களின் விற்பனை பங்களிப்பு 8.02 சதவீதமாகவும், எலெக்ட்ரிக் கார்களின் பங்கு என்பது 7.90 சதவீதமாகவும் இருந்தது. இந்த மூன்றையும் சேர்த்தால் 40.59 சதவீதமாக உள்ளது. இதனை பெட்ரோல்/எத்தனால் கார்களின் விற்பனை பங்களிப்பாக இருந்த 41.68 சதவீதத்துடன் ஒப்பிடும்போது வெறும் 1.09 சதவீத புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் உள்ளது.

ஒரு வருடத்திற்கு முன்பு இந்த இடைவெளி 13.21 சதவீத புள்ளிகளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, கிட்டத்தட்ட பெட்ரோல் கார்களுக்கு இணையான சந்தைப் பங்களிப்பை சிஎன்ஜி, எலெக்ட்ரிக் உள்ளிட்ட மாற்று எரிபொருள் கார்கள் பெற்றிருப்பது இந்த தரவுகளின் மூலமாக தெரியவந்துள்ளது.இதனால் இந்திய கார் சந்தையில் வாங்குபவர்களின் விருப்பம் வேகமாக மாறி வருவது தெரிகிறது.
இந்த மாற்றத்திற்கு E20 தொடர்பான கவலைகளும் ஒரு காரணமாக இருக்கலாம் என எஃப்ஏடிஏ அமைப்பு தெரிவித்துள்ளது. E20 பெட்ரோல் பயன்பாடு தொடர்பான சந்தேகங்களால் சில வாடிக்கையாளர்கள் சிஎன்ஜி, ஹைபிரிட் மற்றும் எலெக்ட்ரிக் கார் மாடல்களை தேர்வு செய்வது தெரிய வந்துள்ளது. அதேவேளை, ஜூலை மாதத்தில் பெட்ரோல் கார்களின் விற்பனை சரிவுக்கு E20 மட்டுமே காரணம் என்று கூற முடியாது.

இதற்கிடையில் இந்தியாவின் ஒட்டுமொத்த கார் சந்தை வலுவாகவே உள்ளது. ஜூலை மாதத்தில் 4,16,555 பயணிகள் வாகனங்கள் சில்லறை விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டை விட 19.13 சதவீத வளர்ச்சியாகும். முதல் முறையாக ஜூலை மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 4 லட்சத்தை கடந்துள்ளது.
இதனால் பிரச்சனை கார் வாங்கும் ஆர்வத்தில் இல்லை; எந்த எரிபொருள் காரை வாங்குவது என்பதில்தான் மாற்றம் உருவாகி வருகிறது. குறிப்பாக E20 குறித்து தெளிவான தகவல்கள் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் வரை, இந்த மாற்று எரிபொருள் கார் மாடல்களின் வளர்ச்சி தொடருமா என்பதுதான் அடுத்த சில மாதங்களில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications
