டாடா பன்ச்சுக்குப் போட்டியாக வெறும் 5 லட்சம் ரூபாய் விலையில் புதிய எஸ்யூவியை வெளியிடுகிறது மாருதி
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாருதியின் தொடக்கநிலை ஹேட்ச்பேக் கார்களை அடித்துக் கொள்ள வேறு எந்த நிறுவனத்திடமும் கார்கள் இல்லை. விற்பனையில் மாருதியின் தொடக்கநிலை ஹேட்ச்பேக்குகளின் அளவை வேறு எந்த நிறுவனத்தாலும் நெருங்க முடியவில்லை. ஆனால் அதனை வெற்றி கொள்ளவும் ஒரு கார் வந்தது. அதற்கு பன்ச் எனப் பெயரிட்டிருந்தது டாடா மோட்டார்ஸ்.
கடந்த ஏழெட்டு ஆண்டுகளில் இந்திய ஆட்டோமொபைல சந்தை கொஞ்சம் கொஞ்சமாக ஹேட்ச்பேக் மற்றும் செடான்களில் இருந்து எஸ்யூவிக்களுக்கு சார்பாக மாறிவிட்டது. இதனை தொடக்கத்திலேயே உணர்ந்த டாடா மோட்டார்ஸ் 2021ம் ஆண்டே யாரும் எதிர்பார்க்காத வகையில் மைக்ரோ எஸ்யூவியான பன்ச்சை வெளியிட்டது. குறைவான விலையில் எஸ்யூவி ஒரு எஸ்யூவி கார் என்பது தற்போதைய இந்திய வாடிக்கையாளர்களுக்கு இலவச லட்டு கொடுக்கப்பட்டதைப் போல இருக்கவே, உடனே பன்ச்சை வாங்கிக் குவிக்கத் தொடங்கி விட்டனர்.

பன்ச் அதிகம் விற்பனையாவது மட்டுமின்றி, டாடாவின் பிராண்டு வேல்யூவையும் உயர்த்தி வருகிறது. கடந்த ஜூன் மாதம் டாடாவின் பன்ச் மற்றும் நெக்ஸான் ஆகிய இரண்டு எஸ்யூவிக்களும் மாருதியின் ஹேட்ச்பேக்குகளை பின்தள்ளி இந்தியாவின் அதிகம் விற்பனை செய்யப்படும் கார்களாக மாறியிருக்கின்றன. இதில் பன்ச் காருக்குப் போட்டியாக இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதியிடம் ஒரு மைக்ரோ எஸ்யூவி இல்லை.
அதற்குப் போட்டியாகத் தான் இந்தப் புதிய காரை வெளியிடத் திட்டமிட்டு வருகிறது மாருதி. நாம் பேசிக் கொண்டிருப்பது சுஸூகியின் ஹஸ்லர் (Hustler) மைக்ரோ எஸ்யூவியைப் பற்றித் தான். கடந்த சில ஆண்டுகளாகவே இந்தக் குட்டி எஸ்யூவி காரை இந்திய சந்தைககுக் கொண்டு வருவதில் தீவிரமாக இருக்கிறது மாருதி. இந்தக் காரின் சோதனையை ஏற்கனவே அந்நிறுவனம் இந்தியாவில் தொடங்கியும் விட்டது.

ஹஸ்லர் கெய் கார் (Kei Car) வகையைச் சேர்ந்தது. ஜப்பானில் வழக்கமான அளவுடைய கார்களுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும் இடையிலான வாகனமாக இந்த கெய் கார்கள் பார்க்கப்படுகின்றன. கார்களை விட விலை குறைவானதாக, செலவு குறைந்ததாக, விதிமுறைகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டவையாக கெய் கார்கள் இருக்கும்.
