முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்த எஸ்யூவி.. இந்தக் காருக்கு இவ்வளவு போட்டியா?
7 சீட் ப்ரீமியம் எஸ்யூவியான கோட்டியாக் மாடலை இந்தியாவில் விற்பனை செய்து வரும் ஸ்கோடா, அதன் ஸ்போர்ட்டியான கோடியாக் RS (Kodiaq RS) மாடலையும் இந்தியாவில் வெளியிடவுள்ளது. இந்நிலையில் இந்தப் புதிய ஸ்போர்ட்டியான மாடலுக்கான முன்பதிவு நேற்று தொடங்கப்பட்டது. ஆனால் முன்பதிவு தொடங்கப்பட்டு 6 நிமிடங்களிலேயே இந்தியாவில் ஸ்கோடா விற்பனை செய்யவிருந்த முதல் பேட்ச் கோடியாக் RS கார்கள் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்த கோடியாக் RS மாடலை முழுவதுமாக இறக்குமதி செய்து CBU முறையிலேயே இந்தியாவில் விற்பனை செய்யவுள்ளது ஸ்கோடா. அந்த வகையில் முதற்கட்டமாக 50 யூனிட்டுகளை மட்டுமே இந்தியாவிற்குக் கொண்டு வர முடிவு செய்தது. ஆனால் எதிர்பார்த்ததை விட இந்தக் காருக்கு வாடிக்கையாளர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததைத் தொடர்ந்து சில நிமிடங்களிலேயே முன்பதிவு முடிந்துவிட்டது.

தற்போது முன்பதிவு செய்யப்பட்ட கார்களின் டெலிவரி முடிந்தவுடன், அடுத்தகட்டமாக இந்தியாவிற்கு கொண்டு வரப்படும் கோடியாக் RS யூனிட்டுகளுக்கான முன்பதிவை ஸ்கோடா தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த சில மாதங்களில் இந்த அடுத்தகட்ட முன்பதிவை நாம் ஸ்கோடாவிடமிருந்து எதிர்பார்க்கலாம். அடுத்த மாதம் தான் இந்த ஸ்போர்ட்டியான எஸ்யூவியை இந்தியாவிஸ் ஸ்கோடா வெளியிடவிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாண்டர்டான கோடியாக் எஸ்யூவி மாடலில் இருந்து மேம்பட்ட வசதிகள், ஸ்போர்ட்டியான டிசைன் மேம்பாடுகள் மற்றும் கூடுதல் பவர் மற்றும் டார்க்கை வெளிப்படுத்தும் இன்ஜின் எனப் பல்வேறு வகையிலும் மேம்பட்ட காராகவே இந்த கோடியாக் RS இருக்கும். அதற்கேற்ற வகையில் விலையும் கூடுதலாகவே இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்டாண்டர்டு கோடியாக் மாடலில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 2.0 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜினே புதிய கோடியாக் RS எஸ்யூவியிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஆனால் வேறு ட்யூனிங்கில் பயன்படுத்தியிருக்கிறது ஸ்கோடா. இதனால் ஸ்டாண்டர்டு மாடலை விட 61 hp வரை கூடுதலாக 265 hp பவரையும், 80 Nm அதிகமாக 400 Nm டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறனையும் கொண்டுள்ளது கோடியாக் RS-ன் இன்ஜின்.
இந்த இன்ஜினானது 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பவரானது அனைத்து வீல்களுக்குமே அனுப்பப்படுகிறது. அதாவது ஆல் வீல் டிரைவ் வசதியை இந்த எஸ்யூவி கொண்டுள்ளது. இத்துடன் இந்தக் காரில் டைனமில் சேசிஸ் கண்ட்ரோல் பிளஸ் சஸ்பென்ஷன் சிஸ்டத்தையும் ஸ்கோடா கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பவர்ட்ரெயின் செட்டப்புடன், மணிக்கு 0-100 கிமீ வேகத்தை 6.3 நொடிகளில் எட்டிப் பிடிக்கும் திறனைக் கொண்டுள்ளது கோடியாக் RS ப்ரீமியம் எஸ்யூவி.
இந்தியாவில் விற்பனைக்கு வரும் மிகவும் பாதுகாப்பான கார்களில் ஒன்றாக இந்த கோடியாக் RS-ஐ கூறலாம். 9 ஏர்பேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி கேமரா, முன்பக்க மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள், ஆட்டோ பார்க் அசிஸ்ட், ஆட்டோ டிம்மிங் IRVM, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஹில் டிஸண்டு கண்ட்ரோல் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த எஸ்யூவி.
ஸ்டாண்டர்டு கோடியாக் எஸ்யூவி மாடலின் டாப் எண்டு வேரியன்டானது 46.99 லட்சம் ரூபாய் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை விட அதிகமாக 60 லட்சம் ரூபாயை ஒட்டிய விலையில் புதிய கோடியாக் RS ப்ரீமியம் எஸ்யூவி வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மூன் ஒயிட், ஸ்டீல் கிரே, வெல்வெட் ரெட் மற்றும் மேஜிக் பிளாக் ஆகிய நான்கு தனித்துவமான நிறங்களில் இந்தக் காரை விற்பனைக்குக் கொண்டு வரவிருக்கிறது ஸ்கோடா.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: குறைவான டிமாண்டு இருக்கும் என்று எண்ணியே முதற்கட்டமாக குறைவான எண்ணிக்கையை ஸ்கோடா ஒதுக்கீடு செய்திருக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே சூப்பர்ப் உள்ளிட்ட கார்கள் குறைவான அளவில் கொண்டு வந்தும் தோல்வியடைந்த அனுபவம் ஸ்கோடாவிற்கு இருக்கிறது. ஆனால் எதிர்பார்க்கப்பட்டதை விட வாடிக்கையாளர்களிடம் வரவேற்பு நன்றாகவே இருக்கிறது. எனவே அடுத்தகட்டமாக அதிகளவிலான யூனிட்டுகளை ஸ்கோடா ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications