டிராக்டர் கம்பெனி தோனியை விட்டு போற மாதிரி தெரியல! கிரிக்கெட் ஆடாமலே கோடிகளில் கல்லா கட்டுறாரு!
மஹிந்திரா (Mahindra) குழுமத்தின் ஸ்வராஜ் டிராக்டர்கள் (Swaraj Tractors) நிறுவனம், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி (M.S Dhoni) உடனான தனது நீண்டகால கூட்டணியைப் புதுப்பித்துள்ளது. பல ஆண்டுகளாக நீடித்துவரும் இந்த கூட்டணி மீண்டும் புதுப்பிக்கப்பட்டு இருப்பது, ஸ்வராஜ் பிராண்டின் புதிய வியூகமாக அமைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இங்கே இந்த தொகுப்பில் காணலாம்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் தோனி ஆட்டோமொபைல் வாகனங்கள் மீது அளவுக்கடந்த ஆர்வம் கொண்டவர் என்பதை நான் கூற வேண்டியதில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு வீடு முழுக்க கார் & பைக்குகளாக தோனி நிரப்பி வைத்துள்ள விஷயம் உங்கள் அனைவரும் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். குறிப்பாக, மோட்டார்சைக்கிள்களில் தோனி பொது வெளியில் காட்சி தந்துள்ளதை பலமுறை பார்த்துள்ளோம்.

கிரிக்கெட், கார் & பைக்குகளுக்கு அடுத்து எம்.எஸ் தோனிக்கு பிடித்தமான விஷயம் என்னவென்றால், விவசாயம் பார்ப்பது ஆகும். ஜார்க்கண்ட் மாநிலத்தில் பெரிய பரப்பிலான நிலத்தில் ஸ்டாபெர்ரி உள்பட பல பொருட்களை விளைவித்துவரும் எம்.எஸ் தோனி, தனது சொந்த விவசாயப் பணிகளுக்கு ஸ்வராஜ் டிராக்டரைத் தேர்வு செய்தது, இந்த உறவுக்கு ஆரம்ப அடித்தளமாக அமைந்தது.
இது விவசாய சமூகத்துடன் ஸ்வராஜ் பிராண்டின் பிணைப்பை ஆழப்படுத்தியது. தோனியின் யதார்த்தமான, நம்பகமான ஆளுமை, இந்திய விவசாயிகளுக்கு சக்திவாய்ந்த, நம்பிக்கையான ஸ்வராஜ் பிராண்டை தெளிவாக காட்டியது மட்டுமின்றி, வாடிக்கையாளர்களையும் ஈர்த்தது. ஸ்வாராஜ்- தோனி இடையேயான கூட்டணி புதுப்பிக்கப்பட்டதன் ஒரு பகுதியாக, ஸ்வராஜின் வரவிருக்கும் விளம்பரப் பிரச்சாரங்களில் தோனி தோன்றுவார்.

இந்திய விவசாயிகளின் தேவைகளுக்கான பிராண்டின் அடுத்த பெரிய தயாரிப்புகளின் அறிமுகத்தில் இவர் முக்கியப் பங்கு வகிப்பார். இந்தக் கூட்டணியின் அடுத்த கட்டமாக, 'பரோசா' (Bharosa) என்கிற புதிய பிரச்சாரத்தை ஸ்வராஜ் தொடங்கியுள்ளது. இணையற்ற வலிமை, நம்பகத்தன்மை, உறுதிப்பாடு ஆகிய பொதுவான மதிப்புகளை இந்தப் பிரச்சாரம் கொண்டாடுகிறது.
புதிய டிஜிட்டல் வீடியோ பிரச்சாரம் (DVC) மூலம், விவசாயிகளுடனான பிணைப்பை ஸ்வராஜ் வலுப்படுத்தி, அவர்களின் வளர்ச்சிப் பயணத்தில் நம்பகமான உறுதுணையாகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இலக்கு கொண்டுள்ளது. மஹிந்திரா குழுமத்தின் பிரிவான ஸ்வராஜ் டிராக்டர்கள், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டிராக்டர் பிராண்டாகும்.
1974ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, "விவசாயிகளால், விவசாயிகளுக்காக" என்கிற தத்துவத்தில் இயங்குகிறது. ஸ்வராஜ், 11.2 கிலோவாட் (15 HP) முதல் 49.2 கிலோவாட் (65 HP) வரையிலான டிராக்டர்கள், விவசாய இயந்திரங்கள், அறுவடை இயந்திரங்களை உற்பத்தி செய்து, விரிவான விவசாய தீர்வுகளை வழங்குகிறது.
1945ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட மஹிந்திரா குழுமம், 100க்கும் மேற்பட்ட நாடுகளில் 324,000 ஊழியர்களைக் கொண்ட பன்னாட்டு நிறுவனமாகும். இந்தியாவில் பண்ணை உபகரணங்கள், பயன்பாட்டு வாகனங்கள், தகவல் தொழில்நுட்பம், நிதிச் சேவைகளில் முன்னணியில் இருப்பதுடன், உலகிலேயே மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தியாளராகவும் திகழ்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விவசாயம், ஏற்றுமதி & இறக்குமதி, ரியல் எஸ்டேட் துறைகளிலும் பங்களிப்பைக் கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி உடனான கூட்டணி புதுப்பிக்கப்பட்டு இருப்பது, ஸ்வராஜ் டிராக்டர்கள் நிறுவனத்தின் புதிய முயற்சிகளுக்கு உத்வேகம் அளிப்பதாக இருக்கும். சந்தையில் ஸ்வராஜ் பிராண்டின் வரவேற்பை அதிகரிக்கவும், நவீன கண்ணோட்டத்தையும் ஆற்றலையும் வெளிப்படுத்தவும் தோனியின் பங்கு முக்கியம். இருப்பினும், இன்றைய கால இளம் கிரிக்கெட் வீரர் உடன் கூட்டணியை ஏற்படுத்தாமல், தோனி உடனான கூட்டணியை மேலும் நீட்டித்து இருப்பது, ஸ்வாராஜ்-தோனி இடையேயான பிணைப்பை காட்டுகிறது.


Click it and Unblock the Notifications