ஜப்பானிய கெய் கார்களை மாருதி பிராண்டின் கீழ் சுஸூகி இந்தியாவிற்குக் கொண்டு வருவது புதிதல்ல. இ்நதியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் ஆல்டோ, வேகன் ஆர் ஆகியவை எல்லாம் ஜப்பானில் கெய் கார் பிரிவின் கீழ் விற்பனை செய்யப்பட்டு வருபவை தான். அதனை இந்திய சந்தைக்கு ஏற்ற வகையில் பெரிய இன்ஜின் மற்றும் கூடுதல் வசதிகளுடன் மாருதி வெளியிட்டு விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில் புதிய மைக்ரோ எஸ்யூவியாக ஜப்பானில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஹஸ்லரை அறிமுகப்படுத்தவிருக்கிறது மாருதி சுஸூகி. எஸ்யூவி மயமாக்கப்பட்ட வேகன் ஆரைப் போலவே டால் பாய் டிசைனைக் கொண்டுள்ளது இந்த ஹஸ்டர். டாடா பன்ச்சுக்கு சரியான போட்டியாகவும் இது இருக்கும்.
ஜப்பானில் விற்பனை செய்யப்படும் ஹஸ்டர் மாடலானது அளவில் ஆல்டோவை விட சிறியது. 3,395 மிமீ நீளம், 1,475 மிமீ அகலம் மற்றும் 1,680 மிமீ உயரத்தை மட்டுமே கொண்டிருக்கும். உயரத்தை விட பன்ச் மற்ற இரண்டு அளவுகளிலுமே பெரிது தான். எனவே அதற்கு இணையாக ஹஸ்லரை மாருதி மாற்றி வடிவமைத்து சற்று பெரிதாக்கும் எனத் தெரிகிறது. ஆல்டோவிலும் இதே போல அளவை கொஞ்சம் அந்நிறுவனம் பெரிதாக்கியே விற்பனை செய்து வருவகிறது.
ஜப்பானிய ஹஸ்லரில் 660 சிசி என்ற சிறிய இன்ஜினையே சுஸூகி பயன்படுத்தி வருகிறது. ஆனால் இந்திய ஹஸ்லர் எஸ்யூவியில் பெரிய 1.0 லிட்டர் அல்லது 1.2 லிட்டர் இன்ஜின் தேர்வுகளையே மாருதி பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 1.2 லிட்டர், 3 சிலிண்டர், NA பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர், 4 சிலிண்டர், NA பெட்ரோல் ஆகிய இரண்டு தேர்வுகளை அந்நிறுவனம் புதிய எஸ்யூவியில் பயன்படுத்தலாம்.
இந்த இரண்டு இன்ஜின் தேர்வுகளே இக்னிஸ் ஹேட்ச்பேக் காரில் மாருதி பயன்படுத்தி வந்தது. இக்னிஸுக்கு இணையான ஒரு எஸ்யூவியாக இந்த ஹஸ்லர் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்த இன்ஜின் தேர்வுகளின் பயன்பாடும் எதிர்பார்க்கப்படுகிறது. ப்ரீமியம் ஹேட்ச்பேக்கான ஸ்விஃப்டில் கொடுக்கப்பட்டு வரும் சிறப்பம்சங்கள் மற்றும் வசதிகளை ஹஸ்லரில் நாம் எதிர்பார்க்கலாம்.
பன்ச்சுக்கு போட்டியாக புதிய ஹஸ்லர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு இணையாகவே 5 லட்சம் முதல் 6 லட்சம் ரூபாய்க்குள்ளான விலையில் இந்தப் புதிய மைக்ரோ எஸ்யூவியின் விலை நிர்ணயம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிறப்பான மைலேஜ் கொடுக்கக்கூடிய ஒரு காராக புதிய ஹஸ்லர் இருக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தொடக்கநிலை ஹேட்ச்பேக்குகளின் விற்பனை அளவு ஓகேவாக இருந்த வரை மைக்ரோ எஸ்யூவியைப் பற்றி மாருதி சிந்திக்கவில்லை. 2024ல் பன்ச் அதிகம் விற்பனையாகத் தொடங்கியதில் இருந்தே ஒரு மைக்ரோ எஸ்யூவியை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் மாருதிக்கு வந்துவிட்டது. விரைவிலேயே இந்தப் புதிய காரின் வெளியீட்டை இந்தியாவில் நாம் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications