தொழிற்சாலைக்கு இதுக்கு அப்புறம் ஓய்வே கிடையாது! பலரும் புக் செய்து வைத்துள்ள காருக்கு உற்பத்தி ஆரம்பம்!
ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா பிரைவேட் லிமிடெட் (Skoda Auto Volkswagen India Private Limited), தனது புதிய குஷாக் (Kushaq) கார் உற்பத்தியை புனேவில் உள்ள சாகான் ஆலையில் தொடங்கியதன் மூலம், இந்தியாவில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. புதிய குஷாக் எஸ்யூவி ஆனது 'மேக் இன் இந்தியா, இந்தியாவுக்காகவும் உலகத்திற்காகவும்' என்ற குழுமத்தின் தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் 'இந்தியா 2.0' யுக்தியின் கீழ் 2021இல் உருவாக்கப்பட்ட முதல் காராக குஷாக் திகழ்கிறது. உள்ளூர்மயமாக்கலை அதிகரித்தல், காரை வாங்குவதற்கான செலவுகளைக் குறைத்தல் மற்றும் உற்பத்தியை விரைவுபடுத்தும் முயற்சியாக கொண்டுவரப்பட்ட இந்த யுக்தியின் கீழ் பல ஸ்கோடா, ஃபோக்ஸ்வேகன் கார்கள் இதற்குமுன் வெளிவந்துள்ளன. இந்தியாவின் பல்வேறு சாலை சூழல்கள் மற்றும் பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு புதிய குஷாக் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய தரத்தில் டிரைவிங் அனுபவம், மேம்பட்ட உபகரணங்கள், பயணிகளின் சொகுசு மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் கவர்ச்சிகரமான விலையில் புதிய ஸ்கோடா குஷாக் விற்பனைக்கு வருகிறது. இத்தகைய காரை உற்பத்தி செய்ய துவங்கியிருப்பதை ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பியுஷ் அரோரா அவர்களும், ஸ்கோடா ஆட்டோ இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் அஷிஷ் குப்தா அவர்களும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
முதன்முதலாக 2021இல் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து குஷாக் காரை ஓட்டுவதிலும், தொழிற்நுட்ப வசதிகள் மற்றும் உறுதியான பாதுகாப்புக்காகவும் அதிக வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். இது இந்தியா மற்றும் சர்வதேச சந்தைகளில் குஷாக்கை நம்பகமான தேர்வாக நிலைநிறுத்தியுள்ளது. இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பின் வளர்ச்சிக்கு இந்த எஸ்யூவி கார் முக்கியப் பங்காற்றியுள்ளதுடன், 2025ஆம் ஆண்டில் குழுமத்தின் சாதனை படைத்த 1,17,000 கார்கள் விற்பனையிலும் முக்கியப் பங்களிப்பைக் கொடுத்தது.

புதிய குஷாக் 2026 ஜனவரியில் தனது உலகளாவிய அறிமுகத்தை நிகழ்த்தியது. அதன்படி, இந்தியாவிலும் புதிய குஷாக் காரை பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டு முன்பதிவுகள் துவங்கப்பட்டன. புக் செய்தவர்களுக்கு டெலிவிரிகள் (Deliveries) மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய குஷாக்கிற்கு கிடைத்த அமோக முன்பதிவு, இந்த பிராண்டின் மீதான வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட குஷாக் எஸ்யூவியின் உற்பத்தி புனேவில் உள்ள நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் தொடங்கப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ள வாடிக்கையாளர்கள் புதிய குஷாக் காரை ஆன்லைனில் அல்லது அருகிலுள்ள டீலர்ஷிப்பில் நேரடியாக முன்பதிவு செய்யலாம். புதிய குஷாக்கின் விலை 2026 பிப்ரவரி மாத இறுதியில் அறிவிக்கப்பட உள்ளது.
புதிய குஷாக், கிளாசிக் பிளஸ், சிக்னேச்சர், ஸ்போர்ட்லைன், ப்ரெஸ்டீஜ் மற்றும் மான்டே கார்லோ என ஐந்து வேரியன்ட்களில் கிடைக்கிறது. 2021 ஜூன் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து குஷாக் மாடலுக்கு இது முதல் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேட் (Upgrade) ஆகும். இதில் காரின் வெளிபுறத்தில் அலங்கார மாற்றங்கள், உட்புறத்தில் புதிய அம்சங்களுடன் கூடிய மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.
ஸ்கோடா நிறுவனம், புதிய குஷாக்கிற்கு ஆறு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டி, ஆறு ஆண்டுகள் துருப்பிடிப்பு வாரண்டி மற்றும் மூன்று ஆண்டுகள் பெயிண்ட் வாரண்டி ஆகியவற்றையும் வழங்குகிறது. இந்த எஸ்யூவி தொடர்ந்து ஃபோக்ஸ்வேகன் டைகுன், கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, டாடா சியரா மற்றும் மாருதி சுஸுகி விக்டோரிஸ் போன்ற பல எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக விளங்கி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய மார்க்கெட்டில் ஓரளவிற்கு கவனத்தை ஈர்த்த ஸ்கோடா குஷாக் எஸ்யூவியின் ஒட்டுமொத்த வடிவம் மாறாமல் இருந்தாலும், முற்றிலும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட முன்புறம் மற்றும் பின்புறம் இப்போது கிடைத்துள்ளது. புதிய குஷாக் காரின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளதால், எதிர்பார்த்தப்படி இந்த பிப்ரவரி மாதம் முடிவதற்கு உள்ளாக விலைகள் அறிவிக்கப்பட்டு, வருகிற மார்ச் மாதத்தில் இருந்து டெலிவிரிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








