எஸ்யூவி மோகம் குறைகிறதா? இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் சிறிய கார் விற்பனை... காரணம் என்ன?
கடந்த சில ஆண்டுகளாக இந்திய கார் சந்தையில் எஸ்யூவி மாடல்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கடந்த மாதம் சிறிய கார்களின் விற்பனை கணிசமாக அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, முதல் முறையாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களே இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளனர்.
SIAM வெளியிட்ட விற்பனைத் தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் மொத்தம் 4.10 லட்சம் பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பிடும்போது 29% உயர்வாகும். இந்த வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க அம்சமாக பல ஆண்டுகளாக சரிவை சந்தித்து வந்த சிறிய கார் விற்பனை மீண்டும் வலுவாக வளர்ச்சி கண்டுள்ளது.

கணிசமான விற்பனை வளர்ச்சி
கடந்த சில ஆண்டுகளாக எஸ்யூவி ரக கார்களின் விற்பனை எகிடுதகிடாக உயர்ந்த நிலையில், மீண்டும் சிறிய கார்களின் விற்பனை எழுச்சி பெற்றிருப்பது ஆட்டோமொபைல் துறையினரின் புருவத்தை உயர்த்தி உள்ளது. முதல்முறை கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் எஸ்யூவி பக்கமிருந்து தற்போது சிறிய கார்களின் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளதும் தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த மாதம் சிறிய கார் பிரிவில் 78% வளர்ச்சி பதிவாகியுள்ளது. இது எஸ்யூவி பிரிவின் 29% வளர்ச்சியைவிட மிகவும் அதிகம் என்பதால், ஆட்டோமொபைல் துறையினர் இதை முக்கிய திருப்புமுனையாக பார்க்கின்றனர். மேலும், கடந்த 2026 நிதி ஆண்டின் கார் விற்பனை தரவுகளில், முதல் பாதியில் முதல் முறை கார் வாங்குவோரின் எண்ணிக்கை 42 சதவீதமாக இருந்துள்ளனர். இதே மூன்றாவது காலாண்டில் 48 சதவீதமும், நான்காவது காலாண்டில் 51 சதவீதமுமாக அதிகரித்துள்ளதும் முக்கிய விஷயமாக இருக்கிறது.
பட்ஜெட் கார்களுக்கு மவுசு
கடந்த சில ஆண்டுகளில் எஸ்யூவி மாடல்களின் விலை தொடர்ந்து உயர்ந்துள்ளது. இன்று ஒரு நல்ல காம்பாக்ட் எஸ்யூவி வாங்கவே ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை செலவாகிறது. ஆனால், ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான விலையில் இன்னும் பல சிறிய கார் மாடல்கள் கிடைப்பதால், பட்ஜெட்டை கருத்தில் கொள்ளும் வாடிக்கையாளர்கள் மீண்டும் இந்த பிரிவை நோக்கி திரும்பி வருகின்றனர்.
நகரப் பயன்பாட்டில் சிறிய கார்கள் பொதுவாக அதிக மைலேஜ் வழங்குகின்றன. அதோடு, பராமரிப்பு செலவும் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதால், மாதாந்திர செலவைக் கட்டுப்படுத்த விரும்பும் குடும்பங்களுக்கு இவை பொருளாதார ரீதியாக சிறந்த தேர்வாக உள்ளன.
நகரங்களில் பார்க்கிங் வசதி குறைந்து வருவதும் ஹேட்ச்பேக் கார்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. குறுகலான சாலைகள், நெரிசலான போக்குவரத்து மற்றும் குறைந்த பார்க்கிங் இடங்களில் சிறிய கார்களை இயக்குவதும் நிறுத்துவதும் எளிதாக இருப்பதால், பெருநகரங்களில் வசிப்பவர்கள் மீண்டும் இந்த பிரிவை பரிசீலித்து வருகின்றனர்.
மாருதிக்கு ஜாக்பாட்
இந்த மாற்றத்தின் பலனை அதிகம் பெறும் நிறுவனமாக மாருதி சுஸுகி பார்க்கப்படுகிறது. அந்நிறுவனத்தின் ஆல்டோ K10, செலரியோ, வேகன் ஆர், ஸ்விஃப்ட் போன்ற மாடல்கள் மீண்டும் முதல் கார் வாங்குபவர்களின் பட்டியலில் இடம்பிடித்து வருகின்றன. இதேபோல் டாடா டியாகோ, ஹூண்டாய் கிராண்ட் i10 நியோஸ் போன்ற மாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், இதை வைத்து எஸ்யூவி மோகத்திற்கு முடிவு வந்துவிட்டது என்று கூற முடியாது. எஸ்யூவி மாடல்களின் தேவை இன்னும் வலுவாகவே உள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக சரிவை சந்தித்த சிறிய கார் பிரிவு மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்புவது இந்திய கார் சந்தையில் முக்கியமான மாற்றமாக பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
கடந்த சில ஆண்டுகளாக இந்திய கார் சந்தையை எஸ்யூவிகள் ஆக்கிரமித்திருந்தாலும், தற்போது முதல் முறையாக கார் வாங்குபவர்கள் மீண்டும் பட்ஜெட் ஹேட்ச்பேக் மாடல்களை நோக்கி திரும்பத் தொடங்கியுள்ளனர். குறைந்த விலை, அதிக மைலேஜ், குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவை இந்த மாற்றத்தின் முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த போக்கு தொடர்ந்தால், மாருதி ஆல்டோ, செலரியோ, வேகன் ஆர், டாடா டியாகோ போன்ற மாடல்கள் மீண்டும் விற்பனையில் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. அமெரிக்க- ஈரான் போர் காரணமாக எரிபொருள் விலை உயர்வு, E20 எரிபொருள் குறித்த அச்சம், பருவமழை குறைவு ஆகிய பல சவால்களை தாண்டி கடந்த மாதம் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ளதும் கவனிக்க வேண்டிய விஷயமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications