காரின் விலை ஏற்கனவே 8 லட்ச ரூபாய் கூட இல்ல! இதுல 50 ஆயிரத்திற்கு புதுசா சலுகை வேறயா!!
ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் கார் மாடலாக 'கைலாக்' (Kylaq) திகழ்கிறது. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் சப்-4 மீட்டர் எஸ்யூவி (SUV) கார்கள் பிரிவில் முதல் 10 இடங்களில் ஒன்றாகவும் இது இடம்பிடித்துள்ளது. கடந்த 1 வருடத்தில் ஸ்கோடா பல முக்கிய சாதனைகளைப் படைத்துள்ளது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 5 லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ளதாக கடந்த 2025 ஜூலை மாதத்தில் ஸ்கோடா அறிவித்திருந்தது.
அதனை தொடர்ந்து கடந்த ஜனவரி மாத இறுதியில், 50,000 யூனிட்கள் விற்பனை எனும் மைல்கல்லை மிக விரைவாக எட்டிய ஸ்கோடா கார் என்ற பெருமையையும் கைலாக் பெற்றது. இந்த மகத்தான தருணத்தையும், 2024 நவம்பரில் அறிமுகம் செய்யப்பட்ட கைலாக் காரின் முதல் ஆண்டு விழாவையும் கொண்டாடும் விதமாக, ஸ்கோடா நிறுவனம் இந்த எஸ்யூவி கார் மாடலுக்கு சிறப்புச் சலுகைகள் மற்றும் பலன்களை தற்போது அறிவித்துள்ளது.

கைலாக் 50,000 யூனிட்கள் விற்பனையானதை சிறப்பிக்கும் வகையில், வாடிக்கையாளர்களுக்கு ரூ.50,000 வரை சிறப்பு பலன்களை ஸ்கோடா வழங்குகிறது. மேலும், ஒரு வருட ஸ்கோடா பராமரிப்பு தொகுப்பை 50% தள்ளுபடியில் பெறலாம். கைலாக் காரை வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உறுதியான பரிசு ஒன்று காத்திருக்கிறது. இந்தச் சலுகைகள் அனைத்தும் பிப்ரவரி 28 வரை மட்டுமே செல்லுபடியாகும் கால அளவிலான குறுகிய கால சிறப்புச் சலுகையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஸ்கோடாவின் விலை குறைவான கார் மாடலான கைலாக், ரூ.7.59 லட்சம் (ஆரம்ப விலை) முதல் தொடங்குகிறது. இது மாருதி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza), டாடா நெக்ஸான் (Tata Nexon), ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue), கியா சொனெட் (Kia Sonet), மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ (Mahindra XUV 3XO) மற்றும் டொயோட்டா டைசர் (Toyota Taisor) போன்ற கார் மாடல்களுடன் போட்டியிடுகிறது.

வரும் காலங்களில் ஃபோக்ஸ்வேகன் டெரா (Volkswagen Tera) மற்றும் இரண்டாம் தலைமுறை ஹூண்டாய் பேயான் (Hyundai Bayon) உட்பட பல புதிய கார் மாடல்கள் இந்த பிரிவில் நுழையவுள்ளன. ரெனால்ட் நிறுவனமும் இந்திய சந்தைக்காக ஒரு சப்-4 மீட்டர் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
2025 டிசம்பரில், ஸ்கோடா கைலாக் ஆனது இந்தியாவில் அதிகம் விற்பனையான சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்களின் பட்டியலில் 10-வது இடத்தைப் பிடித்தது. அப்போது 3,668 யூனிட்கள் விற்பனையாகி, 3%-க்கும் அதிகமான சந்தைப் பங்கைப் பெற்றது. அதாவது, அந்த மாதத்தில் எஸ்யூவி காரை வாங்கியவர்களில் 33 பேர்களில் ஒருவர் ஸ்கோடா கைலாக் காரை தேர்வு செய்துள்ளார்.

ஃபோக்ஸ்வேகன் டெரா இந்த பிரிவில் நுழையும் பட்சத்தில், இந்த இரண்டும் இணைந்து அதிக சந்தைப் பங்கை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா கூட்டணி நிறுவனத்திற்கு பெற்றுத்தரக்கூடும். 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட கார்களை கொண்ட சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் பிரிவு, இந்தியாவில் ஒட்டுமொத்த எஸ்யூவி கார்கள் விற்பனைக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது.
குறைந்த ஜிஎஸ்டி (GST) விகிதங்களுடன், விற்பனை அதிகரித்து வருவதுடன், எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளும் பிரகாசமாகத் தென்படுகின்றன. இதன் மூலம் பலனடையும் ஸ்கோடா கைலாக் காருக்கு ஆற்றல் அளிப்பது 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 3 சிலிண்டர் என்ஜின் ஆகும். இது 115 பிஎஸ் ஆற்றலையும், 178 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யக்கூடியதாக உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: அதிக போட்டி நிறைந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி கார்கள் பிரிவில் கைலாக் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஆகையால், மலிவான ஸ்கோடா காராக இருப்பினும் மேலும் ரூ.50,000 வரையில் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருப்பது வாடிக்கையாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக சிறந்த டீலாக அமைகிறது. இதனை தொடர்ந்து, இந்த ஆண்டு இறுதிக்குள் கைலாக்கில் தனது ஐரோப்பிய தொழில்நுட்பங்களையும் வழங்கும் திட்டத்தில் ஸ்கோடா உள்ளது.


Click it and Unblock the Notifications









